Monday, December 29, 2014

15.Thai Mann

    விஜயனுக்கு இந்த வண்டிக்காரன் முருகன் போக்கும்,தன் சகோதரியின்

மௌனமும் பெரும் புதிராக இருந்தன.இவர்களிடமிருந்து எந்த பதிலும்

வராது என்று நிச்சயித்துக் கொண்ட,பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய்

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.பிறகு பக்கவாட்டில் திரும்பி,

 தன்னை சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தான்.


   கிராமங்கள்  எல்லாம் ஒரு சாசுவதமான, அமைதியான, ஆரவாரமில்லாமல்,

மனதையும்,உடலையும் ஒருச்சேர சாந்தப் படுத்தும் தென்றலின் இதம்

போன்று நம்மை பல விதங்களிலும் பரவசப்படுத்துபவை.அதன் அழகை

பார்க்க ,ரசிக்க  ஆயிரம் கண்களோடு ஆயிரம் மனங்களும் வேண்டும்.அதுவும்

எவ்வித சலனங்களுமற்ற மனங்கள் என்றால்,பாரதி இயற்கையில் கண்ட

இறைவனை நாமும் அவனைப் போல மிகத் தெளிவாக உணரலாம்.அந்த

பரம்பொருளின் சித்து விளையாட்டுக்களை நமது ஐம்புலன்களும் உணரும்

போது " நான் " என்ற மமதை நம்முள் காணாமல் போகும் விந்தை  நமக்குப்

புரியும். மனம் ஒரு இனம் புரியா ஆழ்கடலில் அமைதியாக பயணம் செய்யும்.

அது ஒரு இனிமையான அனுபவம்.நம்மை அறியாமல் நம் கரம்,சிரம் எல்லாம்

இறைவன் புறம் குவியும்.


    விஜயனும் இதற்கு விதிவிலக்கல்லவே! அவன் தன்னை மறந்து,தான்

பயணம் செய்யும் திசையை மறந்து தன்னைச் சுற்றிலும் உள்ள இயற்கை

அழகில் மயங்கி,அதில் ஒன்றிப் போனான்.வண்டி தாலாட்டாய் போய்க்

கொண்டிருந்தது.வழியில்,அக்கம் பக்கத்து கிராம மக்கள், வயல் வேலை

முடிந்து சிறு சிறுக் குழுக்களாக வந்துக் கொண்டிருந்தார்கள.பலர்,தங்களுடன்

ஒரே வேலையாக ஆடு,மாடுகளையும் பற்றிக் கொண்டு வந்தார்கள்.வருகிற

வண்டி, அவர்களுக்கு எல்லாம் பழக்கமானதால்,நின்று விசாரித்து விட்டு

போனார்கள்.விஜயனை மிகவும் விசேஷமாக விசாரித்தார்கள்.அவர்களது

விசாரிப்பில்உண்மையான அன்பு கலந்த  எதார்த்தமே மேலோங்கி இருந்தது.

அவர்களது அப்பழுக்கற்ற விசாரிப்பு, ஒரு இதமான தென்றலாய்,உச்சி முதல்

உள்ளங்கால் வரை வருடிச் சென்றது.


    தமக்கையின் ஊர் வந்ததும்தான் விஜயனுக்கு தன் தமக்கையின்

குழந்தைகளின் நினைவு வந்தது.தன் தமக்கைக்கு மூன்று செல்வங்கள்.

இரண்டு மகன்கள்;ஒரு மகள்.அருமையான குழந்தைகள். தாயுடனும்,

தமக்கையுடனும் செல் போனில் பேசும்போது நிறைய விசாரணைகள்

உண்டு.என்றாலும்,அவர்களுடனோ,இல்லை மாமாவுடனோ ஒரு முறை

கூட பேசினதில்லை.பேசத் தோன்றியதில்லைஅவர்களது அடையாளம்

விஜயனுக்கு நினைவுக்கு வரவேயில்லை.விஜயனுக்கு மிகவும்

விசனமாகப் போனது.இப்போது, மாமாவையும்,குழந்தைகளையும் நேரில்

முகம் பார்த்து பேச இயலாமல்,ஒரு  இனம்புரியாத சங்கடம் வயிற்றைப்

பிசைந்தது.தாய்மாமன் உறவு எவ்வளவு ஒரு மகத்துவமான உறவு.தான்

அந்த அழகான உறவை கௌரவப் படுத்தவில்லை என்ற எண்ணம், ஒரு

ஆழமான வலியைத் தந்தது.


     விஜயன்,தன்னை சுதாரிப்பதற்குள்,தமக்கையின் இல்ல உறவுகள்

எல்லாம்,வண்டியை பற்றிக் கொண்டு அகமும்,முகமும் மலர ஒருவித

வெட்கத்துடன் வ ஒருசேர வரவேற்றனர்.எல்லோருக்கும்,முன்னதாக

மாமா அவனை வெகு கம்பீரமாக வரவேற்று,அணைத்தவாறு,வண்டியில்

இருந்து இறங்க உதவி செய்தார்.கூடவே இறங்கிய தமக்கை,ஒருவித

கலவரத்துடன் சுற்றும்,முற்றும் பார்வையை சுழல விட்டப் பின் ஒரு

ஆசுவாச பெருமூச்சு விட்டப்படி தம்பியை வீட்டுக்குள் அழைத்துச்

சென்றார்.    


 

                                                                                                    தொடரும்...........

Monday, November 24, 2014

14.Thai Mann.

   கடிதம் வந்திருந்தது.மீனாவிற்கு கடிதம் வந்திருந்தது.அதுவும் அவளது தாய்

நாட்டிலிருந்து மீனாவிற்கு கடிதம் வந்திருந்தது.அதுவும் அவளது அன்புக்

கணவனிடமிருந்து வந்திருந்தது.மீனாவின் கையில் அந்த கடிதம் கிடைக்கப்

பெற்றவுடன்,அவளுக்கு ஒரு நிமிடம் அவள் உணர்வு அவளிடம் இல்லை.


   கடிதப் போக்குவரத்து என்பது அடியோடு நின்று விட்டக் காலக் கட்டமிது.

தன் குழந்தைகளுக்கும் கூட இதன் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தாங்களும்,ஒரு பெற்றோராக இதன் அருமையை புரிந்துக் கொள்ளத் தம்

குழந்தைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை.


   மீனாவின் எண்ணங்கள் இப்படி சிறகடித்துக் கொண்டிருந்தபோது அவள்

கையிலிருந்த கடிதம் ஸ்ரீதரால் பறிக்கப்பட்டது.திடுக்கிட்டு திரும்பினாள்

மீனா. " என்னம்மா இது! ஏதோ கடிதம் வந்திருக்கப் போலே இருக்கே!

அதிசயமா இருக்கு.யாரிடமிடருந்து வந்திருக்கு ". அதிசயமாய் கடிதத்தை

திருப்பிப் திருப்பிப் பார்த்தான் ஸ்ரீதர்.


   " ஆமாம்! அப்பாவிடம் இருந்துதான் வந்திருக்கிறது.அதிசயமாத்தான்

இருக்கு.அவர் நம் சொந்த ஊருக்கு போய் இரண்டு மாசமாச்சு.இதுவரைக்கும்

இப்படி கடிதம் எதுவும் வந்ததில்லை.இப்போது கடிதம் வந்திருப்பதைப்

பார்த்தால்,அவரிடம் நம்முடன் பகிர்ந்துக்க நிறைய விஷயம் இருக்கும்

போல.என்னனு பிரிச்சு படி!".மீனா சாவகாசமாக அமர்ந்தாள்.


     ஸ்ரீதர் பெரும் ஆர்வத்தோடு கடிதத்தை பிரித்து உரக்க  படிக்க

ஆரம்பித்தான்.கடிதம்மிகவும்  இயல்பான அன்புடன் அழகாக ஆரம்பிக்கப்

பட்டிருந்தது. " அன்பு மீனா! நான் நம் சொந்த மண்ணில் நமது அன்பான

உறவினர்களுடன் நலமாக இருக்கிறேன்.நலமாக இருக்கிறேன் என்பதை விட

ஒரு தெளிவுடன் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றுக் கூறுவதுதான்

 சாலப் பொருத்தம் என்று நினைக்கிறேன் ".


   இந்த இடத்தில்,தாயும்,மகனும் ஒன்றும் புரிந்துக் கொள்ள இயலாமல்,

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.மேலே படிக்க சொல்லி மீனா

சைகை செய்ய ஸ்ரீதர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான். " இறைவன் அருளால்

நீங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.நாட்காட்டியை

பார்த்தால்,நம் சொந்த மண்ணில் நான் கால் பதித்து இரண்டு மாதங்கள்தான்

ஆகிறது.ஆனால் சொன்னால் உங்களால் நம்ப முடியாது என்று

நினைக்கிறேன்.ஆமாம் மீனா! எனக்கு பல யுகங்கள் ஆனது போல ஒரு

உணர்வு ".


    " இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.ஒன்று

எனது சொந்த மண்ணின் தாக்கம் இங்குள்ள ஒரு பொங்கி எழும் ஜீவன் மூலம்

எனக்குள் ஒரு தொட்டக் குறை விட்டக் குறையாக ஒரு பெரியத் தாக்கத்தை

ஏற்படுத்தி இருக்கும் என உணர்கிறேன்.இன்னொன்று உங்களை எல்லாம்

பிரிந்து வந்த ஏக்கம் மிகவும் வாட்டுகிறது என நினைக்கிறேன்.மீனா! எனது

உதவி இல்லாமல் உனது அன்றாடப் பணிகளில் சிரமம் இருக்கும் என்பது

எனக்குத் தெரியும்.ஆனால், நமது அன்புக் குழந்தைகள் எல்லா விதத்திலும்

உனக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் என்னுள் ஆழமாக

பதிந்திருக்கிறது.அது சரி! உனது இப்போதைய பணியை எப்படி உணர்கிறாய்?

நலமாக இருக்கிறாயா? நமது குழந்தைகள் இருவரும் நலம்தானே?நமது

மாப்பிள்ளை,சம்பந்தி வீட்டாரை நான் மிகவும் விசாரித்ததாக அவர்களுக்கு

தெரியப்படுத்து.அருமையான மனிதர்கள் ".


   மனம் நெகிழ்ந்து போனது மீனாவிற்கு.ஸ்ரீதருக்கு சைகைக்  காட்டி படிப்பதை

நிறுத்த செய்து விட்டு,தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

ஸ்ரீதருக்குக் கூடத் தன் தந்தையின் மாசற்ற அன்பினால் தோய்த்து எழுதப்

பட்ட அந்தக் கடிதம் ,அவரின் இயல்பான,இனிமையான அன்பை தன்னுள்

ஐக்கியமாக்கி விட்ட உணர்வு,அவனை, இதுவரை அறிந்திராத ஒரு புதிய

இதமான உலகிற்கு இட்டுச் சென்றது.அதை முழுவதுமாக உள் வாங்கிக்

கொண்டு,தன் தாயைப் பார்த்தான்.மீனா,மேலே படிக்க சொல்லி தலை

அசைத்தாள்.தொடர்ந்தான் ஸ்ரீதர்.


    " பாரேன் மீனா! இந்த கடிதம் செய்யும் ஜாலத்தை!தொலை பேசியில் பேசும்

போது தோன்றாத பல விஷயங்கள்,கடிதம் எழுத ஆரம்பித்தவுடன் எப்படி

முட்டி மோதிக் கொண்டு வருகின்றனவென்று.இங்கு ஓடியாடும்

குழந்தைகளை எல்லாம் பார்க்கும்போது,எனக்கு நம்ச்  செல்லக்

குழந்தைகளின் ஒவ்வொருப் பருவமும் என்னுள் வந்து என்னை களிப்புறச்

செய்கிறது.அம்மாவுடன் அதைப் பற்றி எல்லாம் பேசிப் பேசி,அம்மா, உங்களை

எல்லாம் பார்த்தே ஆக  வேண்டும் என்று என்னை வாட்டி எடுத்துக்

கொண்டிருக்கிறார்.அக்கா குடும்பத்தினரின் அருமையான அன்பின்

வெளிப்பாட்டினையும்,அக்கா  குடும்பத்தினரும்,நம் அம்மாவும்,அப்பாவும் நம்

ஊரில் சம்பாதித்து வைத்திருக்கும் மரியாதையையும் நீங்கள் நேரில் வந்து

உணர வேண்டும் என்று எனக்குள் ஓர் ஆழமான எண்ணம் இருக்கிறது.

இதற்கு விரைவில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படிஇறைவனிடம் மனதார

வேண்டிக் கொண்டிருக்கிறேன்".


    பின் குறிப்பு; " மீனா! அடுத்த பக்கத்தில் அம்மாவும் உங்கள் எல்லோருக்கும்

கடிதம் எழுதி இருக்கிறார்.நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக பதில் கடிதம்

எழுத வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு என்று நீங்கள் தனியாக எழுதினால்,மிகவும் களிப்படைவார்.

உங்கள் எல்லோருக்கும் உங்கள் உடல் நலத்தில் கவனம் இருக்கட்டும்.

மற்றவை  அடுத்தக் கடிதத்தில்.குறிப்பாக  பொங்கி,பொங்கி எழுந்து, என்னைச்

சித்திரைவதைப் படுத்திக் கொண்டிருக்கும்  அந்த ஜீவனைப் பற்றி அடுத்தக்

கடிதத்தில் விரிவாக எழுதுகிறேன். 

  

                                                                                                  உனது அன்பு

                                                                                                           ஜெய்.
                                                                                                   



 


Sunday, November 16, 2014

13.Thai Mann.

   மாலை  மணி ஐந்து ஆனதும்,விஜயன் தனது சகோதரியுடன்  அவரது

குடும்பத்தினரை சந்திக்க அவரது ஊருக்குக் கிளம்பினான்.அவனுக்கு

ஒரு விஷயம் புரியவில்லை.புரியவில்லை என்றால் புரியவே இல்லை.

அதாவது, ஏன் அக்கா குடும்பத்தார் ஒருவரும்,அவன் வந்து இவ்வளவு

நேரமாகியும்,அவனை சந்திக்க வரவில்லை  என்று அவனுக்குப்

புரியவில்லை.அதாவது புரியவே இல்லை.


   தனது  தாயிடம் காரணம் கேட்டதற்கு," அந்தி சாய்ந்ததும்,அக்காவுடன் நீ

அக்கா வீட்டிற்கு போய் எல்லோரையும் பார்த்துட்டு வாப்பா! உனக்கே

எல்லாம் புரியும்".நீண்ட பெருமூச்சுடன் அவன் தாய் எழுந்திருந்து வெளியே

போனார்.அவர் யாரையோ அழைக்கும் குரல் கேட்டது."முருகா இங்கே வா

சாமி.குதிரைக்கு தீவனம் போட்டு தண்ணி காட்டினையோ!".தன் தாயின்

பரிவான விசாரணையில் இளகிப் போனான் விஜயன்."ஆயிடிச்சு ஆத்தா!".

பரிவான விசாரணைக்கு வந்த பவ்யமான பதில் விஜயனின் மனதைத்

தென்றலாக வருடியது.அந்த பவ்யமான குரலுக்கு சொந்தக்காரனைக்

காண மனம் விழைந்தது.


   "இந்த சாமானை எல்லாம் வண்டியில் ஏத்திட்டு,அக்காவுக்கும்,தம்பிக்கும்

சேர்த்து தைரியத்தையும் ஏத்திட்டு நம்ப மாப்பிள்ளை ஐயா வீட்டுக்கு

போய்ட்டு வரணும்ப்பா! நம்ப வீட்டுக்குப்  பிள்ளையாய் பிறக்க வேண்டியவர்,

மறுப் பிள்ளையாய்,மாப்பிள்ளையாய் நம்பளை  காக்க வந்த சாமி புள்ளை !

நானும் என்னோட குடும்பமும் ஏதோ ஒரு சந்தர்பத்திலே ஏதோ ஒரு

உத்தமமான காரியம் பண்ணியிருக்கோம் போல.அதனாலதானோ

என்னமோ சாமி,தம் புள்ளையையே நம்ப வீட்டிற்கு மாப்பிள்ளையாய்

அனுப்பி வெச்சார் போல!".


    விஜயனுக்கு சுருக்கென்றது.மாமாவிற்கு அவரது பெரிய குடும்பத்தின்

பொறுப்புகளே ஏகத்திற்கு இருக்க,தானும் பொறுப்பில்லாமல்,தன்

 பொறுப்புக்களையும் சேர்த்து அவரின் பொறுப்பில் சேர்த்து விட்டது

என்றைக்கும் இல்லாமல் இன்று பெரிதும் சங்கடப் படுத்தியது.


   மாமாவின் உருவம் கண் முன்னால் வந்து நின்றது.கம்பீரமும்கண்ணியமும்,

எதார்த்தமான பேச்சும்,அவரது  நடை,உடை,பாவனை எல்லாம்.அவரை

ஒரு முறை சந்தித்து விட்டால்,எவருடைய எதிர்மறை எண்ணங்களும்

ஓரங்கட்டிவிடும்.அளவான,அர்த்தமுள்ள பேச்சு.அடுத்தவரது பேச்சும்,

அளவானதாக,அர்த்தமுள்ளதாக அமைய  வைக்கும் சாதுர்யம்.விஜயனுக்கே

அவரை சந்திக்க ஒருவிதமான தயக்கம் அவனுள் உருவாகிக் கொண்டு

இருந்தது.


     இருந்தாலும், சில விஷயங்கள் தவிர்க்க முடியாதவை.தவிர்க்கவும்

கூடாதவை.நேருக்கு நேர் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்

இருப்பவை.எனவே,விஜயன் ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு,

தன்  தாயிடம் விடைப் பெற்றுக் கொண்டு தன் நேசமான தமக்கையுடன்,

அவரது ஊருக்கு புறப்பட்டுச் சென்றான்.ஆனால்  தான்,தன் தமக்கையின்

ஊருக்குசென்று வர உத்தேசித்ததிலிருந்து,தான் தாயின் நடவடிக்கைகளிலோ,

தன் தமக்கையின் நடவடிக்கைகளிலோ ஒரு சுரத்தே இல்லாமலிருப்பதை

விஜயன் கவனித்தான்.அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.


     வண்டியில் ஏறி அமர்ந்ததும்,தன் தமக்கையின் முன்னிலையில்

வண்டியை செலுத்தும் முருகனிடம்," முருகா ! பெரியம்மாவும்,

சின்னம்மாவும் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறார்கள்?உனக்கு ஏதாவது

விஷயம் தெரியுமா?" என்றுக் கேட்டான். வண்டியின் கடிவாளத்தை பிடித்து

அமர்ந்து,குதிரைகளை தட்டிக் கொடுத்து,அவற்றை பயணத்திற்கு தயார்ப்

படுத்திக் கொண்டிருந்த முருகன்,ஒரு நிமிடம் வண்டியின் உள்புறம் திரும்பி

விஜயனின் தமக்கையை பார்த்தான்.அவர் மெளனமாக அமர்ந்திருந்தார்.பின்பு

அவன் விஜயன் பக்கம் திரும்பி,"அங்கே போனபிறகு உங்களுக்கே

புரியுமுங்க ஐயா!" என்றவன்,மறுபடியும் சின்னம்மா பக்கம் திரும்பி,

"போலாங்களா அம்மா!" என்று உத்தரவு வாங்கியபின்,குதிரைகளை

பாந்தமாக தட்டி விட்டான்.


 


                                                                                                      தொடரும்............... 


 









     

Tuesday, September 16, 2014

12.Thai Mann.

   வேப்பமரக் காற்றில்,அதன் சிலுசிலுப்பில் ஆழ்ந்து உறங்கி போன விஜயன்

கண் விழித்து பார்க்கும்போது  மாலை மணி மூன்றாகி விட்டது.சிறிது நேரம்

அப்படியே படுத்துக் கொண்டிருந்தான்.ஒரு நொடி, அவனுக்கு தான் எங்கு

இருக்கிறோம் என்பது பிடிபடவில்லை.பிறகு ஒவ்வொன்றாக பிடிபட்டது.

மனது, ஆழ்ந்த உறக்கத்தின் விளைவாக,இறக்கைக் கட்டி பறக்கும் நிலையில்

இருந்தது.தான் இப்படி உறங்கி பல யுகங்கள் ஆகி இருப்பது போல

விஜயனுக்கு ஒரு உணர்வு.மனது மிகவும் தெளிவாக இருந்தது.


    சுற்றும்,முற்றும் பார்த்தான்.அம்மாவும்,அக்காவும் உள்ளே வேலையாக

இருப்பார்கள் போல.எழுந்து உட்கார்ந்தான்.அவ்வப்போது வந்து,வந்து

எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் இப்போதும் வந்து எட்டிப்

பார்த்தார்கள்.ஆளுக்கு ஒரு பக்கமாக வந்து அமர்ந்து கொண்டார்கள்.

அம்மா,தன முந்தானையால் அவனது முகம் முழுதும் ஒற்றி எடுத்தார்.

அப்பொழுது,தான் சிறு வயதில் உணர்ந்த தன் தாயின் உடல் வாசத்தை

இப்பொழுதும் உணர்ந்தான் விஜயன்.உள்ளம் பொங்கி பொங்கி வழிந்தது.

அவர்கள் இருவரையும் பார்த்து முறுவலித்தான்.அதில் அவனது  சிறு

பிராயத்தின் முறுவலே பிரதிபலித்தது. அவனது ஆழ்ந்த சிறு வயது

எண்ணம் மிக அழகாக அவனது முகத்தில் பிரதிபலித்தது.


   அவனது மென்மையான,தண்மையான, ஆழமான அன்பில் தோய்த்தெடுத்த

முறுவலில்  இழைந்தோடிய  அந்த ஸ்பரிசத்தை,அவனது அம்மா

ஆத்மார்த்தமாகப் பெற்றுக் கொண்டார்.அந்த ஸ்பரிசம் தந்த வெதுவெதுப்பில்

 அவன் தலை வருடி வாஞ்சையுடன் கேட்டார். " சாமி! நல்லா

தூங்கினேயாப்பா? களைப்பெல்லாம் தீர்ந்ததா? ".அக்காவும் அவனருகில்

அமர்ந்து,அவன் முகமுழுவதையும், தன் இரு கைகளால்,இரு பக்கங்களிலும்,

மேலிருந்து கீழாக வருடி எடுத்து நெட்டி முறித்து திருஷ்டிக் கழித்தார்."அம்மா!

தம்பி முகம் பாரேன்.பூர்ண சந்திரன் போல.நல்லாத் தூங்கி,களைப்பை

எல்லாம் களைந்து போட்டிருப்பான் போல".அக்கா ஆனந்தமாக,சன்னமாக

சிரித்தார்.


   " சரி!சரி! தம்பி மிகவும் பசியோடு இருப்பான் போல.நீயும் எவ்வளவு

நேரம்தான் தம்பி எழுந்திருக்கட்டும்னு காத்திட்டிருப்பே!எல்லாத்தையும்

எடுத்து வை தாயி! நான் வந்து இரண்டு பேருக்குமா பரிமாறேன்". என்ற

அம்மாவைத் திரும்பிப் பார்த்த அக்கா " என்னை விடும்மா!தம்பி!அம்மா ஏன்

இன்னும் சாப்பிடலன்னு கேளு!".என்றபடி, பரிகாசமாக சிரித்தார்.


    விஜயன் அயர்ந்து போனான்." என்னக்கா இது! என்னை எழுப்பி இருக்க

வேண்டியதுதானே! இருவரும்,இவ்வளவு நேரமா சாப்பிடாம இருப்பீங்க!

நீங்க சாப்பாடு எடுத்து வைங்க!நான் இதோ முகம் கழுவிட்டு வந்துர்றேன்".

விஜயன் எழுந்து பின்கட்டு போனான்.


    மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.அம்மாவும்,அக்காவும் சேர்ந்து தங்கள்

அன்பை குழைத்து சமைத்த விதவிதமான புலால் உணவு,அமிர்தமாக நாவின் 

ருசி அரும்புகளில் ருசிக்கப்பட்டு , நெஞ்சில் கரைந்து, மனதை நனைத்தது.

" உணவு என்றால் இதுவல்லவோ உணவு. இவ்வளவு ருசியாக இருக்கிறதே!

கிராமத்து மணம்  மாறாமல் அப்படியே இருக்கிறதே!அப்படி என்றால் அன்பும்  

மாறாமல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்". விஜயன் மறுகிப் போனான்.


   பிறகு எல்லா நினைவுகளையும் ஒரு பக்கமாக நிறுத்தி விட்டு,தாயுடனும்,

தமக்கையுடனும் மனம் நிறைந்து அளவளாவிக் கொண்டே,ஒவ்வொரு

பதார்த்தமாக ரசித்து,ருசித்து,உண்டான் விஜயன்.ஒருவருக்கு ஒருவர்

விருந்தளிப்பவர்களாவும்,விருந்தாளியாகவும் மாறி, மாறி  பரிமாறிக்

கொண்டே உணவு உண்டார்கள்.அந்த ருசியான உணவுடன், பல ருசியான 

நினைவுகளையும்,கலந்து,கலந்து உண்டார்கள்.உணவும்,அதனைச் சார்ந்த

நினைவுகளும் தித்தித்தன.ஒவ்வொரு பதார்த்தத்துக்குமான விஜயனது

இயல்பான மனம் நிறைந்த பாராட்டுக்கள், அவனது தாய்,தமக்கையின்

மனதுகளை நிறைத்தன. விஜயன் மனம் நிறைந்து, வயிறு நிறைந்து

உண்டிருக்கிறான் என்ற திருப்தி அவர்களது மனதை நிறைத்தது.


    விஸ்தாரமாக உண்டு முடித்துவிட்டு வெற்றிலை பாக்குப் பெட்டியுடன்

கூடத்தில் வந்து மூவரும் அமர்ந்தார்கள்.விஜயனின் தாய்,தன் குழந்தைகள்

இருவருக்கும்,பாந்தமாக வெற்றிலைகளை முன்னும்,பின்னும் துடைத்து,

அளவாக பாக்கும்,சுண்ணாம்பும் சேர்த்து  தந்துக் கொண்டிருந்தார்.


    ஆனால்,அதே நேரத்தில் அதற்கு அப்பால் ஒரு வீட்டில், சுண்ணாம்பு

காளவாய் ஒன்று தகதகவென கனன்றுக் கொண்டிருந்தது.




                                                                                                         தொடரும்.........  


      


       

Friday, September 12, 2014

11.Thai Mann.

   விஜயன் மனது நிரம்பி வழிந்தது.தன்னை சார்ந்தவர்களும்,தனது ஊரும்

அதே  இனிய மண் வாசனையுடனும், இயல்பான அன்புடனும்  தன்னை

உள்வாங்கிக் கொண்டது மனதை மயிலிறகாக்கியது.அது சிட்டுக் குருவியாகி

நாலாபுறமும் சந்தோஷமாக பறந்து உலாவிக் கொண்டிருந்தது.எந்த

விதமான செயற்கை சத்தங்களுமின்றி,இயற்கையான ஒலிகள் அவனுடைய

சூழ்நிலையை ரம்மியமாக்கின.


     ஆனாலும் ஏதோ ஒன்று அவனை  மிகவும் நெருடிக் கொண்டிருந்தது.

வண்டியிலிருந்து இறங்கின சமயத்திலிருந்து ஊர் அவ்வப்போது இங்கும்

அங்குமாக பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தது.அதில் ஒரு பரபரப்பு

இருந்து கொண்டேயிருந்தது.விஜயனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனால் யாரையும் காரணம் கேட்கத் தோன்றவில்லை.


   வீட்டிற்கு பின்னால் சற்றுத் தள்ளி அமைந்திருந்த பம்பு  செட்டிலிருந்து

நீர், ஆனந்தமாக பக்கத்திலிருந்த பெரியத் தொட்டிக்குள்  விழுந்துக்

கொண்டிருந்தது.சுற்றிலும் பச்சைபசெலேன்றிருக்கும் பெரிய வயல்களுக்கு

நடுவில் இந்த சிறிய அழகான நீர்வீழ்ச்சியாக, இந்த பம்ப் செட் நீரை  வாரி

இறைத்துக் கொண்டிருந்தது.வானுயர்ந்த கட்டிடங்களையே பார்த்து

பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு இந்த வயலும்,இந்த வயல் சார்ந்த

இடங்களும் கண்கொள்ளாக் காட்சிகளாக மனதை குதூகலிக்கச் செய்தது.

விஜயன் சுற்றிலும் பார்த்து இரசித்துக் கொண்டே,அக்கம் பக்கம் வயலில்

இருப்பவர்களிடம் அளவளாவிக்கொண்டே ஆசை ஆசையாகக் குளித்துக்

கொண்டேயிருந்தான்.அவன் குளிக்கும் விதம் பார்த்து,அக்கம் பக்கத்தில்

இருந்தவர்கள், " தம்பி, இன்னும் ஒரு வருடத்திற்கு சேர்த்து குளிக்கும்

போல!". என்று பரிகாசம் செய்தும்,பிரியவே மனமில்லாமல் நீரை விட்டுப்

பிரிந்து வந்தான்.


      விஜயனின் தாயார் ,குளித்து  முடித்து தலைத் துவட்டிக் கொண்டே வரும்

மகனை அதுவும் மனதும், உடலும் ஒன்று சேர அழுக்கு அகற்றி பளீரென

மலர்ந்தபடி, அங்கங்கே நீர் திவலைகள் தங்கள் முத்திரைகளை  பதிக்க, மனம்

நிறைந்த புன்முறுவலுடன் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் அன்பு

 மகனை  மனம் கொள்ளா ஆசையுடன்,வைத்த கண் வாங்காமல் பார்த்துக்

கொண்டேயிருந்தார்.அதை கவனித்த விஜயனின் தமக்கை, " அம்மா!உங்க

பார்வையை திருப்பி அதோ அந்த மலையை பாக்கறது!அது தகர்ந்தாலும்

தகரும்.தம்பியை இப்படி பாக்கறீங்க?இனி ஊரார் கண்களுக்கு ஒரு

திருஷ்டியும்,உங்க கண்களுக்கு ஒரு திருஷ்டியும் என தனித் தனியாக

தம்பிக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டியதுதான் ". என்று தன் தாயை

பரிகாசம் செய்தார்.தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்

கொண்டனர்.உண்மையில் விஜயனின் தமக்கையின் கண்களும்,தன் தாயின்

கண்களுக்கு நிகராக தன் தம்பியின் குளித்து முடித்து வரும் அந்த அழகை

வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தன.


    விஜயன் உண்ண பாயும்  விரிக்கப் பட்டு தலை வாழை இலையும் 

விரிக்கப்பட்டு,அவனுக்கு பிரியமான கிராமத்து பணியாரங்கள் பரிமாறப்பட

வரிசைக் கட்டி நின்றன.தலை வாரி,சலவைத் உடை அணிந்து சாமி கும்பிட்டு

வந்த விஜயனை,தாயும்,தமக்கையும், பாசமும்,பரிவுமாக இல்லை முன்

அமர்த்தினர்.இலை முன் சம்மணமிட்டு அமர விஜயன் மிகவும் சிரமப் பட்டான்.

அதைப் பார்த்த அவனது தமக்கை," அடி ஆத்தி!என்னம்மா இது? தம்பி

சம்மணமிட்டு உட்கார இப்படி சிரமப்படுது?. என்றுக் கேட்டு நிஜமாகவே

ஆச்சரியப் பட்டார்.விஜயன் நெளிவதைப் பார்த்ததும்,அவன் தாய்,"எல்லாம்

பழக்கந்தானே தாயி! அவனோட இடத்திலே கையை மேலே தூக்கி வச்சே

சாப்பிட்டிருப்பான் போல;சரி அதை விடு.நீயும் தம்பி கூட ஒரு இலையை

போட்டு உட்காரு!நான் பரிமாறேன் ".


   
    அந்தத் தாய் தன் குழந்தைகள்  இருவரும் பேரன்,பேத்திகளை பார்த்த

மூத்தோர்கள் என்ற எதார்த்தத்தை ஒரு மூலையில் நிறுத்தினார். அவர்கள்

இருவரையும் பாலகர்களாக்கி,பார்த்துப் பார்த்து பரிமாறினார்.அவர்கள்

இருவரும் ஒருவரை வாஞ்சையுடன், உபசரித்துக்  கொண்டே உண்ணும்

 அழகைப் பார்த்துப் பார்த்து பரவசமானார்.


   
   உண்டு முடித்து முற்றத்தில்  வந்து அமர்ந்தார்கள் மூவரும்.கதை பேசத்

தொடங்கினார்கள்.கதை,கடந்தக் கதை,வந்தக் கதை,போனக் கதை,இருக்கும்

கதை,இருக்காதக்  கதை இன்னும் என்ன எல்லாமோ கதைகள் எல்லாம்

பேசப் பேச கதை தொடர் கதையாகிக் கொண்டிருந்தது. கதைக்கு

இடையிடையே விஜயனின் கொட்டாவிக் கதையும் தொடர ஆரம்பித்தது.

அவனது தாய் அவனை அங்கு இருந்த பெரிய ஊஞ்சலில் படுக்க செய்தார்.

அவனது தமக்கை மெது மெதுவென இருக்கும் ஒரு தலையணையை

எடுத்து வந்து வாஞ்சையுடன் விஜயனின் தலைத் தூக்கி அவன் தலைக்கு

ஏதுவாக வைத்தார்.வெளியில் வேப்ப மரத்து இதமானத் தென்றல்,விஜயனை

அவனது கடந்த கால நினைவுகளுக்கு இட்டுச் சென்றது.போதாக் குறைக்கு

விஜயனின் தாயார்,அவனது தலைமாட்டில் அமர்ந்தபடி,தனது இரு கைகளால்

 விஜயனின் கன்னங்களை வருடியபடி தெம்மாங்கு பாட ஆரம்பித்தார்.

அவனது தமக்கை தாயின் அருகில் அமர்ந்து,ஊஞ்சலை நிதானமாக அசைய

விட்டார். ஒரு பனையோலை விசிறிக் கொண்டு தம்பிக்கு   இதமாக விசிறிக்

கொண்டிருந்தார்.தன் தாயின் பாடலின் இனிமையில் கரைந்த விஜயன்,

தன்னை மறந்து, நித்திரா தேவியின் ராஜ்யத்தின் தற்காலிக பிரஜையாக

மாறிப் போனான்.



    அந்த நேரம்  விஜயனின் தாய் மண்ணில் காலை பதினோரு மணி இருக்கும்.

ஞாயிற்றுக் கிழமை.அவனது ஆழ்ந்த உறக்கத்தை,ஆழ்ந்து  ரசித்தபடியே

அவனது தாயாரும்,தமக்கையும் மற்ற வேலைகளை  கவனிக்க

எழுந்தார்கள்.எழுந்ததும் அவர்களை மறுபடியும் அந்த கலக்கம் பற்றிக்

கொண்டது.அந்தக் கலக்கம் வரும் பாதையை அதாவது வாசற்படியை

ஒரு முறை ஆயாசத்துடன் பார்த்து விட்டு உள்ளறைக்குச் சென்றார்கள்.

அந்த கலக்கம் மெதுவாக பிரளயமாக உருவெடுத்துக் கொண்டு அதன்

இடத்தில், சினத்தின் உச்சியில் அங்கும்,இங்கும் உலாவிக் கொண்டிருந்தது.





                                                                                               தொடரும்..............  

       



             

Monday, September 8, 2014

Manidhan

   அன்றைய தினம் காந்தி ஜெயந்தி.நமது  தேச பிதா மகாத்மா காந்தியின்

மகா  உன்னதமான அந்த நாளை,கடவுளின் குழந்தையான அந்த மாமனிதரின்

பிறந்த நாளை நேசத்துடன் கொண்டாட அவரது தேசமே விடியலுடன் சேர்ந்து

விழித்துக் கொண்டது.ஆனால் அந்த குறிப்பிட்ட கிராமத்தின் அந்த குறிப்பிட்ட

வீடு மட்டும் அந்த குறிப்பிட்ட நாளின் உன்னதத்தை புரியாமல் அல்லது

புரிந்தும் புரியாமல் அல்லது புரிந்துதான் என்ன ஆக போகிறது என்ற

விரக்தியில் எப்பொழுதும் போலவே விடியலை எதிர் கொண்டது.


   சித்தார்த்  நமது தேசத்தின் குடிமகன் மட்டும் அல்ல.அந்த குறிப்பிட்ட

வீட்டின் குடிமகனும் கூட.குடிமகன் என்றால் தன்னை,தன் சூழ்நிலையை

முற்றிலும் மறந்த, துறந்த பெரும் குடிமகன்.அவனது இல்லம் என்றும்

இரண்டு வகையான சூழ்நிலையில்தான் இருக்கும்.காலையில் மயான

அமைதி.மாலையில் மகா கூச்சல்.விதவிதமான கூச்சல்.அவனது

மனைவி இவனுக்கு வாழ்க்கைப்பட வைத்து விட்டாயே என்று தன் விதியை

நொந்து கொள்ளும் கூச்சல்.அவனது தாயார், பெற்ற மனம் பதற கதறி,

நித்தமும்இந்த கொடுமைகளை காண மனதில் சக்தி இல்லாமல்,தன்

வாழ்நாளை வாழும் நாளாக விடாமல் சித்திரவதை செய்யும் மகனை

தெளிவாக்க இறைவனிடம் மன்றாடும் கூச்சல்.இவை எல்லாவற்றையும்

விட கொடுமையிலும் கொடுமையான கூச்சல் அவனது  குழந்தைகள்

இரண்டும்,அவனை கண்டாலே பயந்து போய்  தங்களது   பாட்டியின் மார்பில்

முகம் புதைத்து அலறும் அலறல்.


    அன்று  காந்தி ஜெயந்தி ஆனதால்  சித்தார்த்தின் அலுவலுகதிற்கும்

விடுமுறை.அவனது அனுதினம் குடிக்கும் பானத்திற்கும் கட்டாய

விடுமுறை.இன்றைய தினம் எப்படி பொழுதை கழிப்பது என்று அவனுக்கு

புரியவேயில்லை.வீட்டில் யாரும் அவனுடன் முகம் கொடுத்து பேச தயாராக

இல்லை.குழந்தைகளோ அவன் அருகில் வரவே இல்லை.அவனுக்கு

பரிமாறப்பட்ட காலை உணவை முடித்துக் கொண்டு சட்டையை மாட்டி

கொண்டு வெளியே கிளம்பினான்.


   அவன் கிளம்பி செல்வதை அவனது தாயும்,தாரமும் கவனிப்பதை

அவனால் உணர முடிந்தது.அவர்களது பெருமூச்சு அவனது குற்ற

உணர்வில் குத்திட்டு நின்றது.குடிக்கு முன்னால் அவனது தோற்றம்

 திரை உலகின் ஒரு பிரபலமான நடிகரை எல்லோருக்கும் நினைவூட்டும்.

குடிக்கு பின்னால் சகலமும் பின்னால் போய்  விட்டது.


   நான்கு தெரு தாண்டியும்,இலக்கில்லாமல் நடந்து கொண்டே இருந்தான்.

நிமிர்ந்து நடக்க துணிவு வரவில்லை.கால் தன்னிச்சையாய் ஒரு வீட்டின்

முன் நின்றது.ஏறிட்டு பார்வையை உள்ளே செலுத்தினான்.அது ஆறு

மாதத்திற்கு முன்னால் திடீரென மாரடைப்பில் மறைந்து போன தன் மூத்த

சகோதரனின் உயிர் நண்பன் சந்துருவின் வீடு.குடும்பத்தின் மூத்த பிள்ளை,

தன் தந்தை இல்லை என்ற குறை தன் தாய்க்கும்,தன் உடன் பிறந்தோர்

மற்றும் சுற்றங்களும் தெரியா வண்ணம் தன் தந்தையின் இடத்தில்

இருந்து குடும்பத்தை காத்து வந்த உத்தம பிள்ளை.தந்தை இறந்த சில

வருடங்களுக்கு  பிறகுதான் சித்தார்த்திற்கும் அவனது  இன்னொரு

சகோதரிக்கும் திருமணம் நடந்தது.அதுவும் தந்தையின் இடத்தில்

இருந்த அந்த வீட்டு மூத்தப் பிள்ளையின் பெரு முயற்ச்சியில்.

அதுவும் ஒரே ஆண்டில்.ஊரேஆச்சரியப்பட்டது.மனதார கை கொடுத்தது.


 
சித்தார்த்திற்கு தனது அன்பு சகோதரனின் திடீர் மறைவிற்கு பிறகுதான்

ஒரு தந்தை ஸ்தானத்தின் அருமையும் பெருமையும் புரிந்தது.அந்த

ஸ்தானத்தை தனது சகோதரன் வகுத்தபோதுதான் தனது சகோதரனின்

அருமையும் பெருமையும் புரிந்தது.தனது தந்தையின் இழப்பை கூட அவனால்

தாங்க முடிந்தது.ஆனால் தனது தமையனின் இழப்பு அவனை இன்னும்

உறங்க விடவில்லை.யாரோ தந்த யோசனை,உறக்கம் வர குடிக்கும்

பழக்கத்திற்கு ஆட்பட்டதால்  அது உறக்கதிற்கு பதில் குற்ற உணர்வை

குறையில்லாமல் தந்தது.உடலையும், மனதையும் ஒரு சேர உருக்கியும்

விட்டது.


   சந்துரு வெளியில் வந்து சித்தார்த்தின் தோள் மேல் கை வைத்து உள்ளே

அழைத்து சென்றான்.ஒரு நொடி சித்தார்த் தன் தமையனின் அண்மையை

உணர்ந்தான்.உண்மையான,பவித்ரமான அன்பினால் அந்த அன்பை

உணர்த்தவும் முடியும்.அதை உணரவும் முடியும்.


    சந்துரு இராணு பணியில் இருக்கிறான்.இப்பொழுது விடுமுறையில்

வந்திருக்கிறான் போலும்.சென்ற விடுமுறையின் போதுதான் தன உயிர்

நண்பனின் விதி முடிந்து போனது.நண்பன் குடும்பத்தார்க்கு அவன்

குடும்பமே பெரிய ஆறுதலாக இருந்தது."உன் நண்பனை நான் அழைத்து

போகிறேன்.அவன் குடும்பத்தார்க்கு  ஆறுதலாக இரு". என்று கடவுள்தான்

அவனை அனுப்பி வைத்தார் போலும்.இராணுவத்தில் பணியாற்றிக்

கொண்டிருப்பதாலோ என்னவோ,அத்தனை துக்கத்திலும் தெளிவாக

இருந்தவன் அவன் ஒருவன்தான்.


    உள்ளே அழைத்து சென்று அமர வைத்ததும்,சித்தார்த் பித்து பிடித்தது

போல தாரை தாரையாய் கண்ணீர் வடித்தான்.எல்லோர் கண்களும் கசிய

தொடங்கின.உடனே சந்துருவின் தாயார் சிறிது நீர் கொண்டு வந்து அவனை

பருக செய்து சிறிது ஆசுவாசப்படுத்தினார்.


   சந்துரு அவனருகில் அமர்ந்து தன் தோள் மீது சாய்த்தான்.சாய தோள்

கிடைத்ததும் சித்தார்த்,விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்.சந்துருவின்

குடும்பத்தார்க்கு அவனது வேதனை பெரிய வேதனையாக இருந்தது.சந்துரு

 சித்தார்த்தை நிமிர்ந்து அமர செய்தான்."சித்தார்த்! இந்த இளம் வயதில் உன்

அண்ணனின் அருமை பெருமைகளை புரிந்து கொண்டு அவரது நிரந்தர

பிரிவை எண்ணி நீ வேதனைப் படுவது உண்மையிலேயே பெரிய விஷயம்.

அப்படி என்றால் உன் குடும்ப பொறுப்பை உன் அண்ணனிடமிருந்து நீ

ஏற்றுக் கொள்ள நீ தயாராகி விட்டாய் என்று அர்த்தம்".சித்தார்த் ஒன்றும்

புரியாமல் சந்துருவை ஏறிட்டு பார்த்தான்."நீ ஒன்றை புரிந்து கொள்ள

வேண்டும் சித்தார்த்!நீ உனது பெற்றோருக்கு ஐந்தாவது மகனாய் பிறப்பாய்

என்பது பொய்.ஆனால் ஐந்தாவது மகனாய் பிறந்த சித்தார்த் ஒரு நாள்

இறந்து போவாய் என்பது மெய்.மரணம் என்பது ஒரு இயற்கையான  ஒரு

நிகழ்வு.அதன் வேதனைதனை காலம் சரிபடுத்தும்.ஆனால் நாம் அதிலேயே

உழன்று கொண்டு இருப்பது நாம் நமது பொறுப்பை தட்டி கழிப்பதற்கு சமம்".


    "அதில்லை அண்ணா!குருவி தலை பனங்காயாய் அண்ணாவின்

பொறுப்புக்கள் அதிகமானதால்தான் அந்த சுமையை சுமக்க

இயலாமல்தான்  அண்ணாவிற்கு இந்ததிடீர் மறைவு ஏற்பட்டதோ என்று

எனக்குள் பெரிய  கலக்கம்"


   "சித்தார்த் நீ ஒன்றை மறந்து பேசுகிறாய்.உன் அண்ணா  மட்டுமா தனியாக

சுமந்தார்.உண்மையாக சொல்ல போனால் உன் அன்பான அண்ணி மனதார

தோள்  தரவில்லை எனில் உன் அண்ணனால் உன் அப்பாவின் பெயரையும்

மரியாதையையும் காப்பாற்றி இருக்க முடியாது.அதை காப்பாற்றி அதற்குள்

தன்னை ஐக்கிய படுத்தி செயலாற்ற உனது அண்ணி உறுதுணையாய்

 இருந்ததால்தான், சுற்றத்தாரின் உதவியுடனும் ஊராரின் உதவியுடனும் உன்

அண்ணனால் தன் கடமைகளை சரிவர செய்ய முடிந்தது.உண்மையில் உன்

எண்ணப்படி இருந்தாலும் குருவி தலை பனங்காயாய் இன்னமும் உன்

அண்ணிதான் சுமந்து கொண்டிருக்கிறார்.நமது எல்லோரின் ஒரே கடமை

அவருக்கு பக்க பலமாய் இருப்பதுதான்.தலைச்சன் சம்சாரம் தாய்க்கு சமம்

என்று சொல்வார்கள்.அதற்கு மிக சரியான உதாரணம்  சாமி மகளான உனது

அண்ணிதான்.அவர் இனி தனது பிறந்த வீட்டில் இருந்தது போதும்.நான்

இப்பொழுது உனது வீட்டிற்குதான் கிளம்பி கொண்டிருந்தேன்.உன்

தாயுடனும் உனது மனைவியுடனும் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்".



    "அதற்கு முன் ஒரு வார்த்தை சித்தார்த்!.நான் உன்னைப் பற்றி

கேள்விபடுவதெல்லாம்எதுவும் சரியாக இல்லை.உன்னை சரியாக்கும்

எண்ணம் உனக்கு நிஜமாகவே இருக்கிறதா?".சித்தார்த் கூனி குறுகிப்

போனான்.சந்துருவின் கையைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான்.


                                       

                                                    தெளிவுப் பெற்றான்.


   "


             

 


                      

 



    

10.Thai Mann.

   விஜயன் பயணித்த வண்டி,விஜயனின் ஊர் வந்து சேர்ந்தது.வண்டியின்

சத்தம் கேட்டதும், என்னஆச்சரியம்! விஜயனின் சொந்தங்களுடன்

அவனது ஊரே வண்டியின்எதிரே வந்து கூடி நின்றது. தனது சொந்த மண்ணின்

இயல்பான,ஆழமான,ஆத்மார்த்தமான,ஆரவாரமான  வரவேற்பில் விஜயன்

உருகிபோனான்.பிரவாகமாக பொங்கி நீர்வீழ்ச்சியாக உருமாறிக்

கொண்டிருந்த அவனுடைய கண்கள்  சொந்தங்களுடன் கரைந்து

உருகிக் கொண்டிருந்தன.



    தான்  மனதளவிலும்,உடலளவிலும் தன் சொந்த மண்ணை மறந்து,அதன்

உணர்வுகளை மறந்து,மரத்துப் போய் எவ்வளவு தூரம் விலகி இருந்த

போதிலும் நீ என்றும் எங்களை சேர்ந்தவன்; உனக்கு என்றும்,எதற்கும்

நாங்கள் பக்கபலமாக இருப்போம்  என்று குறிப்பால் உணர்த்திக்

கொண்டிருக்கும் தன்  சொந்த மண்ணின் இந்த சலனமில்லாத அன்பிற்கு தான்

தகுதியானவன்தான? என்று விஜயன் மறுகிப் போனான்.இதையெல்லாம்

கூடவே நின்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த வண்டி ஓட்டுனர்

கூட கண் கலங்கி நின்றார்.



    இதற்குள் விஜயனின் தாய் அவனது சகோதரி கைப்பற்றி விரைந்து

வந்து விஜயனை நெஞ்சார அணைத்து உச்சி முகர்ந்தார்.அவனது

சகோதரியோ, தன் சக உதிரனின் ஒரு கரம் பற்றி அதை தன் நெஞ்சோடு

சேர்த்து கொண்டார்.அவரது பிரவாகமான  அன்பு,அவர்  பற்றியிருந்த

விஜயனின் ஒரு கை மூலம் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

பரபரவெனபரவிக் கொண்டிருந்தது.சிலிர்த்துப் போனான் விஜயன்.



   தன் தாயையும்,தன் தமக்கையையும் அவர்கள் கைகள் பற்றி தன் கண்களில்

நீர் மல்கி மங்கலாகத் தெரியும் அவர்களது உருவங்களை  மாறி மாறி உற்று

உற்றுப்    பார்த்துக்கொண்டே  இருந்தான் விஜயன்.தாயும்,தமக்கையும்

திடகாத்திரமாக  இருந்தது மனதிற்கு மிகவும் தெம்பை தந்தது.கூடவே 

அவர்களது வயதும்,ஆரோக்கியமும் ஒன்றை ஒன்று ஆரோக்கியமாக

பராமரித்து வரும் பாங்கு அவர்களது தோற்றத்தில் மிளிர்ந்தது.அவர்களது

ஆரோக்கியமான,கம்பீரமான தோற்றம் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டான்

விஜயன்.



    அவனது தாயோ,அவனை கண்ட அந்த ஒருநிமிடத்தில் விஜயனின் பால

காண்டம் முதல் இப்போது நிலைக்கொண்டிருக்கும் ஓய்வு  காண்டம் வரை

மானசீகமான இனிய பயணம் மேற்கொண்டு தன் நிலை வந்து சேர்ந்தார்.

விஜயனின்  சகோதரிதான் பற்றியிருந்த அவன் கை அசைத்து  அவனை

அவன்  நிலைக்கு கொண்டுவந்து சேர்த்தார்.


    அந்த வண்டி ஓட்டுனர்' விஜயனின் உடமைகளை நிதானமாக

ஒவ்வொன்றாக வண்டியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார்.அவர் தன்

பணியில் இருக்கும்போதே சில இளவட்டங்கள் அவைகளை  துரிதமாக

விஜயனின் இல்லம் கொண்டு சேர்த்தன.அவர்களது ஒன்றிய

மனப்பான்மையை கண்டு அசந்து போனான் விஜயன்.


    எல்லா சேம நலன் பரிமாற்றங்கள் முடிந்தபின் விஜயன் குடும்பத்தினர்

வீடு வரை கொண்டு வந்து  சேர்க்கப்பட்டனர்.பிறகு விஜயன் சிரம

பரிகாரங்களுக்காக சோப்பு,துண்டுடன் கொல்லைப் புறத்திற்கு அனுப்பப்

பட்டான்.பிறகு தாயும்,மகளுமாக விஜயனுக்குப் பிடித்தமான பணியாரங்கள்

தயாரிக்க ஆரம்பித்தனர்.அதற்கான மாவை பிசைந்து கொண்டிருந்த போது

அவர்களுக்கு மிகவும் பரிச்சியமான, படு  நிச்சயமான அந்த அச்சம் அவர்களை

பிசைந்தெடுத்துக் கொண்டிருந்து.




                                                                                                  தொடரும்.........



 


   

Wednesday, August 20, 2014

9.Thai Mann.

   விஜயனுக்கு தனது சொந்த மண்ணை நெருங்க நெருங்க அந்த மண்

சம்பந்தப் பட்ட எல்லா விஷயங்களும் அலைஅலையாய் வந்து மனதில்

மோதி மோதி சென்றன.ஒரு பக்கம் இந்த இருபது வருடங்களாக சொந்த

மண்ணை மிதிக்காமல் அதாவது மதிக்காமல்  இருந்த விளைவால், உற்பத்தி

ஆகிக் கொண்டேயிருந்த அந்தக் குற்ற உணர்வு அவனை தகித்துக்

கொண்டிருந்தது. இன்னொரு புறம் தன் அன்புத் தாயையும்,தன்  அன்பு

சகோதரியையும் இதுவரை கடிதங்கள் மூலம் பார்த்தும்,பேசியும் வந்துக்

கொண்டிருந்த கனவுத் தருணங்கள் இப்போது நிஜத் தருணங்களாக மாறும்

நெகிழ்வு நெருங்கிக் கொண்டிருப்பதை எண்ணும்போது பாசமும்,நேசமும்

மாறி ,மாறி அவன் நெஞ்சில் மோதி அவனைத் திக்குமுக்காடச் செய்தன.


   விஜயன் தான் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் சரிபார்த்து விட்டு

விமான நிலையத்திற்கு வெளியே வந்தான்.மிகவும் அதிகமான

பொருள்கள்தான்.விமானத்தில் அனுமதிக்கப்பட்ட எடை வரை பலதரப்பட்ட

பொருள்கள் அவன் முன்னால் பரந்து விரிந்து கிடந்தன.பலதரப்பட்ட

சொந்தங்களுக்கும்  தன் பாசத்தையும், நேசத்தையும் , மரியாதையையும்

 உணர்த்தும் விதமாக அவரவர் இயல்புக்கு ஏற்ப அளிக்கப்பட வேண்டிய

பொருட்கள்.பெரிய வண்டியாகவே பார்த்தான். 


   விஜயன் பயணம் செய்த அந்த வண்டியின் ஓட்டுனர் விஜயனின் தாய் மொழி

பேசுபவர்தான்.முதலில் மிகவும் உற்சாகமாக பேச்சைத் துவக்கினார்.ஆனால்

விஜயனின் உற்சாகமற்ற பதிலைக் கேட்டதும்,அவர் தன் விசாரணையை

நிறுத்திக் கொண்டு,வண்டியில் இசைத்துக் கொண்டிருந்த இசையின் ஒலி

அளவை சற்று அதிகப்படுத்திவிட்டு,சாலையில் கவனம் செலுத்தினார்.



    உண்மையில் அந்த ஓட்டுனரின் பாடல் தொகுப்பு மிகவும் சிறப்பானதாக

இருந்தது.பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.ஒவ்வொருப்

பாடலும் பயணம் செய்பவரை அவருக்கு அறிமுகமான ஏதாவது  ஒரு

பிராயத்திற்கோ அல்லது அவருக்கு அறிமுகமான ஏதாவது ஒரு

சூழ்நிலையின் பின்னணிக்கோ சென்று சேர்த்து,சேர்த்து ,மீட்டு,மீட்டு

வந்தது.



   உண்மையில்,உற்சாகமான மன நிலையில் பயணம் செய்பவர்கள்

அந்தப் பாடல்களின் தொகுப்பை மனமார இரசித்திருப்பார்கள்.அந்த இனியப்

பாடல்களின் தொகுப்புக்கு உரிமையாளரான அந்த வண்டி ஓட்டுனரையும்

வெகுவாக பாராட்டி இருப்பார்கள்.இன்னும் சொல்லப்போனால் பயணம்

செய்பவரின் பிராயத்திற்கு ஏற்ப நேர்த்தியான நல்லப் பாடல்களை இசைக்கச்

செய்வதில் அந்த ஓட்டுனருக்கு ஒரு சாதுரியம் இருப்பதாகத் தோன்றியது.

ஆனால்,இதை எல்லாம் உள்வாங்கும் மனநிலையில் விஜயன் இல்லை.

அதாவது அவன் மனம் அவனிடத்தில் இல்லை.அதுதான் உண்மை.




   அது மட்டுமின்றி விஜயனுக்கு  இன்னொரு முக்கியமான விஷயமும்

புரியவில்லை.புரியவில்லை  என்பதை விட பெரும் புதிராக வேறு இருந்தது.

அவனை அயல் நாட்டில் இருக்க விடாமல் இப்படி இரும்புப் பிடியாய்

இழுத்துக் கொண்டு வருவது எது என்பதை அவனால் அனுமானிக்கவே

முடியவில்லை." ஒருவேளை அம்மாவின் இறுதிக் காலம் நெருங்கி

விட்டதோ! ".அந்த எண்ணம் அவனைத் தூக்கி வாரிப் போட்டது.பெரும்

திகிலடைந்துப்  போனான்.


   விஜயனை அவ்வப்போது கவனித்துக் கொண்டு வந்த அந்த நடு வயது

வண்டி ஓட்டுனருக்கு,விஜயனின் முகபாவம் மிகவும் கலக்கம் ஏற்படுத்தியது.

அவர், வண்டியின் இசையை முற்றிலும் நிறுத்தினார்.வண்டியின் வேகத்தை

படிப்படியாகக் குறைத்து வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினார்.நன்றாக

விஜயன் பக்கம் திரும்பி,"ஸார்! இன்னும் ஒரு கால் மணி நேரத்தில் ஊர் வந்து

விடும்.ஆனால் உங்களுக்கு ஏதோ உடம்புக்கு முடியலை போலிருக்கு.போற

வழியில் எனக்குத் தெரிந்த டாக்டரிடம் காட்டி விட்டுப் போவோமா!

ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும்,ஒரு டாக்டரின் நம்பர் என்னிடம்

இருக்கிறது.என் வண்டியில் ஏறும் பயணிகளுக்கு  உதவத்தான் இந்த

 ஏற்பாடு .பாவம்!எவ்வளவு தூரத்திலிருந்து என்ன என்ன வேலை விஷயமாக

வருவார்களோ தெரியாது.என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி;நிறைய

பேருக்கு இந்த ஏற்பாடு மிகவும் உதவியாக இருக்கிறது ".என்று மிகவும்

பரிவுடன் பவ்யமாகக் கூறினான்.


   விஜயன் இப்போதுதான் அந்த வண்டியின் ஓட்டுனரைத் தெளிவாகப்

பார்த்தான்.தன் பணியில் ஒரு நிறைவுப் பெறும் ஒரு தெளிந்த முகம்.பார்க்க

விருப்பம் உண்டாகும் முகம்.அந்த முகத்தின் களையில் ஒரு வசீகரம்

இருந்தது.அகம் மலர்ந்தால்தான் இந்த மாதிரி ஒரு முகம் மலரும்.தன்னைக்

காண்போரை  எல்லாம் மலரச் செய்யும்.வியந்தான் விஜயன்.அந்த வியப்பின்

ஊடே," இல்லேப்பா!எனக்கு ஒன்றும் இல்லை.நானே ஒரு டாக்டர்தான்.அயல்

நாட்டிலிருந்து நிரம்ப நாள் கழித்து சொந்த ஊர் பார்க்க வர்றேன்.எனது

அம்மாவையும்,அவரை கவனித்துக் கொண்டிருக்கும் எனது அக்காவையும்

பார்க்கும்போது நிலைத் தடுமாறாமல் இருக்க வேண்டுமே என்ற

கவலைதான். ஆனாலும்,பயணிகளுக்கான உன்னுடைய சமயோசித ஏற்பாடு

மிகவும்  நல்ல ஏற்பாடு. கடவுள் என்றும் உன் நல்ல மனதிற்கு பக்க பலமாய்

இருப்பார்" என்று மனதார வாழ்த்தினான்.


   அந்த வண்டி ஓட்டுனருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி." நிரம்ப சந்தோஷம்

ஸார்!உங்களை மாதிரி பெரியவங்க வாழ்த்து என்னைப் போன்றோரை

இன்னும் நாலு நல்லது செய்ய உற்சாகப் படுத்தும் ஸார்! நான் சந்தோஷப்

பட்ட மாதிரியே உங்க சொந்த ஊரிலேயும் உங்களுக்கு நிறைய

சந்தோஷங்கள் காத்துக்கிட்டிருக்கும் ஸார் !.கவலைப் படாமே உங்க ஊர்

மண்ணிலே  உங்க கால்களை பதிய விடுங்க ஸார்!.இப்போ போலாமா ஸார்!"


    அந்த ஓட்டுனரின்,அந்த ' ஸார்!ஸார்! ' இல் இருந்த பவ்யமும்,அக்கறையும்

விஜயன் மனதை வெகுவாக இலகுவாக்கின.சீராகச் செல்லும் வண்டியைப்

போலவே விஜயனது எண்ணங்களும் சீராயின.அவனது சொந்த ஊரும்

நெருங்கிக் கொண்டிருந்தது.



                                                                                     

 part10                                                                                                     தொடரும்............











 







  

Monday, August 18, 2014

8.Thai Mann.

   ஒன்றை நாம் புரிந்துக் கொண்டால் நல்லது நடக்க வாய்ப்புகள்

அதிகம்.அதாவது, உலகத்திற்கான பொதுவான நியாயத்திற்கு உட்பட்டு நாம்

செயல்படுவோமானால்,ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நம் மனதுடன்

கலந்து ஆலோசிப்போம்.நம் மனதின் உன்னத குணமே உள்ளதை

உள்ளபடியே உணர்த்தும் குணம்தான்.


   நம் மனம்,ஒரு செயல் நடைமுறைப்படுத்தபடுவதற்கு முன்பே அதன் சாதக,

பாதகங்களை ஆராயும்.நமக்கும்,நம் மனதிற்கும் இடையே நிலவும்

ஆழ்ந்த,ஆரோக்கியமான  நட்பைப் பொறுத்து அதன் கணிப்பின் சதவீதம்

உயரும்.அந்த கணிப்பின்படி செயல்பட நமக்கு "உடுக்கை இழந்தவனுக்கு

கைப் போல " என்ற வள்ளுவன் வாக்குப்படி நமக்கு உற்ற நண்பனாய்

உண்மையாய்,உறுதியாய் நம்மோடு இணைந்து செயல்படும் தன்மை மற்றும்

வல்லமைக் கொண்டது.ஏறக்குறைய எல்லாமே அதனதன் பாதைகளில்

சரியாக செயல்படும்.


   ஆனால்,உலக நியாங்களின் வழி முறைகளை புறக்கணித்து நம் சொந்த

நியாங்களை முன் நிறுத்தி சுயநலமாக  செயல் படுவோமானால்,நமது மனது

தனது முதல் எச்சரிக்கை மணியை ஒலிக்கும்.ஆனால்,நாம் அதை கேட்காதது

போல பாவனையுடன் மேலும்,மேலும் எதிர்மறையாக செயல் படும்போதும்

அது தன் எச்சரிக்கையை அவ்வப்போது தொடர்ந்துக் கொண்டே

இருக்கும்.பிறகுதான்  தன்  முயற்ச்சியை கைவிட்டு உறங்குவதாக பாவனை

செய்யும்.நம்முடைய ஆர்ப்பாட்டமான வாழ்க்கை முறையில்,நம் மனதின்

எந்த எச்சரிக்கையையும் நாம் கவனத்தில் கொள்ளும் நிலைமையில் நம்

நிலை இருக்காது. விளைவு; நமக்கும்" ஓய்வு "  என்ற அந்த காலத்தின்

கட்டாயமான தருணங்கள்,  நமது சகல ஆர்ப்பாட்டங்களையும் முடக்கும்

 தருணங்கள்,நமக்கு   இரண வலித் தரும் தருணங்களாக மாற வாய்ப்புகள்

அதிகம்.


   இப்போதுதான் நாம் நம் தனிமையை உணர்வோம்.நம் தனிமையை விரட்ட

பிறர் உதவியை நாடி,நாலாபுறமும் பார்வையை படர விடும்போதுதான்

நமக்கேத் தெரியும்.நாம் பொருள் குவிக்க மேற்கொண்ட முயற்சிகளில்,ஒரு

சதவீதமாவது ஒரு இதமான உறவை நம்முடன்  நிலை நிறுத்தும்

செயல்பாட்டில் இருக்கவில்லை என்ற உண்மை உறைக்கும்.போதாதக்

குறைக்கு வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல,நமது மனதின்

உண்மையான ,உறுதியான,வலிமையான  நீதிமன்றத்தில்  குற்றவாளிக்

கூண்டில் நாம் நிறுத்தப் படுவோம்.தன் சுய நலத்திற்காக, சொந்த

நியாயங்களை முன் நிறுத்தி செயல்படும் எவருக்கும் இந்த நிரந்தர வலித்

தரும் தருணங்களிளிருந்து  தப்பவே முடியாது.


   இந்த நிலைமையில்தான் விஜயன் இருந்தான்.இறுதியாக அப்பாவின்

இறுதிச் சடங்கிற்கு வந்தது.இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

அப்போது,மகளுக்கு ஏழு  வயது.மகனுக்கு ஐந்து வயது.அப்பா வழி தாத்தா,

பாட்டியின் உறவையே, குழந்தைகள் இந்நாள் வரை உணராமல் இருந்த

குற்றத்திற்கு தான்தான் காரணமாகி விட்டோம்  என்று உணர்த்திய, உறுத்திய

உண்மையை எதிர் கொள்ள இயலாமல் மருகினான் விஜயன்.ஒரு வழியாய்

விமானப் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.அம்மாவிற்கு தான் வரும்

விவரத்தை கடிதம் மூலம் முதலிலேயே தெரியப் படுத்தி இருந்தான்.


   ஆனால்  விஜயனுக்குத் தெரியாத விவரம் ஒன்று உண்டு. இன்னும் ஒரு

நூறு கிலோமீட்டர் தாண்டி,தன்  சொந்த கிராமத்தில் தான் கால் பதிக்கும்

போது,தனக்காக ஒரு மனித வெடி குண்டு ஆக்ரோஷத்துடன் காத்துக்

கொண்டிருப்பது விஜயனுக்கு தெரியாது.




part9                                                                                                         தொடரும்........  

   






Saturday, August 16, 2014

7.Thai Mann.

    விஜயன் விமானத்தில் பறந்துக் கொண்டிருந்த போது பலதரப்பட்ட

நினைவுகள் அவன் மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன.தன் தாயைப்

பற்றி எண்ணும்போது மனம் ஒரு நிலையில் இல்லை. தன்னைப் பெற்று,

வளர்த்து ஆளாக்கிய தன் அன்னைக்கு ஒரு சாதாரண  மகனாகக் கூட தான்

தன் அடிப்படைக் கடமைகளை செய்யவில்லை.சாதரணமாக சொல்லி

விடலாம் நம் பெற்றோர் நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கினர்  என்று.

ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் அந்தந்த பருவத்திற்கான கஷ்டங்கள்

 மாளாது.உயிர் போய் போய் வந்துக் கொண்டிருக்கும்.


     கரு உருவாகி அது வளரும் அந்த பத்து மாதங்களும் அந்தத் தாய் தன்

வாய் ருசி மறக்க மற்றும் மரக்கச் செய்யும் அந்த ஆரம்ப,மத்திய,இறுதி கால

சிசு வளரும் காலங்கள், அந்தந்த காலங்களின் சிரமங்கள்,பல வகையான

உடல்வாகும்,மனவாகும் கொண்ட  தாய்மார்களை , பல வகையான

இன்னல்களுக்கு உட்படுத்தும் சித்திரவதைகள்.பெறப் போகும் தாயின்

 நிலைமை இப்படி என்றால்,தந்தையின் நிலைமை வேறு விதமான

சித்திரைவதைகள்.


  முதல் சித்திரவதை தமது நினைவுக்கு வந்து வந்து அச்சுறுத்தும் தமது நிதி

நிலைமை.சுக பிரசவமாக வேண்டுமே என்றக் கவலை. பிரசவத்திற்கு பின்,

தாய் தெம்புடன் நடமாடும் வரை,மனைவி மேற்பார்வையிட்ட

அனைத்தையும்,தான் மேற்பார்வையிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்

நிலைமை.குழந்தை பிறந்ததும்,அதை கௌரவமாக வளர்த்து ஆளாக்க

வேண்டுமே என்ற கவலை.


    தனது நிலைமையைத் தாண்டி தனதுக் குழந்தைக்கு செய்யத் துடிக்கும்

மனது.ஆரம்பக் கல்வி முடியும் முன் தன் குழந்தைக்கு நல்லதை, நல்லது

அல்லாததை தெளிவாக்கும் முயற்சியில் தானும் தன் மனைவியும் அதன்

பருவத்திற்கு இறங்கி செயல் படும்போது அதற்கு புரிய வேண்டுமே

என்றக் கவலை.பத்து வயது வரைதான் குழந்தை.


   அடுத்த பகுதியில் இருந்து பள்ளி இறுதி வரை பல வகையான கவலைகள்

பெற்றோர்களுக்கு.ஆசிரியரிடமிருந்து எந்த விதமான புகார்களும் வராமல்

பார்க்க வேண்டும்.நல்ல நண்பர்களின் சேர்க்கை வேண்டும்.இனக்

கவர்ச்சியால் பாதிக்கப்படாமல் ஆண்,பெண்ணின் ஆரோக்கிய நட்பை

ஆரோக்கியமாக புரிந்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

படிப்பின் முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும். அதன் மூலம் தன்

கடமைகளை நிறைவேற்ற தேவையான வாழ்க்கை மேம்பாடுகள் பற்றிய

ஒருத் தெளிவை தன் குழந்தை மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்.

தனது இந்த செயற்பாட்டை தன் குழந்தை சரியாக உள்வாங்கிக் கொள்ள

வேண்டுமே என்ற பெருங்கவலை.


    இதையெல்லாம் சாத்தியமாக்கும் முயற்சியில் தன் நிலைமையைத் தாண்டி

செயல் படும் வேகம்.இந்த வேகத்தில்,தங்களது நலனையும்,சுக

துக்கங்களையும் மறந்து குழந்தையை ஆளாக்கி விட்டு,இப்போது நமக்கு

எல்லா விதத்திலும் பக்க பலமாக இருப்பான் என்று அவன் (ள் ) முகம்

பார்த்தால்,ஏதேதோ  காரணங்களைக் காட்டி,முதலில் ஒரு தற்காலிகப்

பிரிவை ஏற்படுத்தி,பிறகு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்திக் கொள்ளும்

விஜயனைப் போல வாரிசுகளுக்கு எதுக் கிட்டும்.மனச் சிதைவு நோய்தான்

பரிசாகக் கிட்டும்.


   அதுவரை, தான் உறங்குவதாக பாவனை செய்துக் கொண்டிருக்கும் மனது,

தனது உடல் தளர்ந்த பிறகு,அதன் விளைவான அதன் இரைச்சல்களும் ஓய்ந்த

பிறகு, எழுந்து நிற்கும் பாருங்கள்.அது தன் சாட்சிகளுடன் நீதிக் கேட்க நிற்கும்

தோரணம் நம்மை அச்சத்தில் உறைய வைக்கும். பிறகு அது தன்

வலிமையான வாதங்களை தனது வலிமையான சாட்சிகளுடன் நிசப்தமான

பின்னணியில் உரக்க உரைக்கும்போது நமது சப்த நாடியும் ஒடுங்கி

விடும்.அந்த உண்மைகள் உரைக் கல்லில் பட்டுத் பட்டுத் தெறிக்கும் ஒலி,

நம் வாழ்நாள் முழுதும் நம்மை சித்திரைவதைகுட்படுத்தும்.




     அதைத்தான் விஜயன் தனது விமானப் பயணம் முழுவதும்

அனுபவித்துக் கொண்டிருந்தான்.



                                                                                       
  part8                                                                                                  தொடரும்........

  

             



Wednesday, August 13, 2014

6.Thai Mann.

   தாய் நாட்டிற்கு நிரந்தரமாக திரும்ப விஜயனும்,மீனாவும் முடிவெடுத்ததை

 அவர்களது குழந்தைகளால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.அதுவும்

தங்களை பேசி முடிவெடுக்காமல்,தன்னிச்சையாக தம் பெற்றோர் முடிவு

எடுத்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.இருவருக்கும் கோபமோ

கோபம்.


   மீனாதான் அவர்களை மிகவும் சிரமப்பட்டு சாந்தப் படுத்தினாள்.முதலில்

ஸ்ரீதருக்குதான் தெரியபடுத்தினாள்.அவனது ஆர்ப்பாட்டத்தை பார்த்து,"ஸ்ரீ!

எதுவானாலும் முதலில் நானும்,அப்பாவும் பேசி ஒரு முடிவெடுத்து,அதற்கு

பின்தானே உங்களிருவரிடமும் கலந்து ஆலோசிக்க முடியும்.உங்களை

ஆலோசிக்காமல் நாங்கள் எப்படி ஒரு இறுதி முடிவு எடுக்க முடியும்?"


   ஸ்ரீதர் ஒன்றுமே பேசவில்லை.அவனுக்கு என்ன பேசுவதென்றே

தெரியவில்லை.அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.மீனா

தொடர்ந்தாள்." அப்பா,பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகு நம் பாட்டியுடன்

இருக்க விருப்பப் படுகிறார்.ஆனால் அவர் எந்த விதத்திலும் என்னை தன்  கூட

வரச் சொல்லி கட்டாயப் படுத்தவும் இல்லை.ஆனால் எனக்குதான்

 அவரை தனியாக அனுப்ப விருப்பம் இல்லை.அதனால்தான் நானும் அவர்

கூட செல்ல முடிவு செய்தேன்".


   அப்பொழுதும் ஸ்ரீதர் ஒன்றும் பேசவில்லை.மீனாவே தொடர்ந்தாள்.

"அக்காவையும்,மாமாவையும் அழைத்து பேசலாம்.பிறகு எல்லோரும்

சேர்ந்து ஒரு முடிவெடுக்கலாம் ".ஆனால் ஸ்ரீதர் கூட ஒத்துக் கொண்டாலும்

ஒத்துக் கொள்வான் போல் தோன்றியது.ஷைலஜா ஒத்துக் கொள்ள

மறுத்தே விட்டாள்.அவளுக்கு ஒரு விதமான பயம் தோன்றியிருக்க

வேண்டும்.இதுவரை  பெற்றோரின் அருகாமை அவளுக்கு ஒரு

தெம்பையும்,அமைதியையும்,சந்தோஷத்தையும் தந்துக் கொண்டு

இருந்தது.இப்போது அவர்களது திடீர் முடிவு அவளை கலவரப் படுத்தி

இருக்க வேண்டும்.மிரண்டுப் போனாள்.அவளது நிலையை பார்த்து

விஜயனுக்கே மிகவும் சங்கடமாகி விட்டது.


   விஜயன்,தன் அன்பு மகளின் அருகில் வந்து அமர்ந்தான்.அவளை தன்

மீது ஆதரவாக சாய்த்து ஆசுவாசப் படுத்தினான்." ஷைலுமா! ரிலாக்ஸ்!

நாம் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுக்க இன்னும் மூன்று  மாதங்கள்

இருக்கின்றன்.அப்பொழுதும் உங்களால் ஒத்துக் கொள்ள சிரமமாய்

இருக்குமென்றால் ஒன்றும் பிரச்சனை  இல்லை.அம்மா உங்ககூட

இங்கேயே இருக்கட்டும்.இப்போதுதான் அம்மாவிற்கு பதவி உயர்வு வேற

வந்திருக்கு.அதனால்  நான் மட்டும் பாட்டியை பார்க்க கிளம்பறேன்.எனக்கு

பாட்டியை எப்படா  பார்க்கப் போறோம்னு இருக்கு.என்ன அப்பா

கிளம்பட்டுமா?"


   ஷைலஜாவிற்கு அப்பாவை பார்க்க பாவமாக இருந்தது.இத்தனை காலம்

பிரிந்திருக்கும் தன் தாயைப் பார்க்கும் ஏக்கம் ஏகத்திற்கு அவர் முகம்

முழுதும் வியாபித்திருந்தது.அவள் ஒரு முடிவுடன்,"சரி அப்பா ! நீங்கள்

முதலில் கிளம்பி செல்லுங்கள்.பிறகு ஒரு முடிவெடுப்போம்". என்றாள்.

ஆனால் மீனாதான்  இருதலைக் கொள்ளி எறும்பானாள்.


       அதன் பிறகு,மூன்று மாதங்கள்  முடிந்து பணி  ஓய்வுப்  பெற்ற விஜயன்,

ஒருவாறு தன் பணியிடம் நிர்வாகத்தையும், தனது இல்லத்து

அங்கத்தினர்களையும் சமாதானபடுத்தி விட்டு,ஒரு பக்கம் கனத்த

இதயத்துடனும், மறுப் பக்கம் தான் காணப்  போகும் தன்  தாயின்

சந்தோஷமான நினைவுகளுடனும் தன் தாய் நாட்டிற்கு விமானம்

 ஏறினான்.         


        
Part 7
                                                                                                         தொடரும்............

Tuesday, August 12, 2014

5.Thai Mann.

   விஜயனுக்கு மீனா கூறிய சந்தோஷமான செய்தி உண்மையிலேயே

மிகவும் நல்ல இனிமையான செய்தி.நம்மையும் நமது பணியையும்

அங்கீகரித்து,உனக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வுக்கு உனது மேலாண்மை

திறமையும்,உனது பணியின் நேர்த்தியும் தகுதியானவைதான் என்று  நமது

நிர்வாகம் நமது தன்னம்பிக்கையை  உயர்த்தி, நமக்களிக்கும் உயர்ந்த

விருதுதான்  இந்த பதவி உயர்வு.தகுதியான பதவி உயர்வு,நிர்வாகம்  தன்

பணியாளர்களிடமிருந்து பெறும்  " விசுவாசம் " என்ற மிகப் பெரிய, மதிப்பு

 மிக்க " போனஸ் " ஆகும். ஆனால் இவ்வளவு நல்ல செய்தியைக் கேட்ட

பின்பும்,விஜயனின் கலக்கம் இன்னும் அதிகரிக்கிறது என்றால்,அவனது

மனதின் சங்கடம் ஆழமானதாகத்தான் இருக்க வேண்டும்.மீனா

அனுமானித்தாள்.


   விஜயன் இன்னும் மீனாவை பார்த்துக் கொண்டேயிருந்தான்.ஆனால்

அவனது கவனம் முழுவதையும் வேறெதுவோ ஆக்ரமித்துக் கொண்டு

இருப்பது மீனாவுக்குத் தெளிவாகப் புரிந்தது.விஜயனிடம்  இன்னும்

நெருங்கி அமர்ந்து,இன்னும் சிறிது கூடுதலான வாஞ்சையுடன் அவனது

கைகளை வருடியபடி, " ஜெய்! " என அவன் முகம் தொட்டுத் திருப்பினாள்.

திடுக்கிட்டுத் திரும்பினான் விஜயன்.


    மீனா,அவனை சகஜ நிலைக்கு திருப்ப அவனை சீண்டினாள்."என்னது!

இப்போவெல்லாம் ஐயா பலத்த யோசனைமயமாய் இருக்கிறீர்?உங்களது

சகதர்மிணிகிட்டேயும் சிறிது பகிர்ந்து கொண்டால் நலமாக இருக்கும்

அல்லவா?.மறுகணம் பக்கென்று சிரித்து விட்டான் விஜயன்.தன்  காதல்

மனைவியை இறுக அணைத்தபடி,"பெண்களை  ஏன் சக்திமயமாய் உருவகப்

படுத்துகிறார்கள் தெரியுமா?". "ஏனாம்"?.கொஞ்சினாள் மீனா.


   "அட இந்த அழகான கொஞ்சலுக்கு ஒரு ராஜ்ஜியத்தையே பரிசளிக்கலாம்.

ஆனால் ராஜ்ஜியத்துக்கு நான் எங்கே போவேன்?". என்று   நிஜமாகவே

கவலைப் பட்டான் விஜயன்."அதான் " சற்று யோசித்தவன் " நம் குடும்பம் "

என்று மனம் நிறைந்து வந்த ஒரு பெண், தான் வந்து சங்கமித்த குடும்பத்துடன்

 இழைந்து,எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு தெளிவுடன் செயல்

படும் அந்த சக்தி பெண்களுக்கே உரியது மீனா!அதனால்தான் பெண்களை

சக்திமயமாய் உருவகப்படுத்துக்கிறார்கள் என தோன்றுகிறது". என்று

ஆழ்ந்த குரலில் அமிழ்ந்து கூறினான்.


   " எல்லாம் சரி! ஐயா இன்னும் விஷயத்திற்கே வரலேயே! ஏன்னா,

எனக்கு இந்த அன்பான ராஜா கிட்டேயிருந்து இன்னொரு ராஜ்ஜியமும் பெறக்

கொள்ளை ஆசை".விஜயனின் மனதை இலகுவாக்கினாள் மீனா.இப்போது

விஜயன் மனம் மிகவும் இலேசாகிப் போனது.மனம் தெளிந்தது. மீனாவின்

பக்கம் நன்றாகத் திரும்பி,"மீனா நான் சொல்றதை கேட்டப் பிறகு உன்

ஆலோசனையை சொல்லு".


    சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தான்." எனக்கு என்னமோ தெரியலே!

இப்போது எல்லாம் அம்மா ஞாபகம் அடிக்கடி வருது.ஊரில்

அக்காவின் மேற்பார்வையில் விட்டுட்டு வந்தாலும் மனது மிகவும் சங்கடப்

படுகிறது.அப்பாவின் காலத்திற்கு பிறகு, இந்த இருபது வருடங்கள்அம்மாவை

மிகவும்  தனிமைப் படுத்திவிட்டோமோ என்று மனம் மிகவும் சஞ்சலப்

படுகிறது மீனா! இதுவரை ஓய்வில்லாதப் பணியினால் எனக்கு இந்த

எண்ணத்தின் தாக்கம் புரியவில்லை என நினைக்கிறேன்.ஆனால் இப்போது

ஓய்வுப் பெற்றப் பிறகு இந்த எண்ணம் என்னை அனலில் இட்ட புழுவாக

வருத்தும் போல் இருக்கிறது.எனக்கு இனி அம்மா கூடவே  இருக்கலாம்

எனத் தோன்றுகிறது.உன்னையும் அழைத்துக் கொண்டு போகத்தான்

ஆசை.ஆனால் உன்னை நிர்பந்திக்க மாட்டேன்.வேண்டுமானால் நீயும்,

ஸ்ரீதரும்  இங்கே இருங்கள்.நான் போய் அம்மாவை அழைத்து வர மீண்டும்

ஒரு முறை முயற்சி செய்கிறேன்.அப்படி அவர் திரும்பவும் வர மறுத்தால்,

நான் ஒரு இரண்டு வருடம் அவருடன் இருக்கிறேன்.பிறகு சூழ்நிலை

எப்படி அமையும் என்று பார்ப்போம்".


     மீனா யோசிக்கவே இல்லை."அட! இது மிகவும் நல்ல விஷயம்தானே!

இதற்காகவா இவ்வளவு நாட்கள் இப்படி அல்லாடிக் கொண்டிருந்தீர்கள்?.

ஏறக்குறைய நானும்உங்கள் நிலமையில்தான் இருந்தேன்.எப்போடா  நம்ப

சொந்த பந்தமெல்லாம்  பார்ப்போம் என்றிருந்தது.அப்பாடா! இப்போதுதான்

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.நாம் கிளம்புவதற்குள் சில ஏற்பாடுகள்

செய்ய வேண்டி இருக்கு.அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.இப்போதைக்கு

 நம்  ஸ்ரீதர்  இங்கேயே இருக்கட்டும்.நம் இருவரும் எப்போது கிளம்பலாம்

 என்று முடிவு செய்து விட்டு டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்து விடுங்கள் ".

மிகவும் இயல்பாகச் சொன்னாள் மீனா.


    மீனாவின் இந்த இயல்பான பதிலில் அயர்ந்துதான் போனான் விஜயன்.



    Part 6                                                                                             தொடரும்........


                                                                                             

                                                                                                                          

 


 


    

Friday, August 8, 2014

4.Thai Mann.

   இனிமையான இரவு நேரங்கள்,விஜயனுக்கும்,மீனாவுக்கும் மிகவும்

பிடித்தமான நேரங்கள்.ஒன்பதைரைக்குள் இரவு உணவை முடித்துவிட்டு,

மகனுடன் ஒரு அரை மணிநேரம் போல் அளவளாவுதல் மிகவும்

சந்தோஷமான தருணங்கள்.அதுவும் மகளும்,மகனும் சேர்ந்து விட்டால்,

தங்களது பெற்றோரின் தலைகளை உருட்டிக்கொண்டே இருப்பதுதான்

அவர்களது முழு நேர வேலையாக இருக்கும்.சிரிப்பு சத்தம் கேட்டுக்

கொண்டே இருக்கும்.


   அவர்கள் தன் தாய்க்கு வைத்தச்  செல்ல பெயர் ' ட்யுப் லைட் '.அவர்களது

'டைம்லி ஜோக்ஸ் ' எதுவும்அவளுக்கு எளிதில் புரியாது.ஏன்,தொலைக்காட்சி

விளம்பரங்கள் பலவும் குழந்தைகளின் விளக்கத்திற்கு பிறகுதான்

புரியும்.ஆனால் விஜயன் அவர்களுக்கு சரிக்கு சமமாக ஈடு கொடுப்பான்.

மீனா,விஜயனிடம் எப்போதும் ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருப்பாள்.

" இந்த தலைமுறைக்கு எப்படித்தான் எல்லா விஷயங்களும் மின்னல்

வேகத்தில் புரிகிறதோ ".சமயங்களில் இந்தத் தலைமுறையின் வேகம்

பயந்தரும் விஷயமாக கூடத் தோன்றும்.


   பல சமயங்களில் அவளுக்கு தோன்றுவதுண்டு.தனது தலைமுறை வரை

எல்லா வகையான மாற்றங்களும் ஒரு நிதானத்தில் மாறிக் கொண்டிருந்தன

என்றும்,ஆனால் இந்த தலை முறையிலிருந்து மாற்றங்களின்  வேகம்

தாக்குப் பிடிக்க முடியாததாய் இருக்கிறது  என்றும் தோன்றியது.

அதன் வேகத்திற்கு ஈடு கொடுப்பது  இயலாத காரியமாய் தோன்றியது.


   குழந்தைகளுடன் கொண்டாடிய சந்தோஷமான தருணங்களை கூடவே

அழைத்துக் கொண்டு அவைகளை மடியில் இருத்தி,தங்களது படுக்கை

அறையின் பால்கனியில்,இரவு நேரத் தென்றலை அனுபவித்தப்படி,

வானுலகை ரசித்தபடி ,தம்பதிகள் தங்களுக்கே தங்களுக்கான தருணங்களை

அளவளாவிக் கொண்டாடும் அருமையான அடுத்த அரை மணி நேரம்,

தம்பதிகள்  இருவருக்கும் மிகவும் பிடித்தமான நேரமாகும்.


   அன்றும் எப்போதும் போல எல்லா கலகலப்புகளையும் உள்வாங்கி படுக்க

செல்லும்போது மணி எப்போதும்போல பத்தரை ஆகிவிட்டது.சரி,விஜயனின்

வாட்டும் முகத்தை முதலில் நேராக்க தனது சந்தோஷ செய்தியை முதலில்

பகிர்ந்துக் கொள்ளலாம் என மீனா முடிவெடுத்தாள்." ஜெய்!உங்களுக்கு ஒரு

சந்தோஷமான விஷயம்".என்றபடி விஜயனின் கைகளை ஆசையுடன்

அள்ளித் தன் கைகளுக்குள் சிறைப் படுத்தினாள்.விஜயன் ஆவலுடன் அவள்

முகம் பார்த்தான்.


   " எனக்கு பதவி உயர்வுக் கிடைச்சிருக்கு".சொல்லும்போதே மீனாவின்

முகமெல்லாம் சந்தோஷத்தில் பூரித்திருந்தது.அதில் திளைத்தபடி," ஜெய்!

பதவி உயர்வினால் நமது பணியின் மதிப்பும்,நம் நிதி நிலைமையும் உயரும்

என்பதை விட,நமது பணியில், நமது செயல்பாட்டுக்கள், ஒரு சரியான

கோணத்தில்,ஒரு  சரியான அங்கீகாரம்  பெற்று, நமது உயர்வுக்கு வழி

வகுத்திருக்கின்றன என்பதை நினைக்கும் போதுதான்,நமது சந்தோஷம் ஒரு

நிறைவுள்ளதாக தோன்றுகிறது".என்று லயித்துக் கூறி  அவன்  முகம் பார்க்க,

 அந்த முகத்தின் கலக்கம் இன்னும் அதிகரிப்பதைக் கண்டு திகைத்துப்

போனாள்  மீனா.



Part 5                                                                                                     தொடரும்....

 

  

Wednesday, August 6, 2014

3.Thai mann.

    விஜயனுக்குப் பெண் பார்க்க முடிவு செய்தபோது ஒரு குடும்ப நண்பர்

மூலம் மீனாவின் குடும்பம் அறிமுகமானது.விஜயனுக்கு பார்த்த முதல்

பெண் மீனா.முடிவானப் பெண்ணும் மீனாதான்.சாமிப் படங்களுக்கு

முன்னால் குத்து விளக்கு  நிதானமாக ஒளிரும்போது ஒரு அழகான

அமைதிப் பெறுவோமே,அது மாதிரி அழகுடன் அழைத்து வரப்பட்டாள்.

 
     மீனாவின் மாநிறத்திற்கு  அந்த இயற்கையான அலங்காரங்களும் ,சற்றுப்

பெரிய கண்களுடன்  இழைந்த மையும்,அளவான கூந்தலில் பெருமையுடன்

குடியிருந்த அளவான மலர்களும்,அதன் அளவான வாசனையும்,

எல்லாவற்றிற்கும் மேலாக,மீனாவின் இயற்கையான பதவிசும்,

விஜயனுக்கு மிகவும் வித்தியாசமாய் இருந்தன.அது மட்டுமின்றி தன்னை

ஒத்துக்கொண்டாலும்,நிராகரித்தாலும் அதனால் பாதிக்கப் படாதவள் போல்

தோன்றினாள்.


   அவன் பணிப் புரியும் அயல் நாட்டில் பளீர் பளீர் எனப் பெண்களை பார்த்து

விட்டு இந்தக் கண்ணை உறுத்தாத மென்மையான அழகு விஜயனை மிகவும்

வசீகரித்தது.தன்  பெற்றோரிடம் தன்  சம்மதத்தை தெரிவித்தான்.ஆனால்

மீனாவிற்கு விஜயனை பார்த்ததும் என்னவோ நெடுநாள் பழகிய நல்லத்

தோழனாய் தெரிந்தான்.திருமணத்திற்குப் பிறகு இந்த உணர்வைப் பற்றி

 பலமுறை   விஜயனிடம் சிலாகித்திருக்கிறாள்.


   திருமணம் இனிதே முடிந்தது.உற்றமும்,நட்பும் சூழ்ந்து மனம் நிறைந்து

வாழ்த்த, இறைவனின்உதவியையும்,வழிக் காட்டலையும் வேண்டிப்

பெற்றுக் கொண்டு,விஜயனும்,மீனாவும் தங்கள் இல்லறப் பயணத்தை

இனிதே தொடங்கினர்.


    மனைவியை மதிக்கத் தெரிந்த கணவன் விஜயன்.எந்த மனிதனுக்கு தன்

பெற்றோரை மனமார மதிக்கத் தெரிந்திருக்கிறதோ,அந்த மனிதனுக்கு தன்

மனம் நிறைந்த மனைவியையும் மதிக்கும் பண்பும்  தானாகவே தளிர்க்கும்.

மீனாவின் இயல்புக்கு ஏற்றாற்போல்,அவளது விருப்பப்படி மருத்துவமனை

நிர்வகிக்கும் படிப்பை படிக்க வைத்து,தனக்கு தெரிந்த வேறொரு மருத்துவ

மனையில், பகுதி நேரப் பணி கிட்ட ஆவன செய்தான் விஜயன்.


   மீனாவிற்கு மிக திருப்தியாக அமைந்தப் பணி.அவளது அகம்,புறம்

இரண்டையும்,இலகுவாக்கி கொண்டு செல்வதில் விஜயன் கண்ணும்,

கருத்துமாயிருந்தான்.இறைவன் அருளால் அருமையான இரண்டு

குழந்தைகள்.இப்பொழுது பெரியவளுக்கு அதே அயல் நாட்டில் வரன்

அமைந்தது.இரண்டு வயதில் ஒருக் குழந்தை இருக்கிறது.தம்பதிகள்

தத்தம் பணியில் அருமையாக ஜொலிக்கிறார்கள்.இருவரும் தத்தம்

பெற்றோருடனும் தத்தம் மாமியார்,மாமனாருடனும் கணிவாகத்தான்

 இருக்கிறார்கள்.என்றாலும் பெண்ணை  இன்னொரு இல்லத்திற்கு

இனிதாக அனுப்பியப் பிறகு சிறிது ஆரோக்கியமான இடைவெளி

இருப்பது இருக் குடும்பத்தார்க்கும் நல்லது என்று மீனவுக்குப் பட்டது.

அதன்படி நடந்து வருகிறாள்.

   மகனுக்கு இப்போது பெண் பார்த்தாலும் நல்லதுதான்;இல்லை ஒரு இரண்டு

வருடம்   அவனது பணியின் பயிற்சிக் காலம் முடிந்து பார்த்தாலும் சரிதான்.

எல்லாமே சரிதான்.ஆனால் சில நாட்களாக வாடிக் கொண்டிருக்கும்

விஜயனின் முகம்தான் சரியாகவே இல்லை.மிகவும் விசனப் பட்டாள்

மீனா.தன்னை கண்ணில் வைத்து இமை மூடி காக்கும் தன் அன்புக் கணவன்

இனியும் தானே தன்  மனதை திறப்பான் என்றிருப்பது பெரும் பிசகு என்றுத்

தோன்றியது.இன்றிரவு அவன் மனதின் சுமை இறக்க உதவி செய்வது என்று

உறுதிக் கொண்டாள்.மேலும் இவன் இப்படி இருக்கும்போது தனது

மகிழ்ச்சியான செய்தியை எப்படி பகிர்ந்துக் கொள்வது என விழித்தாள்

மீனா.



                                                                                                 தொடரும்........

      
Part 4
 

 
  

Monday, August 4, 2014

2.Thai mann

   ஒருவரின்  உடலுக்கு ஓய்வுக் கிட்டும் போதுதான் தன் மனதிற்கும் ஓய்வுத்

தேவை என்பதை அந்த  உடலே அப்பொழுதுதான் உணரவே ஆரம்பிக்கும்.இது

இயற்கை.அந்த நிலைதான் இப்பொழுது விஜயனுக்கும்.கடந்த சில

தினங்களாகவே அவனது மனம் ஒரு நிலைக் கொள்ளாமல் தத்தளித்துக்

கொண்டிருந்தது.அது தன்  பணியை பாதித்து விடுமோ, என அவன் மிகவும்

கவலையுற்றான்.


   ஆனால் அவன் பணி என்றும்  இறை பணி  என்பதை அவன் என்றும்  மனதில்

இருத்திக் கொண்டதாலோ என்னவோ,இறைவன் அருளால்அவனது

பணியிடத்தில் அவனது மனம் முழு ஈடுபாட்டுடன் ஒத்துழைத்தது.

ஆனால் பணி  முடிந்து வீடு திரும்பியதும்,அவனது மனம் எதற்கோ ஏங்கி

தவித்தது.அதன் ஏக்கம் எதை சார்ந்ததாக இருக்கும்?.விஜயனால் இனம் காண

இயலவில்லை.


    அவனது வீட்டில் அவனது அன்பு மனைவி மீனாவிற்கு தன் சிநேகிதக்

கணவனின் நிலைக் கண்டு சிறிதுக் கலக்கமானது.ஒரு வார இறுதி

நாளில் உறங்குவதற்கு முன் தன்  கணவனின் கரம் பற்றி "ஏன் ஜெய்(மீனா தன்

செல்லக் கணவனை செல்லமாக அன்புத் ததும்ப  இப்படித்தான்அழைப்பாள்)

அந்த அழைப்பில் ஒரு இயல்பான இதம் இழைந்தோடும்.அந்த இதம்

 விஜயனின் இதயத்தை நெகிழ வைக்கும்.


   அவர்களது குழந்தைகள் மூத்தவள் ஷைலஜாவும்,இளையவன் ஸ்ரீதரும்

விஜயனை  பல மகிழ்ச்சியானத் தருணங்களில் "  அம்மாவின் ஜெய் '

என்று அழைத்து சீண்டுவதுண்டு.  " ஏன்  ஜெய்!இப்போதெல்லாம

முகம் அடக்கடி வாடிப் போகிறதே! உடம்புக்கு முடியலயா?".விஜயன் தன்

அன்பு மனைவியை ஏறிட்டுப் பார்த்தான்.


   மீனாவிற்கு வயதே ஏறாது  என்றுத் தோன்றியது.இவளும் நம்மூரில் தன்

 பட்டப் படிப்பை  முடித்து விட்டு இங்கு  வந்து இந்த அந்நிய மண்ணில்

தன இயல்புக்கு ஏற்றாற்போல் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்து,  ஆர்வமுடன்

'ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் ' கோர்ஸ் முடித்து ஒரு மருத்துவ மனையில்

 பணிப் புரிகிறாள்.


   நம் பாரதத்தின் கலாச்சாரத்தை இயன்ற மட்டும் காத்துக் கடைப் பிடிப்பாள்.

நம்மூர் பண்டிகையெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

குழந்தைகளின் உடை விஷயங்களில்கூட அதிகமாகத் தலையிடுவதாக

குழந்தைகளின் குற்றச்சாட்டு.ஷைலஜா தன்  திருமணத்திற்கு

பிறகுதான்,தன் விருப்பப்படி நவநாகரீகமாக உடையணிந்துக்

கொள்வதாகப்  பீற்றிக் கொள்வாள்.இருநூறு மைல்களுக்கு அப்பால் அந்த

அயல் நாட்டிலேயே இருக்கிறாள்.மாப்பிள்ளை நம்மூர்தான்;நம் சனம்தான்.

நல்ல மாதிரி.பெற்றோருடன்  அந்த அயல் நாட்டிலேயேகுடியிருக்க

குடியுரிமைப் பெற்றவர்கள்.


   மாப்பிள்ளை பெண் இருவரும் மீனாவிடம் பதவிசாக நடந்துக்

கொள்கிறார்கள்.மீனாவும்,தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளத்

தெரிந்துக் கொண்டிருக்கிறாள்.அதிகமாக அவர்களது விஷயத்தில்

தலையிடுவதில்லை.விஜயனையும்தலையிட விடுவதில்லை.மகன்

ஸ்ரீதருக்கு பெண் பார்க்க வேண்டும்தான்.மூத்தவள் குடும்பம் போலவே

இங்கேயே ஒரு நல்லக் குடும்பமஇறைவனருளால் ஸ்ரீதருக்கு அமைந்து

விட்டால் நல்லதுதான்.மீனாஅடிக்கடி இப்படி  எண்ணிக் கொள்வாள்.


    இப்படி இருக்கும்போது எப்போதும் கலகலவென இருக்கும் விஜயன் கடந்த

சில நாட்களாக அமைதி இழந்துக் காணப்படுவது மீனாவிற்கு சிறிது திகிலாக

இருந்தது.



                                                                                                       தொடரும்......


Part 3               

Friday, August 1, 2014

1.Thai mann

     அது ஒரு அயல் நாட்டில் வசிக்கும் ஒரு இந்தியரின் இனிமையான

இல்லம்.அயல்நாட்டுவாசியாகி விளையாட்டுப் போல முப்பது

 வருடங்கள் முயல் குட்டி வேகத்தில் பறந்து விட்டன.இல்லத்

தலைவனான விஜயனுக்கு நம்பவே முடியவில்லை.


   விஜயன் இருதய சம்பந்தமான மருத்துவத்தில் நிபுணன்.அவன் பணிப்

புரியும் அந்த பிரசித்திப் பெற்ற மருத்துவமனையில் அவன் இருதயத்திற்கும்,

 அவனது இருதய மருத்துவ நிபுணவத்திற்கும் ஒரு  இதமான இடமுண்டு.

அவனது சக பணியாளர்களுக்கு அவனை மிகவும் பிடிக்கும்.அவனிடம், தம்

நோய் தீர்க்க வருபவர்களுக்கு,அவனை மிக மிகப் பிடிக்கும்.விஜயன் ஒரு

வித்தியாசமானவன்.சமயங்களில் நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போதே,

தனக்கு உதவியாக இருக்கும் மருத்துவர்களுக்கு அது சம்பந்தமான பாடம்

எடுப்பான்.


   ஒருவருக்கு பணியிலிருந்து ஓய்வு என்பது காலத்தின்கட்டாயம்.அதற்கு

சில மாதங்களுக்கு முன்பாகவே அவர்களது மனம் அவர்களை அலைகழிக்க

ஆரம்பித்துவிடும்.அடுத்து என்ன செய்வது என்பதே புரியாத புதிராக

இருக்கும்.அதற்கு விஜயனும் விதி விலக்கல்ல.ஏனெனில், அவனும்

ஒய்வுப் பெறும்  தருணத்தில் இருந்தான்.இன்னும் மூன்றே மாதங்கள்தான்

இருக்கின்றன.


ஆனால் அவன் பணிப் புரியும்  மருத்துவமனை விஜயனது

ஆரோக்கியத்தையும், அவனது சேவைக்கு இருக்கும் ஆரோக்கியத்தையும்

அதனால் அந்த மருத்துவமனைக்கு கிடைக்கும் பெயர்

ஆரோக்கியத்தையும்,பண வரவின் ஆரோக்கியத்தையும்

மனதிலும்,கணக்கிலும் கொண்டு விஜயனுக்கு இரண்டு ஆண்டு பணி

நீட்டிப்புக்கு உத்தேசிப்பதாக செவி வழி செய்தி.


   ஆனால் விஜயனுக்கு வேறு விதமான உத்தேசம் இருந்தது. அதை செயல்

படுத்துவதற்கான உத்வேகமும் இருந்தது. 

 
Part 2
                                                                                                                    தொடரும்.......

Wednesday, July 30, 2014

6.varamadhai

நண்பனே!ஆரோக்கியமான நட்புக்கு

வயதும்,ஆண் ,பெண் என்ற வேறுபாடும்

ஒரு பொருட்டே அல்ல;அதில் பரிசுத்தமான

அன்பான அக்கறையே மேலோங்கி நிற்கும்.


அத்தகைய அன்பான நட்பு வட்டத்திலிருந்து

நானும் ஒரு சிநேகிதியாக,என்னிடமிருந்து

ஒரு சிநேகிதமான விண்ணப்பம்;குடிக்கு மகனாக

 மாறிய,மாறுகின்றவரே அதை சிறிது பரிசீலிப்பீரோ!


ஒன்றும் அவசரம் இல்லை;மதுவின் பிடியிலிருந்து,ஒரு

 சிறுகணம் அவகாசம் கிட்டும் உனக்கு;.நம்பிக்கை உண்டு

எனக்கு;அந்த சிறு கணத்தில் எனது அக்கறையின் ஆழம்

புரியும் உனக்கு; ஏனெனில் எனது நம்பிக்கைக்கு ஆழமதிகம்.


புதிதாக செப்ப ஏதுமில்லை;ஒன்றை மட்டும் நினைவூட்ட

 விருப்பம்;மனிதனின் அடையாளம் அவன் ஈட்டும் மரியாதையாம்;

 அவன் வாழ்நாள் முழுதுமது  நிழலாய் தொடர வேண்டுமாம்; அதை,

சங்க  இலக்கியம் மூலம் நம்முள் அழுந்த பதித்தார் நம் ஆசான்.


அதை மட்டும் நினைவூட்ட விருப்பம்;அதை மறப்பாயோ?

அந்த மரியாதையின் மதிப்பை துறப்பாயோ?,அதை மறக்கடித்து,

உன்னையும் மரக்கச் செய்யும் குடி விலக்கி உன் வரமனைத்தும்

தொலைக்காமல் இருப்பாயோ? இருப்பாய் என நம்புகிறேன்.


ஏனெனில்,ஏற்கனவே கூறியிருக்கிறேன் எனது

நம்பிக்கைக்கு ஆழம் அதிகம் என்று. எனவே

முகமன் கூறி  விடை பெறுகிறேன்.மானிடப் பிறப்பின்

வரமதை உனக்கு உணர்த்தும் என் முயற்சி வெற்றிப் பெறும்,







                                    என்ற நம்பிக்கையோடு.



                           

Monday, July 28, 2014

5.Varamadhai...........

மனிதன்  மனிதனாக உள்ள வரை

இந்தக் கேள்விக்கு இடமே இல்லை;

மனிதன் குடியிடம் தன்னை தத்துக்

கொடுத்தவனாயின்  இந்தக் கேள்விக்கு

பதிலளிக்கக் கடமைப் பட்டவன்;கேள்வி?

குழல்,யாழின் இனிமைக் கூட,மழலை மொழிக்குப்

பின்தான் என்ற வள்ளுவன் மொழி உணர்ந்ததுண்டோ?.

உன் மழலைக்கு,உன் தோழமையை உணர்த்தியதுண்டோ?


மழலை எவ்வயதாயினும்,அன்பையேக் கோரும்;

யாரிடம்?.வேறரிடம்?.பெற்றோரிடம்தானே! அதுவும்

 குறிப்பாக வெளியுலகில் தம்மை பலமாக்கும்

தந்தையிடம்தானே! அந்த எதிர்பார்ப்பில் இருக்கும்

மழலைக்கு திகட்ட திகட்ட உனதன்பை வாரிப்

பொழிந்த திருப்தி என்றேனும் உன்னிடம் ஊறியதுண்டா?

நீ ஊறிக் கிடந்ததெல்லாம் அந்தக்  குடிக்கெடுக்கும் குடியெனில்,

 உன் அன்பின் ஊற்றுக் கண்ணைத் திறப்பது எங்கனம்?


தந்தை மகனு(ளு)க்கு ஆற்றும்  உதவியும்,மகன்(ள் )

தந்தைக்கு அளிக்கும் நன்றியும், வள்ளுவன் வாக்குப்படி,

ஒருவரை ஒருவர் பெருமைப் படுத்தும் தருணங்களன்றோ!

அந்தத் தருணங்களின் மறுப் பரிமாணமன்றோ வாழ்க்கை?

அந்த அன்பு வாழ்க்கையின்,அந்த அற்புதமான தருணங்களின்

மகிமையை  நீயும் உணராமல்,மற்றவரும் உணர விடாமல்,

குடும்பம் என்ற கோயிலில் உன் குலம் கற்பதைத் தடுக்கும்

 உன் குடி நிறுத்தாமல்,மழலை வரமதை தொலைப்பாயோ?.



   

Friday, July 25, 2014

4.varamadhai..........

ஒன்றை புரிந்துக் கொண்டால் மனிதா!

என்றும் நன்று உனக்கு;என்றென்றும்; உன் 

உடன் பிறந்தோர் உன் உற்ற நண்பர்கள் எனில்,

உன்னுடன் இறுதி வரை உடன் வருபவர் 

அதுவும் நிழலாய்,தன் இன்னுயிர், உடல்,

பொருளனைத்தையும் உனதாக்கி,உன்னை 

உருவாக்கி,அகமுகம் மலர, உன்னுடனேயே 

உலா வரும் உன் மனைவி உன்னுயிர் தோழியன்றோ!


உயிர் தோழமைதன் மதிப்புயர்த்தி தன்னுயிர் 

ஈந்தோர்  வரலாற்றின் பெருமை பல கேள்வியுற்றும்,

உன்னுயிர் தோழி,உனதருமை மனைவிதன் 

மதிப்புயர்த்த ஏதேனும் துரும்பை நகர்த்த உனக்கு  

உத்தேசமுண்டோ?இல்லை உன்குடியது, கூர்வாளதுக் 

கொண்டு " அவளது வாழ்நாள் நாள், நான் அவளை 

வாட்டும் நாள் " என அவளை,உன் உயிர்த் தோழியை 

உன் குடி வதைப்பதை  வேடிக்கைப் பார்ப்பாயோ?


உன் இல்லத்தரசி உன் இல்லத்திற்கு ஒளியூட்டியதற்கு

நீ காட்டும் நன்றி,அவள் கற்றுப் பெற்ற பட்டத்தை 

காற்றில் பறக்க விட்டு  நீ அவளுக்குத் தரும் பட்டம்;

" குடிக்காரன் மனைவி"  என்ற குனிவுத் தரும் பட்டம்;

" உன் குழந்தைகளுக்கு ஒரு நல்லத் தந்தையாக  

தேவைப்படும் முதல் தகுதி, அவர்களது தாயின் 

மதிப்பை உயர்த்துவதுதான் " என்ற மூத்தோர் சொல் 

மறந்து,மனைவி என்ற வரமதை தொலைப்பாயோ!   


 



Monday, July 21, 2014

3.Varamadhai...........

பெற்றோரை மதிப்போடு பேணும்போது ,

நம் மதிப்பின் அஸ்திவாரம் பலம் பெறுதல் உறுதி.

அதை நம் உடன்  பிறப்போடு  உடன்பட்டு

கட்டம் கட்டமாக கட்டடமாக உயர்த்தும்போது,

உயர்வது ஊரில் உன் மதிப்பின் பல(ம் )ன் மட்டுமல்ல;

உன் முன்பின் வம்சத்தின் மதிப்பின் பலமும் பலனும்   

உயரக் காண்பாய் உன் தெளிந்த மனதின் விளைவாய்.

ஏனென்றால்,தெளிந்த மனம்  இறைவனின் மனம்.


இந்தத் தெளிந்த மனதை,  இந்த இறை மனதை,

தெளிவின்மைக்கு,ஆம்!தெளிவே  இல்லாமைக்கு     

வித்திடுவது வேறென்ன?மதுதானே!இதிலேது சந்தேகம்?.

மனிதரின் மாண்பை சிதைப்பதுவும், சீர்கெடுப்பதுவும்

மதி கெடுக்கும் மதுவன்றோ!இதை மறந்திடலாமோ?.

மதி பிழையின்றி இருக்கும்போதே மயங்கும்

தருணங்கள் ஏராளம்;இதில் மதிக் கெடுக்கும் மதுவின்

தருணங்களைப்  பற்றி விளக்கமும் வேண்டுமோ?.


பெற்ற பெற்றோரை தூற்ற செய்யும் மதுவது உன் 

உடன் பிறந்தோரை உடனிருக்க விடுமோ?.உடன்

பிறந்தோரின் நேர்மையான கூர்மையான செழுமையான

பலத்தை இந்த சீர்க் கெடுக்கும் மதுவின் பெயரால்

இழப்பதுவும் தர்மமோ?உடன் பிறப்புடன் ஆரோக்கிய

வாழ்நாள் உறவு ஒருப்  பெரிய வரம்.மறப்பாயோ!

 அதை மறந்து புதைச் சேற்றில் விழுவாயோ! விழுந்து,

அந்த அரிய  கிடைத்தற்கரிய வரமதை தொலைப்பாயோ!    



     

Friday, July 18, 2014

2.Varamadhai.........

அன்னையின் தோளோடுத்  தோளாக

அருமைத் தந்தை; அவரே தம் மழலைகளின் ஆசானாக;

அத்தந்தையின்  அருமைப்  புரியும் ;பெருமைத் தெரியும்

 தவமறிந்த,தவத்தின் பலனறிந்த வாரிசுகளுக்கு.


மண்ணோடு மண்ணாய் மட்கிப் போவதற்கு முன்

மைல் கணக்கில்  உள்ளது மாதா பிதாவிற்கான

நம் நன்றியைப்  பேணும் கணக்கு;மனதில்

பதிக்க வேண்டிய நம் கடமையின்  கணக்கு.


இவ்வுலகைக் காண வாய்ப்பளித்ததற்கே

இப்பிறப்பில் நம் நன்றிக் காணுமோ அவர்களுக்கு?,

இதன் பிறகு வளர்த்து ஆளாக்கியதற்கு நன்றிக் கூற 

இன்னும் எத்தனைப் பிறவி வேண்டுமோ!


நானறியேன் பராபரமே!என பரம்பொருளுக்கு

நம் நன்றியை சேர்க்க நமக்குத் தெரிந்தால்,

நம் அன்னையும்,பிதாவும் முன்னறி தெய்வமென ,

நம் நன்றி தெய்வத்திற்கு முன் நம் பெற்றோரிடம் சேர்வது உறுதி.


இதனை மறந்து இன்னார் மகன்  என்றக் 

குலப்பெருமை மறந்து, குடியினால்

குப்புற விழுந்து,கூடி நிற்போரின் ஏச்சும் பேச்சும் பெற்று,

குன்றாய்  பலம் தரும் தந்தை வரமதை தொலைப்பாயோ?. 


 








   

  

Wednesday, July 16, 2014

1.Varamadhai.............

அன்னை உண்ண அமர்ந்தாள் :

தன்னை மறந்து உண்ண  அமர்ந்தாள் ;

ஆம்!தன்னை மறந்து தான் உண்ணும் உணவின்

தன்மையை மறந்து எதற்கு உண்கிறோம்,

ஏன் உண்கிறோம் என்று தன் நிலை மறந்து

அன்னை உண்ண  அமர்ந்தாள்.


வழக்கம் போல் தடதடவென கதவினை

இடிக்கும் சத்தம்;அச்சத்ததால் அதன்

விளைவுகளின் அச்சத்தால் இன்னும்

ஏதோதோவினால் அயர்ந்தது போய்

சுவர்மேல் சரிந்து போய் இன்னும்

உண்ணவும் முடியுமோ என்று கலங்கினாள் அன்னை.


கதவு திறக்கப்பட்டது;உள்ளே ஒருக் காலும்,

வெளியே ஒருக் காலும் இருக்க ஆடிக்கொண்டு

தள்ளாடிக்கொண்டு நின்றான் தலைமகன்;

குடி, குடியை மட்டுமின்றி சகலத்தையும் கெடுத்ததை

அறிந்தானோ அன்றி அறிந்தும் அறியாதிருந்தானோ

ஆண்டவனே உன்னைப்போல் அவன் மட்டுமே அறிவான்.


அன்னையின் அரவணைப்பை தவிர்த்து,

அவள் அவனை  தன் உறவு சங்கலிகளில்

பிணைக்க முயற்சிக்கும் அவளது பாசம் மறந்து

எப்படியும் சகலத்தையும் தொலைத்து வந்து

நிற்பான்  எனத்  தெரிந்தும், அவன்  தந்தையிடம் வலுவில் நின்று

அவன் விருப்பப்படி பாகம் பிரித்தாள்;பிரிந்தது சகலமும்.


சகலமும் பிரிந்ததுமல்லாமல்,பிரித்ததுமல்லாமல்,

இறுதியில் அன்னையின் ஆயுட்காலமும்  என் கையில்

என அவளது உணவையும் உடலையும் பிரித்து

அவளது உயிர் பறிக்க முனைந்தாயோ மூடனே!

 ஆண்டவன் அருளிய முதல் வரம் நமதருமை அன்னை;

அதை  அந்த  வரமதை தொலைப்பாயோ! 

 






   

  

Monday, June 23, 2014

14.penmanaikalukku udhava virumbu

    பொதுவாக பெண்மணிகளின் சிரமத்தை ,எல்லா  ஆண்களும்  புரிந்து

 கொள்வதில் ஒரு ஈடுபாடுக் காட்டினால் மிகவும் நலம் என்று தோன்றுகிறது.

ஆனால் பெரும்பாலான ஆண்கள்,பெண்களின் சிரமத்தை ஒருபோதும்

பொருட்படுத்துவதே இல்லை.இன்னும் ஒரு படி மேலே போனால் நம்ப

முடியாதபடி,  பெண்களேத்  தன்னைச் சார்ந்தப் பெண்களின் சிரமத்தைப்

புரிந்தும்,புரியாதது மாதிரி செயல்பட்டுக்   கொண்டிருப்பது ,

குடும்பத்திற்கு நன்மைப் பயக்கும் செயல் அல்ல.பணியிடங்களிலும் பண்பை

மேம்படுத்தும் செயல் அல்ல.இது குடும்பத்திலும்,பணியிடங்களிலும்  நிலவ

வேண்டிய ஆரோக்கியமான உறவை  மேம்படுத்தாது.


     குடும்பங்களிலும் சரி,பணியிடங்களிலும் சரி  பெண்ணிடம்

அனுசரணையுடன் செயல்பட வேண்டும்  என்ற அம்சம்  மிகவும்

முக்கியமானஅம்சமாகும்.இது எப்பொழுதுத்தோன்றும்?.குடும்பத்தில் எல்லா

உறவுகளும் தன்னைச் சார்ந்த பெண்  உறவுகளின்பால் அக்கரைத் தோன்றும்

போதுதான் இது சாத்தியமாகிறது.அதுபோலவே பணியிடங்களிலும்,நம்

நிறுவனத்தின் வளர்ச்சியில் நம்முடன் பணிப் புரியும் பெண்களின்  பங்கும்  

முக்கியமானது என்ற உன்னதமான உணர்வு உயிர் பெறும்போதுதான் இந்த

அனுசரணை என்ற அம்சம் சாத்தியமாகிறது.


   ஒரு பொறுப்புணர்வுள்ள பெண்மை,ஒரு இதமான மேன்மை.அவளின்

மனவலிமைக்கு நிகர் அவள்தான்.அதுதான், அவளை தன் இரத்த

பந்தங்களிலிருந்து பிரித்துக் கொண்டு வந்து எங்கு நட்டாலும்

துளிர்த்தெழுவாள்.அங்கு அவளுக்கு  சாதகமான சூழ்நிலையென்றாலும்

பாதகமான சூழ்நிலையென்றாலும்,தனக்கு அதை சாதகமாக்கி,ஒரு சிறந்த

இல்லத்தரசியாகி, மரமாகி,கிளைப் பரப்பி,காய்கனிகளுடன், கம்பீரமாக

நிற்பாள்.தனக்கு அனுசரணையாக நிற்கும் தன் குடும்பத்தையும் கம்பீரமாக்கி,

அதன் கம்பீரத்தையும்,கௌரவத்தையும் காத்து நிற்பாள்.இத்தகைய சிறப்பு

மிக்க இல்லத்தரசிக்கு,எது இன்றியமையாதது?தன் பொறுப்புகளை சிரமமின்றி

திறம்பட மேற்கொள்ள,அவளுடைய,சிரமங்களை புரிந்துக் கொண்ட

அனுசரணையாக செயல்படும் குடும்பம்தானே தேவை?.


   இத்தனை பெருமையுள்ள பெண்மை,கல்வி பெற்று,அதன் மேன்மை

உணர்ந்து செயல்படும்போது,அதன் சாதனைகளுக்கு எல்லையுண்டோ?

இம்மாதிரியான தருணங்களில் அவளுக்கு அவளது இல்லத்தைப் போலவே,

பணிப்  புரியும் இடங்களிலும்,அவளது சிரமம் புரிந்து ஒத்துழைக்கும்

இயல்பை அவள் எதிர்ப்பார்க்கிறாள். அதுக் கிட்டும்போது அவள்

பணியிடங்களிலும்,தன் பொறுப்பிற்கு தகுந்தபடி தாயாக,உடன்

பிறந்தவளாக,ஒரு நல்லத் தோழியாக தம் சகப் பணியாளர்களின் சிரமம்

குறைப்பாள்.


   சுருங்கச் சொல்வதென்றால்,இல்லங்களில் ,"இது பெண்களுக்கானப்

பணி. "என்று ஒதுக்கி,விலகியிராமலும்,பெண்களின் சுறுசுறுப்பையும்,

அவர்களின் நேர்த்தியான செயல்பாட்டையும் தத்தம் சுயநலத்திற்கு

பயன்படுத்திக் கொள்வதை தவிர்த்து,அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து,

அவளது திறமைகளுக்கு வாய்ப்பளித்து, அவளுக்கு நியாயமான உதவிகள்

தேவைப்படும்போது,குடும்பம்முழுவதும் அனுசரணையாக நிற்கும்போது,

பாதுகாக்கப் படுவது அந்தப் பெண்ணின் உடல்,மன நலம் மட்டுமல்ல.அந்த

குடும்பத்தின் உடல்,மனநலமும் கூட.அது போலவே பெண்ணின் பணியிட

செயல்பாடுகளின் சிறப்புக்கள் அனுசரணையுடன் போற்றப் படும்போது

 பணியிடங்களின் செயல்பாடுகளும் எவ்வித சிக்கல்களுமின்றி

அமைதியுடனும் பாதுகாப்புடனும் செயல்படும்.அதன்  வளர்ச்சிக்கும்

வாய்ப்புக்கள் அதிகம்.


   இன்னும் தெளிவாக செப்ப வேண்டுமென்றால்,அகத்திலும்,புறத்திலும்,

நேர்த்தியாக செயல்படும் பெண்கள் மனமாரப்  போற்றப் பட வேண்டும்.

மனமார அவளுக்கு ஒத்துழைப்புத்  தரும் பண்பு வேண்டும்.அவ்வாறு இல்லை

 எனில், எங்கும்,எதிலும் வளர்ச்சியையும்,செழுமையையும் காண்பது அரிதாகி

விடும்.இது நிதர்சனமான உண்மையாகும்.   
.    


 


   


Thursday, June 19, 2014

13.Ennai uuri niiraada virumbu

நீராடுதல் சுகம்;சுகமோ சுகம்;

அதிலும்,

 நல்லெண்ணெய் ஊறி நீராடல்  பரம சுகம்.

அதிலும்,

ஆற அமர நிதானமாய் நீராடல்

 நினைவில் நிற்கும் சுகம்.

அதிலும்,



நல்லெண்ணெயுடன், மூத்தோர் சொற்படி

சேர்க்கும் பொருள் சேர்த்து இளஞ்சூட்டில்

அன்பானக் கரங்கள் அங்கம் அங்கமாக,

 அழகாக, இதமாக,பதமாக  பாசமுடன்,

 உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து வர,

அந்த பரிவின் நினைவில் நீராடல்,

 என்றும் மனதில் நிறைந்து நிற்கும் சுகம்.




இந்த இதமான நினைவுகளால் மனம் குளிர,

பதமான எண்ணெய் நீராடலால்  உடல் குளிர,

அகமும்,புறமும் அமைதியும்,ஆனந்தமுமாக களிப்புற,

வேறென்ன வேண்டும்?நாளெல்லாம் நலமுடன் ஒளிர?



ஒரு நாள் எண்ணெயை நட்பாக்கி நீராடல் ,

அது வரும் ஒரு வாரம் அகம்,புறம் நலம் காக்கும்;

எனவே வாரந்தவறாது எண்ணெய் முன் வைத்து நீராடல்,

வருடம் முழுதும் நம் அகம்,புறம் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம்.



  

Tuesday, June 17, 2014

12.Thavarugalai Unardhalaiyum,Unarthudhalaiyum Virumbu

   ஒரு கற்காலம்  தற்கால  நாகரீக வளர்ச்சியின் பற்பல பரிமாணங்களில்

மிளிர்ந்துக் கொண்டு பீடு நடையுடன் மேலும், மேலும் தன் பயணத்தில்

முத்திரை பதித்த வண்ணம் முன்னேறிக் கொண்டிருக்கிறதென்றால்,அதன்

பயணத்தில் நேரிடும்,இயற்கையான இடர்பாடுகளையும், செயற்கையான

தவறுகளையும் சரியாக்கி, சரியாக்க வாய்ப்புக்கள்ஏற்படுத்தி ,அதை

நேர்படுத்திக் கொண்டவருவதனால்தான்,எல்லாத் துறைகளிலும் வியத்தகு

வளர்ச்சி ஒரு நடைமுறை போல் தன் முத்திரையைப்   பதித்துக்  கொண்டே

வருகிறது. இதன் விளைவுகள்தான் பண்பாடுகளாகவும் பிரதிபலிக்கின்றன.


   இந்த விதி,தனிமனித வாழ்வியலுக்கும் சால பொருந்தும்.அதாவது,நம்

வாழ்வில் நேரிடும் அதே இயற்கையான இடர்பாடுகளையும்,செயற்கையான

தவறுகளையும்நாம்சரியாக்க,நேர்ப்படுத்தவாய்ப்பளிக்கத் தவறினோமானால்

நம் வாழ்விலும்,நம் உறவுகளிலும் எந்த  முன்னேற்றமும் ஏற்படாது.

முன்னேற்றமே ஏற்படாதபோது முத்திரைப் பதிக்கும் தருணத்திற்கு

வாய்ப்பேது?.


   தவறுகள் ஏற்பட ஏற்படும்போது ,அதனை சரிபடுத்தும் நம் முயற்சிகள்

வலுக்க வலுக்கதான் இல்லங்களிலும், உறவுகளிலும் நாகரீகமும்,பண்பாடும்

தலைத்தூக்க ஆரம்பிக்கும்.இயற்கையான தவறுகள்,தம் தவறுகள்

உணர்ந்ததும்,உணர்த்தப்பட்டதும் தெளிவுப்படும்.செயற்கையான தவறுகள்

தாமாகவும் தெளிவுப்படாது;தெளிவுப்படுத்த வாய்ப்புகளும்

அளிக்காது.இல்லங்களிலும்.உறவுகளிலும் ஒரு ஆனந்தமான அமைதி

நிலைப் பெற வேண்டுமெனில்,நம் செயல்பாடுகளில் உறுதியான ஒருதெளிவு

வேண்டும்.நம் உறவுகளும் இந்தத்  தெளிவுப் பெற  நாம்

உறுதுனையாகநிற்க வேண்டும்.


நம் செயல்கள் சரியானவையா?இல்லையா?;நமக்கு இது தேவையா?

இல்லையா? என சீர்த்தூக்கிப் பார்க்கும் தெளிவு நமக்கும் நம் உறவுகளுக்கும்

நிலை மாறாமல் இருக்கிறதா? என்று சரிபார்த்து, சரியாக்கிக்

கொண்டு    இருந்தாலே,நம் உறவுகளின் செயல்பாட்டில்

நாகரீகத்தையும்,பண்பாட்டையும் நிலை நிறுத்தலாம்.


   நம்மை விட்டு செல்வங்களாகக் கருதப்படும் எது நீங்கினும், நமக்கென்று

நான்கு மனித உறவுகள் எல்லா வகையான செல்வங்களாக நம்முன்

நம்பிக்கையின் சின்னமாக நிற்க வழிவகுக்க வேண்டுமெனில் நாமும்

நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற வேண்டும்.அதற்கு சிறந்த வழி

நாமும், நமது உறவுகளும் ஒருவருக்கொருவர் தத்தம் தவறுகளை சுட்டிக்

காட்டி தமக்குள் அதை சரி செய்துக் கொள்ளும்  மானசீகமான மதி

மந்திரிகளாய் ஒருவருக்கொருவர் இருக்க முயற்சிப்பது,அகத்திலும்,

புறத்திலும் மாண்புகள் நிறைந்த உறவுகளுக்கு வழி வகுக்கும்.      


   


     


Thursday, June 12, 2014

11.Aasaiyudan Vilaiyada Virumbu.

ஓடி விளையாடு பாப்பா,

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.

கூடி விளையாடு பாப்பா;

ஒரு குழந்தையை வையாதே பாப்பா.


   இது பாரதியின் விளையாட்டோடு பிரியமாய் விளையாடும் வரிகள்.ஆனால்

இந்நாளில் இதன் முக்கியத்துவம் புரியாமல் அல்லது  புரிந்தும் புரியாதவராய்

அல்லது புரிந்தும் அதற்கு முக்கியத்துவம் தராமல் இருக்கும் மனிதர்களை

காணும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.


   விளையாட்டைப்  புறக்கணிப்பவர்களை,மனிதத் தன்மையை இழந்தவர்கள்

என்றேக் கொள்ளலாம்.ஏனென்றால் எல்லா விளையாட்டுகளுமே எல்லா

மனிதத் தன்மைகளையும்  குறிப்பிட்டு செப்புபவைகளாகவே இருக்கின்றன.


உதாரணமாக,

   கால்பந்து,கைபந்து மற்றும் அதிகம் பேர் பங்கெடுத்து விளையாடப்படும்

விளையாட்டுகள் -ஒற்றுமை மற்றும் ஒருவரை ஒருவர் அனுசரித்து போகும்

பண்பாடு,ஒருவருக்கொருவர் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கை,

ஒற்றுமையின் பலம் இவற்றை நாம் உணர வழி வகுக்கிறது.


   திறந்த வெளி விளையாட்டுக்களும் மற்றும் உள் கட்டமைப்பில்

விளையாடப்படும் விளையாட்டுக்களும்  நம் உடல் ஆரோக்கியத்தையும்,

மன ஆரோக்கியத்தையும் பேணிக் காக்கின்றன.இவ்விரண்டும் பலதரப்பட்ட 

விளையாட்டுக்களை  தினமும் விளையாடுவதன்  மூலம் மேம்பட்டுக்

கொண்டேஇருக்கும்.மனமும்,உடலும் ஒன்றையொன்று சார்ந்துதானே

செயல்படுகின்றன.அந்த செயல்பாட்டில் ஒரே  மாதிரியான  சமநிலையுடன்

சீராக செயல்பட விளையாட்டுக்கள் பேருதவியாக இருக்கின்றன.


   இப்பொழுதைய காலக்கட்டத்தில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் ஒரு வரப்

பிரசாதமாக இருக்கின்றன.ஏனென்றால், பணிநிமித்தம் தத்தம் பூர்வீக

மண்ணிலிருந்து  இடம் பெயரும் சூழ்நிலையில்,நம் பூர்வீக மண்ணிலேயே

நாம் வசிக்கும்  உணர்வை தருபவை இந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கள்.

ஆனால் இந்த உணர்வின் மகிமையை பெரும்பாலான குடியிருப்புகள்

புரிந்துக் கொள்ளாதது பெரிய வருத்தமான விஷயமாகும்.அவரவர்

பகுதியில் நாள் முழுதும் அடைப்பட்டுக் கொண்டே இருந்துக் கொண்டு,

ஒரே கூரையின்கீழ் வாழும் அக்கம்பக்கத்தினரிடம் கூட ஒரு தோழமை

நிலையை வளர்த்துக்கொள்ள தயாராக இல்லாமல் இருப்பது ஒரு

நாகரீகமான  செயல் அல்ல  என்றே கூற வேண்டும்.


    இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளுக்கு ஒருவருடன் பழகி,

விளையாடி தம் எண்ணங்களை  பகிர்ந்துக்கொள்ள எங்கனம் வாய்ப்புக்

கிட்டும்?.கல்வி  ஒன்றையேக் குறிக்கோளாக கொண்டு விளையாட்டை

தம் குழந்தைகள்  புறக்கணிக்க வழி வகுக்கும் பெற்றோர்களின்  அறியாமை

.குழந்தைகளின் மனநிலையை அதிகமாகவே பாதிக்கின்றன.


   விளையாட்டுக்கள் நம்மை நாம் உணர வாய்ப்புக்களை ஏற்படுத்தி

தருகின்றன.அகமும்,புறமும் தத்தம் பலம் மற்றும் பலவீனங்களை உணர

வழி வகுக்கின்றன.தத்தம் வயதிற்கேற்ற பக்குவம் பெற வாய்ப்புக்கள்

உருவாகின்றன.அடிப்படை பண்பாடுகளை மெருகேற்றுகின்றன.பண்பாடுகள்

மெருகேற மெருகேற ஒருவரை ஒருவர் அனுசரித்து போகும் நாகரீகமும்

மெருகேறும்.மூளையின் செயல்பாடுகள் கூர்மைப் பெரும்.நமது மனம்

ஒருமுகப் படுத்தப்படும்.ஒன்றை ஒன்று சார்ந்து செயல் படும் அமைப்பில்

இருக்கும் நமது மனமும்,உடலும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும்

சீராகவும் செயல்படுவதற்கான மேம்பட்ட வாய்ப்புக்களை, பலவகையான

விளையாட்டுக்கள் பல வகையான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதால்

முரண்பாடுகளற்ற மகிழ்ச்சியான,எவ்விதமான நோய்களையும்,

அண்டவிடாத  சூழ்நிலை உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம்.அது நமது

 இல்லங்களிலும் பிரதிபலிக்கும்.


   அதனால் விளையாட்டின் பெருமையை உணர்த்தும், காலத்திற்கும் நிலைப்

பெற்றிருக்கும் நமது  கவி பாரதியின் கவிதைகளை மனதிலேற்றி,

விளையாட்டில்  நமது பங்களிப்பை மேம்படுத்துவது அறிவு பூர்வமான

செயல் என்பது திண்ணம்.