Wednesday, October 25, 2017

34. Thai Mann.

     தூரத்தில் கண்ட காட்சியை கண்டு துணுக்குற்ற செல்லம்மா, வேகமாக

அருகில் சென்றாள்.அங்கு தன் வயதை ஒத்த,தனக்கு தெரிந்த,தன் பாட்டி

ஊரை சேர்ந்த பெண் ஒருத்தி அரண்டு போய் நின்றிருந்தாள்.அவளும்,

செல்லம்மாவை போலவே,அருகில் இருக்கும் நகரத்தில் பட்ட படிப்பு

படித்துக் கொண்டிருக்கும் பெண்தான்.அவள் எதிரில் நவ நாகரிகமான,

வாட்டசாட்டமான வசீகரிக்கும் தோற்றத்தில் ஒரு வாலிபன் நின்று கொண்டு

இருந்தான்.நிச்சயமாக அவன் நகர் சார்ந்த வாலிபனாகத்தான் இருக்க

வேண்டும்.இல்லை என்றால் இப்படி ஒரு கிராமத்திற்குள் காலடி எடுத்து

வைத்து, கிராமத்தின் கலாச்சாரம் தெரியாமல் ,ஒரு யுவதியிடம் பேசும்

தைரியம் வந்திருக்காது.


      கலவரத்துடன் நின்று கொண்டிருந்தவளிடம்  "என்ன சித்ரா ! என்ன

விஷயம் ? " என நிதானமாக விசாரித்தாள். " வந்துட்டயா செல்லம்மா ! "

செல்லம்மாவை பார்த்ததும் நன்றாக தெளிந்து போனாள் சித்ரா. " இந்த

ஆள்  கொஞ்ச நாளா பஸ் நிறுத்தம் வரைக்கும் தொடர்ந்து வந்துகிட்டு

இருந்தான்.இப்ப என்னடானா ஊருக்குள்ளேயே வந்துட்டான் செல்லம்மா ".

" அது சரி ! அவன் எங்க வந்த என்ன ? நீ ஏன் இப்படி இருக்கே ? சக்தியின்

வடிவமடி நீ !அது புரியாமே விரைச்சு போய் நிக்கறே நீ ! ". இப்படி செல்லம்மா

சித்ராவின் சக்தியை அவளுக்கே புரிய வைக்கவும், அவள், " அதானே ! "

என்றவள்,முந்தானையை வரிந்து கட்டிக் கொண்டு திடமாய் நிலத்தில்

காலூன்றி நின்று வந்தவனை நேருக்கு நேராய் பார்த்தாள் .


     விஷயம் விபரீதமாக போவதை பார்த்ததும்,வந்த வாலிபன் பின்வாங்க

தொடங்கினான்.செல்லம்மா அவன் பக்கம் திரும்பி, " ஏண்ணே  உன்னை

பார்த்த படித்த பெரிய இடத்து புள்ளை மாதிரி இருக்கு. இப்படி நடக்கலாமா !

உங்க அம்மா,அப்பாவுக்கு தெரிஞ்சா எத்தனை விசனம்.அண்ணனுக்கு ஒரு

விஷயம் புரியலேன்னு நினைக்கறேன். புள்ளைங்கனா ,அதுவும் பெரிய

இடத்திலே பிறந்த புள்ளைங்கனா ,அம்மா,அப்பா,வீட்டு கௌரவத்துக்கு

குந்தகம் வராம நடக்க தெரியணும்.இல்லே சாதாரண குடும்பத்திலே

பிறந்துட்டோமா!  அப்போ அம்மா,அப்பா,வீட்டு கௌரவத்தை படிப்படியா

மேலே கொண்டு போக தெரியணும். இதற்கு விவரம்  தெரிஞ்ச நாள்லே

இருந்து நம்மை நாமே செதுக்கிட்டு இருக்க தெரியணும்னு எங்க பாட்டி

சொல்லிட்டே இருப்பாங்க.அண்ணனுக்கு யாரும் இதை சொல்லி தரலேயா?

அட ! இதைத்தானே அண்ணே நாம படிக்கிற படிப்பும் சொல்லி தருது ".


      " இன்னும் சொல்லப்போனா,இப்ப நமக்கு  இருக்கற உறவுகளும்,இனிமே

வரபோற உறவுகளும் நம்மை பார்த்து , " இப்படி ஒரு நல்ல உறவை 

எங்களுக்குதந்ததற்கு எங்களோட ஆயுசுக்கும் நன்றி கடவுளே ! அப்படின்னு

கடவுளுக்கு தினம்,தினம் நன்றி சொல்லிட்டிருக்கவேணாமா ? " என்ற

செல்லம்மா வந்தவனை உற்றுப் பார்த்தாள்.வந்தவன் கூனிக் குறுகி

போனான். இத்தனை விஷயங்கள் தன்னை சார்ந்து இருப்பது அவனுக்கு

இப்போதுதான் பிடிப்பட்டது..இருவரையும் பார்த்து, " ஸாரி ! எனக்கு என்னோட

அடிப்படையே என்னனு இப்பதான் புரிஞ்சது. அதை எனக்கு புரியவைச்சதுக்கு

ரொம்ப தேங்க்ஸ் ".  என்று  உண்மையை உணர்ந்து சொன்னான்.


       அதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், " என்ன செல்லம்மா ! என்ன

விஷயம் ? என்று கேட்டுக் கொண்டு வந்தார்கள். " ஒண்ணும் இல்லே மாமா !

இந்த அண்ணண் வழி தவறி வந்துட்டாரு. இப்பதான் சரியான வழியை

காட்டினோம்.இப்ப சரியா புரிஞ்சுகிட்டு இருக்காப்பலேதான் தெரியுது ".

என்றவள்,அந்த வாலிபனிடம் , " என்ன அண்ணே ! புரிஞ்சுதில்லே ! " என்று

சாதாரணமாக கேட்டாள். அவன் நன்றியோடு தலையசைத்து விடை

பெற்றான்.


       இந்த விவரத்தை எல்லாம் மிகுந்த ஆச்சரியத்துடன் விஜயனின்

கடிதத்தில் படித்துக் கொண்டிருந்தது விஜயனின் குடும்பம்.ஆனால்,

கடிதத்தின் முடிவில், அவன் எழுதியிருந்த இன்னொரு முக்கியமான

விஷயம் என்று குறிப்பிட்டு  எழுதி இருந்த விஷயத்தை படித்ததும்

அனைவரும் அயர்ந்து போனார்கள்.






                                                                                          தொடரும்.............






Saturday, October 21, 2017

33. Thai Mann.

     காந்தி தாத்தா,செல்லம்மாவின் இயற்கையான சுபாவத்தைப் பற்றி இப்படி

பல விஷயங்கள் மூலம் தெளிவுப் படுத்தி கொண்டே வந்த போது ,

விஜயனுக்கு தன் மருமகள் மேல் இருந்த புரியாத புதிர் விடுபட்டுக் கொண்டே

வந்தது.செல்லம்மாவின் ஒரே சித்தாந்தம்,ஒன்றே ஒன்றுதான்.எல்லோரும்

ஒண்ணா இருக்கணும்;நல்லா  இருக்கணும்;இப்போதைய தொழில் நுட்ப

வளர்ச்சியில் எல்லாமே சாத்தியம்தான்.ஆனால் அதற்கு ஒரு தெளிவுப்

பெற்ற மனம் வேண்டும்.எல்லோரும், நான்,நான் என்று தன்னை தானே

பார்த்துக்  கொண்டிருப்பதில்,அறியாமைதான் மிதமிஞ்சி  நம்மை ஆட்-

-கொண்டிருக்கிறது.இதனால், நாம் எத்தனை எத்தனை அகம் ,புறம், நிதி

சந்தானங்களை  இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் புரிந்து

கொள்ள தயாராக இல்லை. புரிந்து கொள்ள முயன்றால்தானே அந்த

சந்தானங்களை தக்க வைப்பதற்கான முயற்சியும் இருக்கும்.



         இப்போதுதான், தன் நிலையை பூரணமாக உணர்ந்து கொண்டான்

விஜயன்.தன்னை, தனக்கு உணர்த்திய  செல்லம்மாவை தன் மானசீக

குருவாக  நிறைந்த மனதுடன்  மனமாற   ஏற்றுக் கொண்டான்,

செல்லம்மாவிற்கு குருவாக இருக்க வேண்டிய செல்லம்மாவின்  தாய் 

மாமன் விஜயன்.



           அன்றும் எப்போதும் போல விஜயனிடமிருந்து வந்திருந்த கடிதத்தை

அயல் மண்ணில், விஜயனின் குடும்பம் மிகுந்த ஆவலுடன் படித்துக்

கொண்டிருந்தது. செல்லம்மாவை பற்றிய விஜயனின் மனநிலையே

அவர்களுக்கும் பற்றிக் கொண்டிருந்தது.பரிசுத்தமான மனதின் விவேகம்,

உலகின் எந்த பகுதியையும் ஸ்பரிசிக்கும் சக்தி உடையது. அந்த சக்தியை

விஜயனின் கடிதத்தை ஸ்பரிசிக்கும்போதே விஜயனின் மொத்த குடும்பமும்

பூரணமாக உணர்ந்தது.



          அன்று வந்த கடிதத்தில்,செல்லம்மா சம்பந்தபட்ட இன்னொரு

நிகழ்ச்சியைபற்றிய  விவரணம் இருந்தது. அன்று எப்போதும் போல ஒரு

மாலை நேரத்தில்தன் வேலைகளை எல்லாம் தன் இடத்தில் முடித்து விட்டு

தன் பாட்டிவீட்டுக்கு  வந்து கொண்டிருந்தாள் செல்லம்மா. வயல் வரப்புகளின்

மேல் நடந்து வந்துகொண்டே,தன் பாட்டி ஊரின் பரந்த வயல் பரப்புகளை

பாசத்தோடு பார்த்துரசித்தபடி வந்து கொண்டிருந்தாள்.மாலை நேரகதிரவனின்

செந்நிறஒளியிலும்,அதன் கதகதப்பிலும்,பயிர்கள் எல்லாம் ஆனந்தமாக

நடனமாடிகொண்டிருந்தன. செல்லம்மாவிற்கு விவசாயம் என்றால்உயிர்.தன்

ஊரிலும்  சரி, தன் பாட்டி ஊரிலும் சரி, விவசாய வேலைகளிலும்,அறுவடை

சமயங்களிலும்,சமயத்திற்கு ஏற்றவாறு,இரு ஊரார்க்கும் ஒரு கை

கொடுப்பாள்.படுக்கை ஆகி விட்டவர்களையும்,தவழும் குழந்தைகளையும்

தவிர ஒருவருமே வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது.அவர்கள்

எப்பேர்ப்பட்ட உத்தியோகத்தில் இருந்தாலும் சரி;ஏதாவது ஒரு விதத்தில்

விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இது செல்லம்மாவின்

எழுத படாத ஆணித்தரமான சட்டம்.


      இதற்கு அவள் வைக்கும் வாதம்,"என்னென்னவோ குறையுடன் மக்கள்

பிறக்கிறார்கள்.ஆனால் வயிறு இல்லை என்ற குறையுடன் பிறக்கிறார்களா ?

வாழ்க்கையை,ஆண்டு அனுபவித்து வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற

உத்வேகத்தை தருவதே வயிறுதானே ! எண்சாண்  உடம்புக்கு வயிறுதானே

பிரதானம்;அதனால் அவரவர் வயிற்றுக்கு ஏதாவது ஒரு விதத்தில்

விவசாயத்திற்கு  உறுதுணையாக இருப்பது ஒவ்வொருவரின் தார்மீக

கடமையாகும் " என்பது  அவளது அசைக்க முடியாத வேரூன்றிய எண்ணம்.


          இப்படிப்பட்ட செல்லம்மா விவசாயத்தை எப்படி நேசிக்கிறாள்  என்பது

உள்ளங்கை நெல்லிக்கனியாய் இரு ஊரார்க்கும் தெளிவாய் புரிந்த விஷயம் .

சுற்றும்முற்றும் பார்த்தபடி வயல்களின் அழகை ரசித்தபடி வந்து கொண்டு

இருந்தவள்,  தூரத்தில் ஒரு காட்சியை கண்டுத் துணுக்குற்றாள்.






                                                                                                     தொடரும்.................  

Sunday, October 15, 2017

31.. Thai Mann.

      செல்லம்மாவை பார்த்ததும்,திரு.குள்ளமணிக்கு முதலில் ஒன்றுமே

புரியவில்லை.ஆனாலும்., " வா !வா! செல்லம்மா ! நீ இந்த அண்ணனை

மறந்து ரொம்ப நாளாயிடுச்சேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.இப்பதான் வழி

தெரிஞ்சதாக்கும் ".என்று வாஞ்சையுடன் வரவேற்றான்.அதைக் கேட்டதும்,

தன் நெற்றியை தட்டியபடி செல்லம்மா, " அடக் கடவுளே ! நான் ஏன்

வரலேன்னு உன் புள்ளைக்கு தெரிஞ்ச விஷயம்கூட உனக்கு தெரியலயே !

இதுலே வேற,என்னோட ஆண்டு அனுபவிச்சிட்டிருக்கும், பெரியப்பாவுக்கும்,

பெரியம்மாவுக்கும் தலைச்சன் புள்ளையா வேற வந்து பொறந்திருக்கே

!"மனதிற்குள் மிகவும் அங்கலாய்த்து போனாள் செல்லம்மா.


     அதைக் கேட்டதும்,திடுக்கிட்டுப் போன திரு.குள்ளமணி, " என்ன

செல்லம்மா ! அப்ப இதுநாள் வரைக்கும்  ஏதோ ஒரு காரணத்தோடுதான்

வரமே இருந்தாயாக்கும்.ஏன் ? என்னாச்சு ?.என்று பதற்றத்தோடு கேட்டான்.

இனிமேல் தன் பருப்பு வேகாது என்று தெள்ளென புரிந்தது குள்ளமணிக்கு.

உள்ளே ஏதோ வேலை இருப்பது போல நழுவ பார்த்தாள். அதற்கு இடம்

தராமல் " என்ன அண்ணி !செய்ய கூடாததெல்லாம் செஞ்சு வச்சுட்டு,இப்ப

நழுவ பார்த்தா எப்படி ?  நம்ப ரெண்டு பேருக்கு நடுவுல இருக்கற இந்த

பஞ்சாயத்தை அண்ணனில்லே தீர்த்து வைக்கணும் ".குள்ளமணியின்

முகம் முழுவதுமாக இருண்டு போனது.


     தன் மனைவியின் முகம் போன போக்கைப் பார்த்துத் திடுக்கிட்டு போனான்

திரு.குள்ளமணி.செல்லம்மாவை பார்த்து , " ஏன் செல்லம்மா ! என்னாச்சு ? "

என்று மிகவும் பதற்றத்தோடு வினவினான்.செல்லம்மா " அண்ணன்கிட்டே

இப்படி ஒரு பிரச்சனையோடு வந்து முகம் பார்த்து பேச வேண்டியதா

ஆயிடுச்சேன்னு மிகவும் வருத்தத்தோடு வந்திருக்கேன் அண்ணே !ஆனாலும்

வேற வழியில்லை; பேசித்தான் ஆகணும் ". திரு. குள்ளமணிக்கு விஷயம்

பெரிய விவகாரமான விஷயம் என்று புரிந்து போயிற்று.


       எதுவும் பேசாமல் செல்லம்மாவை உற்றுப் பார்த்தான்.செல்லம்மா

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள். " அண்ணே ! தலைச்சன்

சம்சாரம் தாய்க்கு சமானம் அப்படிங்கற அர்த்தத்தை  நினைச்சு பாக்கறியா ".

கேட்டுவிட்டு திரு.குள்ளமணியை உற்றுப் பார்த்தாள் செல்லம்மா.எந்த

பதிலும் வரவில்லை. ஆனால்,திரு.குள்ளமணி இன்னும் உன்னிப்பாக

கவனிப்பது புரிந்தது. " அப்படின்னா, தலைச்சனா பொறந்திருக்கிறவன்

தந்தையா இருக்கணும்னுதானே அர்த்தம்.அப்படி அண்ணன் இருந்திருந்தா,

இப்படி ஒரு அனர்த்தம் நடந்திருக்குமா ? பெத்தவங்களையும்,கூட பிறந்த-

-வங்களையும் ஒரு கண்ணாவும், வாழ வந்தவளையும்,புள்ளை குட்டி-

-களையும் ஒரு கண்ணாவும்,பார்த்து நிக்கற,காத்து நிக்கற பக்குவம் வர

வேணாமா !.அப்படி இல்லாததனாலேதானே அண்ணி உங்க வீட்டு குருவிக்

கூட்டையும் கலைத்து விட்டு ,எங்க வீட்டு குருவிக் குருவிக் கூட்டையும்

கலைக்க பார்க்குறாங்க.நாம ஒண்ணா இருக்கணும்,நல்லா இருக்கணும்னு

யார் சொன்னாலும் நல்லா கேட்டு நடக்கணும்தானே அண்ணே ! ஏன்னா!

ஒண்ணா இருந்தாதானே நல்லா இருக்க முடியும். நல்லா இருக்கணும்னா

ஒண்ணா இருந்தாதானே அண்ணே முடியும்.அது புரியாமே,இப்படி எதிலுமே

கருத்தே இல்லாமே கண்ணு போன வழியிலும்,கால் போன வழியிலும்

போயிட்டு இருந்தா,குடும்பம்ன்ற கோயிலே சிதிலமாயிடாதா ? இப்படி

எல்லாம்அ ண்ணி என்னை பேச வச்சிட்டாங்களேன்னு எனக்கு ரொம்ப

வருத்தம் அண்ணே !"


      சொல்ல வேண்டியதை எல்லாம் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்

செல்லம்மா.இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த திரு.குள்ளமணி,

செல்லம்மாவிற்கு எதிரில் வந்து நின்றான். " நெகிழ்ந்த குரலில் ," தாயீ !

இதில் உன் அண்ணியை குறை சொல்ல  எதுவும் இல்லை;அவளுக்கு

தெரிந்தது அவ்வளவுதான்;பக்குவப்படாத அவளது அறிவை நான்

நம்பினதுதான் பெரிய குற்றம். இனிமே நான் தலைச்சன் புள்ளையா,

தந்தைக்கு சமானமா நடப்பேன்.உன் அண்ணியும்,எனக்கு தோள்  தந்து

அவளும் தாயாக இருக்க அரவணைத்து செல்வேன்.என் கண்ணை திறந்த

காளியாத்தா தாயி நீ ". நெக்குருகி போனான் திரு.குள்ளமணி.விக்கித்து

போய் நின்றிருந்தாள் வெறும் குள்ளமணி.






                                                                                  தொடரும்...............

Saturday, October 14, 2017

32.Thai Mann.

       செல்லம்மா எதிர்பார்த்தபடியே அடுத்த ஒரு வாரத்தில் அந்த சினிமா

பைத்தியம் குள்ளமணியின் குடும்பம்,அதன் ஆணி வேரோடு ஐக்கியமானது.

காரணம்,வேறென்னாவாக இருக்க முடியும்?.குள்ளமணியின் கணவன்,மிக

பிரகாசமாகத் தெளிந்ததால்,எல்லா விஷயங்களும்,மிக எளிதாக,மிக நலமாக

மிக நன்றாகவே முடிந்தது.சான்றோர்கள் காலங்லகாமாக நமக்கு  திரும்பத்

திரும்ப அறிவுறுத்துவது என்ன?. அறியாமைதான் சகல துன்பங்களுக்கும்

காரணம் என்றுதானே!.அது எந்த வகை அறியாமையாக இருந்தாலும்,அந்த

அறியாமை நம்மிடம் இருக்கும்வரை, நமக்கு நாமேதான் பலதரப்பட்ட

இன்னல்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனத்திலும்

நிதர்சனம்.அது அந்த குள்ளமணியின் கணவனுக்கு மிக தெளிவாகவேப்

புரிந்தது.தெளிவின் வெளிச்சத்தில் அவன் தன் தவறை திருத்திக் கொள்வதில்

இன்னும் தெளிவானான்.


     அந்த திரு.குள்ளமணி தன் குடும்பத்துடன் ஆதர்சத்துடன் ஐக்கியமான

அந்த நல்ல நாளுக்கு பின், ஒரு நல்ல மனிதரின் மரியாதையை மதிக்க

தெரியாமல்  அவரது மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்த  இருந்த அவரது

வாரிசை சந்திக்க சமயம் பார்த்துக் காத்திருந்தான்.அது வேறு யாரும்

இல்லை.செல்லம்மாவின் இரண்டாவது அண்ணன்தான்.அதற்கு சரியான

ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.அன்று பக்கத்து ஊரில் மாதம் ஒரு முறை

நடக்கும் பெரிய சந்தைக்கு இருவரும் ஒன்றாக போகும் வாய்ப்பை

திரு.குள்ளமணி ஏற்படுத்திக் கொண்டான்.செல்லம்மாவின் தமையனும்

அதற்காகத்தான் காத்திருந்தவன் போல இவனுடன் சேர்ந்து கொண்டான்.


      ஊரை விட்டு சிறிது தூரம் சென்றதும்,இருவரும் மனம் விட்டு பேசத்

துவங்கினர்.திரு.குள்ளமணி எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்று

ஆராய்வதற்குள்,செல்லம்மாவின் தமையன் நிதானமாக ஆரம்பித்தான்.

" அண்ணே ! நீங்க திரும்பவும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ஆனதிலே எனக்கு

ரொம்ப சந்தோஷம் அண்ணே !.அதற்கு என் தங்கச்சி செல்லம்மாதான்

காரணம்னு எனக்கு நல்லாவே தெரியும்.என் தங்கச்சிக்கு  எல்லாருக்கும் ,

எல்லாத்தையும் தெளிவாக்கற ஒரு பெரிய சக்தி இருக்கண்ணே !எங்க

வீ ட்டு உசுரே அவதான்னு எனக்கு இப்பத்தாண்ணே தெளிவாச்சு.அவ எங்க

வீட்டல வந்து பொறந்ததுக்கு நாங்க எல்லோரும்  ஏதோ பெரிய புண்ணியம்

 பண்ணியிருக்கோம்னு தோணுது அண்ணே ! ".


      " ஆமா தம்பி ! நிச்சயமா நீங்க எல்லோரும் பெரிய புண்ணியம்தான்

பண்ணியிருக்கணும்.எனக்கு என்ன தோணுதுன்னா,நீங்க மட்டுமில்லை தம்பி

! நம்ப  ஊரே ஏதோ பெரிய புண்ணியம் பண்ணியிருக்கணும்.இல்லேன்னா

நம்ப ஊருக்கே இப்படி ஒரு ஐயனாரு பொண்ணு மாதிரி பொறந்திருப்பாளா !

என்ன விவேகமான விவரம்:அவ முன்னாடி எனக்கு நானே ஒரு தூசி

மாதிரிதான் தெரியறேம்பா.இப்படி வெவரம் கெட்டு போய்

நின்னிருக்கோமேன்னு  ரொம்பவே விசனம் பட்டு போனேன் தம்பி !".

திரு.குள்ளமணியின் குரலில் உண்மையான வருத்தம் மேலோங்கியிருந்தது.

" ஆனாலும் தம்பி !செல்லம்மா சொன்னதற்கு அப்புறம்,என் வீட்டுக்காரி

எம்புட்டு பெரிய ஈனக் காரியம் பண்ண இருந்தாள்னு தெரிஞ்சதும் ஆடி

போய்ட்டேன் ! நீயும் என்னை மாதிரி விவரம் புரியாமே நிலை

தடுமாறிட போறியோனு ரொம்பவே கலங்கி போய்ட்டேன்.அப்புறம் உங்க

அப்பா முகத்தை என்னாலே  ஏறிட்டுதான் பாக்க முடியுமா சொல்லு.

அதனாலேதான் உன்னை எச்சரிக்கலாம்னுதான் அதற்கான சந்தர்ப்பத்தை

எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்.இப்பதான் அதற்கான சந்தர்ப்பம் கிடைச்சது.

ஆனால் அதற்கு தேவையே இல்லாமே நீ ரொம்பவே தெளிவா இருக்கே.

எனக்கு இப்பதான் போன உயிர் திரும்பிடுச்சுன்னு வச்சுக்கோயேன் ".


   " அண்ணே ! நீங்க வேறே ! என் வீட்டுக்காரி பேச்சுக் கேட்டு எம்மனசும்

ஒரு நிமிஷம் நிலை தடுமாறித்தான் போச்சு.ஆனா சமயத்திலே எங்க

செல்லம்மா என்னை கடுமையா எச்சரித்தாளோ! ,நான் முழிச்சிகிட்டேனோ!

போதுமடா சாமி ! நா மட்டும் என் வீட்டுக்காரி பேச்சை கேட்டு ஏதாவது எக்கு

தப்பா நடந்திருந்தேனா !,அந்த நினைப்பே சித்திரவதையடா சாமி! ".


   
            அந்த சித்திரவதையைத்தானே  திரு.குள்ளமணி மிக நன்றாகவே

அனுபவித்திருந்தான்.அந்த சித்திரவதையின் தாக்கம் , அந்த தாக்கத்தின்

 ஆழம் ,அவனுக்கு அவன் காலத்திற்கும் போதுமானதாக இருந்தது.

ஆனால் அந்த வலியிலும் ,வழி தவறி போய் விட்டோம் என்பது கூட

தெரியாமல் மேலும்,மேலும் தன் வழியை சிக்கலில் சிக்க வைத்துக்

கொண்டிருந்த அவனுக்கு  செல்லம்மா சரியான பாதையின் சரியான

புள்ளியை  மனதில் பதிய விட்டது ஒரு பெரிய பாக்கியமாக அமைந்து

போனது.இல்லை என்றால் அவன் இழக்க போகின்ற பாக்கியங்கள்

கொஞ்சமா ? நஞ்சமா ? அவன் அந்த வலியையும்,அந்த வலிக்கு ஒத்தடமாக

செல்லம்மா தந்த இதத்தையும் செல்லம்மா  வீட்டு  ஜீவனுடன் பகிர்ந்து

கொண்டான்.பகிர்தலில்தானே சகல சந்தானங்களும் வரிசை கட்டி

நிற்கும்.








               
                                                                                    தொடரும்......................


Thursday, October 12, 2017

30.Thai Mann.

     செல்லம்மாவிற்கு இந்த சின்ன அண்ணனின் இந்த விஷயத்தை இப்படியே

விடுவது சரியாக படவில்லை.எய்தவள் இருக்க அம்பை நோவதில் எந்த

பயனும் இல்லை.நேராக அம்பை எய்தவளிடம் சென்றாள்.


     செல்லாம்மாவை சிறிதும் எதிர்பார்க்காத அந்த அம்பு  எய்த அம்மணி என்ன

சொல்வது அல்லது என்னதான் செய்வது என்று எதுவும் புரியாமல்

வெலவெலத்து போய் நின்றிருந்தாள். தான் எய்த அம்பு ஒரு பெரிய

விவகாரமாக உருவெடுத்து நிற்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து போயிற்று.

ஆனாலும்,தன்னை உலுக்கிக் எடுத்துக் கொண்டிருக்கும் தன் உதறலைக்

கூடிய மட்டும் மறைத்தவாறு செல்லம்மாவை வாயார வரவேற்றாள்.


     " என்ன  செல்லம்மா! இப்பதான் இந்த அண்ணன்,அண்ணி ஞாபகம்

வந்ததாக்கும்;எங்க வீட்டு பக்கமெல்லாம் வர உனக்கு எங்கே நேரமிருக்கும்

சொல்லு?".குத்தலாக கேட்டாள் குள்ளமணி அண்ணி.அவள் சற்றுக்

குள்ளமாக இருப்பதால் ஊரில் எல்லோரும் அவளை அப்படித்தான்

அழைப்பார்கள்.


      "ஆமா அண்ணி!   உங்க    வீட்டுக்கெல்லாம் வர எனக்கு நேரமே

இல்லைதான்; ஆனாலும்,நான் இங்கு வர ,நேரம் கண்டு பிடிச்சு வர மாதிரி

பண்ணிட்டிங்களே! சும்மா சொல்ல கூடாது;நீங்க பெரிய ஆளுதான்!"

பதிலுக்கு செல்லம்மாவும் குள்ளமணி அண்ணியை குதறினாள் .அந்த

குதறலில் குள்ளமணி  அண்ணி குன்றிதான் போனாள்.


      இவர்களது உரையாடல் சத்தம் கேட்டு,உள்ளிருந்து வெளியே வந்த

குள்ளமணியின் கணவனும், அவனது மூன்று குழந்தைகளும், வந்த

விருந்தாளி யார்? என பார்த்தவர்கள்,செல்லம்மாவை பார்த்ததும்

வியந்துதான் போனார்கள்.அவர்களில் மூத்தவன் பதினோராம் வகுப்பில்

அடி எடுத்து வைத்துள்ளான்.அவனுக்கும் எல்லோரையும் போலவே

செல்லம்மாவை மிகவும் பிடிக்கும்.ஆனால்,தன் அம்மாவின் பேச்சைக்

கேட்டு த் தன் அப்பா தனிக் குடித்தனம் வந்ததிலிருந்து,அவனுக்கு

செல்லம்மாவை  தொலைவில் கண்டாலே தன் வழித் தடத்தை மாற்றி

விடுவான்.செல்லம்மாவும்,இந்த அளவிற்காவது பையன் தெளிவாக

இருக்கிறானே என்று அவனை எதுவும் சொல்வதில்லை.தனக்கு அண்ணன்

முறையாகும் அவனது அப்பனுக்கே புத்தி வேலை செய்யாத போது இந்த

பிஞ்சை நொந்துக் கொள்வதில் என்ன பயன்? ஆனால்  இன்று வேறு

வழியில்லை.எல்லோரையும் ஒரு கை பார்த்து விட வேண்டியதுதான்.

செல்லம்மா,அவர்கள் எல்லோரையும் தீர்க்கமாக ஏறிட்டு பார்த்தாள்.


      அந்த பார்வையின் தீட்சணயத்தை தாங்க முடியாமல்,அண்ணன்தான்

முதலில் வாய் திறந்தார். " என்ன செல்லம்மா ! இந்த பக்கம்?நான் இந்த

வீட்டுக்கு வந்து வருஷம் இரண்டாவுது.வந்து எட்டி பாக்கவேயில்லையே ?

அந்த வீட்டிலே இருக்குறப்போ அண்ணே!அண்ணே!னு உங்க

அண்ணன்களுக்கு சமமா எங்கிட்டே பரிவு காட்டுவே ;இப்ப என்னாச்சு?

வரதேயில்லேயே ?."அண்ணன் வாஞ்சையுடன் விசாரித்தார்.


     " அடக்  கடவுளே! இந்த அண்ணன் இப்படியா அப்பிராணியா இருக்கணும்?"

செல்லம்மா ஒரு நொடி அயர்ந்து போனாள் .சரி அது அவர் பிரச்சனை.அதை

அவரே புரிந்துக் கொண்டு சரி செய்தால்தான்  உண்டு. நாம  இப்ப

விஷயத்திற்கு  வருவோம் என்று தீர்மானித்த செல்லம்மா ," அது சரி!நீ

எங்க நான் வரமாதிரி வச்சிருக்கே அண்ணே? "என்றாள்.அந்த குரலில்

அத்தனை கசப்பு. திடுக்கிட்டுப் போன அந்த அண்ணன்,பதறிப் போய் மேலும்

விசாரிக்கலானான் .





                                                                               தொடரும்............


   


Monday, October 9, 2017

29,Thai Mann.

       செல்லாம்மா என்றும் போல அன்றும் கொட்டடியில் பசுக்களுக்கான

பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுப்பட்டிருந்தாள்.அப்பொழுது, அவளது சின்ன

அண்ணனும்,அண்ணியும் சுற்றும் முற்றும் பார்த்தபடி தயங்கி,தயங்கி

செல்லம்மாவிடம் வந்தார்கள்.அவர்களது பாவனைகள் யாவும் ரசிக்கத்

தக்கதாக  செல்லம்மாவுக்கு தோன்றவில்லை.அவர்களை ஏறிட்டுப் பார்த்து

விட்டுத் தன வேலையத் தொடர்ந்தாள்.


      முதலில் அண்ணிதான் பேச்சை மிகவும் தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

" செல்லம்மா!உங்கிட்டே ஒண்ணு கேட்கலாம்னு வந்திருக்கோம்;உனக்கு

சரின்னு பட்டது அப்படின்னா,வீட்டிலே பெரியவங்க கிட்ட பேசி எங்களுக்கு

ஒரு நல்ல முடிவா சொல்லு" என்றவள் ஒரு பயம் கலந்த தயக்கத்துடன்

செல்லாம்மாவை ஏறிட்டு பார்த்தாள்.செல்லம்மா அண்ணியை உற்றுப்

பார்த்ததும் சின்ன அண்ணிக்கு உதறல் எடுப்பது வெளிப்படையாகவே

தெரிந்தது.செல்லம்மாவிற்கு அவர்களது இந்த அணுகுமுறை சரியாகவே

படவில்லை.அவளுள் ஒரு எச்சரிக்கை மணி ஒலித்திருக்க வேண்டும்.

நன்றாக திரும்பி தன் சின்ன அண்ணியை உற்றுப் பார்த்தாள் செல்லம்மா.

அவள் நின்ற தோரணையே வந்த இருவரின் வயிற்றிலும் புளியைக்

கரைத்தது.ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் திரும்பி விடலாமா என்று அவர்கள்

யோசிப்பது நன்றாகவே புரிந்தது.


      " சின்ன அண்ணனும்,அண்ணியும் சேர்ந்து வந்திருக்கிறதை பார்த்தால்

வந்த விஷயம் பெரிய விஷயம் போலத்தான் இருக்கிறது.ம்ம்... விஷயம்

என்னன்னு சொல்லுங்க! "செல்லம்மா ஆரம்பித்து வைத்தாள்.சின்ன

அண்ணன் எதுவும் பேசவில்லை.ஆனால் அண்ணி சிறிது தைரியம்

பெற்றவளாய் சற்று முன்வந்து செல்லம்மாவின் கைப்பற்றி," அதில்லை

செல்லம்மா! அண்ணன் இனியும்,அப்பா கீழேயே எல்லா வேலையையும்

பார்த்துட்டிருந்தா அவருக்கும் எப்போது பொறுப்பு வரும் சொல்லு?அதான்

எங்களுக்குனு கொஞ்சம் நிலபுலன்களையும்,அந்த தோட்டத்து வீட்டையும்

வீட்ல பெரியவங்ககிட்டே பேசி வாங்கி ..."அண்ணி முடிக்கவில்லை

செல்லம்மா இடைமறித்து " கொடுத்துட்டா என் அண்ணன் உங்களுக்கு

கீழே பொறுப்பா தினம்,தினம் சினிமா பாக்குற வேலை செய்வாரு

அப்படித்தானே ! என்ன இது ?அந்த சினிமா பைத்தியம் குள்ள மணியோட

யோசனையாக்கும் ? ".சீறினாள் செல்லம்மா.அந்த சீற்றம்  வந்த இருவரையும்

வாயடைக்க வைத்தது.மேலே எதுவும் பேசாமல் செல்லம்மாவை விக்கித்து

பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.


     செல்லம்மா வேறொன்றும் சொல்லவில்லை;தன் அண்ணிக்கு பின்னால்

நின்று கொண்டிருந்த தன் அண்ணனின் கையைப் பற்றி சற்று முன்னால்

இழுத்து அவன் முகம் பார்த்து  மிகத் தெளிவாக பேசினாள்." ஏண்ணே! ஒரு

பொண்ணு புகுந்த வீட்ல ஒரு நல்ல பெண்டாட்டியா எல்லா விதத்திலும்

புருஷனுக்கு பின்பலமா  நிக்கணும்;  முன்னாலே புருஷன் நின்னு கம்பீரமா

வேலை பாக்கணும்: பிறந்த வீட்ல பொண்ணு கம்பீரமா வலம் வரணும்;

அதற்கு  அவள் புருஷன் அவளுக்கு எல்லா விதத்திலும்  பின்பலமா

நிக்கணும்ணு நீ அண்ணிக்கு புரிய வைக்கலேயா? ".அண்ணன் எதுவும்

பேசவில்லை;அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். " அது சரி! உனக்கு அது

புரிஞ்சிருந்தாதானே நீ அண்ணிக்கு புரிய வைச்சிருப்பே! அதை நம்ப

அப்பா,அம்மாவையும்,நம்ப பெரிய அண்ணன்அண்ணியையும் பார்த்து

கத்துக்கிட்டிருக்க வேண்டாமா? எல்லார்கிட்டயும்இருக்குற

மாதிரி அறிவு,அறிவுன்னு  ஒண்ணு உங்கிட்டேயும் இருக்குணும்-

-தானே! அது கூட உனக்கு சரியான சகவாசம் உண்டா? இருந்திருந்தா அது

தப்பே பண்ணாதே;உன்னை சரியான வழியிலே இல்ல கூட்டிட்டு

போயிருக்கும்?".


          அந்த சின்ன அண்ணனுக்கு தன் எதிரில் நிற்கும் தங்கை,

தங்கையாக தெரியவில்லை.தாயாகத் தெரிந்தாள்.அவளது சாடலின் உச்சம்

அவளுக்கு தன்மேல் உள்ள அக்கறையின் உச்சிப்படி என்பது தெரிந்தது.இது

வரை செயலற்று இருந்த அவனது அறிவின் ஊற்றுக்கண் திறந்து

வெள்ளமாய்  பெருக்கெடுத்து ஓடியது.அது அவனது கண்களில் நிதர்சனமாக

தெரிந்தது.


         அதன் பிறகு அவன் வேறொன்றும் பேசவில்லை,திரும்பி மனைவியை

பார்த்தான்.திரும்பி தங்கையை பார்த்தான்.தன் அன்புத் தங்கையின்  முகத்தை

தன்  இரு கைகளால் ஒரு மலரை தாங்குவது போல தாங்கி கண்மூடி  உச்சி-

-முகர்ந்தான்.தன் மனைவி பின் தொடர அவ்விடம் விட்டு அகன்றான்.




                                                                                                   
                                                                                                         தொடரும்...........




Sunday, October 8, 2017

28.Thai Mann.

          வீடு வந்து சேர்ந்த பின்னும்,விஜயனால் தன்னை ஆசுவாசப்படுத்திக்

கொள்ள முடியவில்லை.காந்தி சித்தப்பா, செல்லாம்மாவை பற்றி

சொன்னதை எல்லாம் பிரமிப்போடு அசை போட்டுக் கொண்டிருந்தான்.அவர்

சொன்னமுதல் சம்பவம்:


           மாலை நேரம்.செல்லம்மா தன் பாட்டி வீட்டுக்கு கிளம்புவதற்கு

முன்னால் வீட்டிற்கு பின்புறம் அமைந்திருக்கும் கொட்டடியில் மாடுகளுக்கு

வைக்கோல் போட்டு தண்ணிக் காட்டி விட்டு எப்பொழுதும் போன்றே

அவைகளுடன் விடைபெறும்  பாவனையில்அவைகளை முதுகிலும்,கழுத்துப்

பகுதியிலும் ,முகத்திலும் வாஞ்சையாக தடவிக் கொண்டு பேசலானாள்.


         எல்லோருக்கும் மூத்ததாக இருக்கும் பசுவிடம், "சரி லட்சுமி ! நான்

ஆத்தாவை  பார்க்க கிளம்புறேன்.எல்லோருக்கு வயிறும் ,மனசும்

நிரம்பியிருக்கும்னு நம்பறேன்". மற்ற பசுக்களைக் காட்டி" எல்லோரையும்

பத்திரமா பார்த்துக்கோ என்ன! " என்றாள்.அந்த லட்சுமி பசுவும் புரிந்துக்

கொண்டதை  போல நன்றாகவே தலையாட்டியது.ஏனென்றால்,அதற்கும்,

மற்ற பசுக்களுக்கும் செல்லம்மா என்றால் உயிர்;உயிர் என்றால் அது

செல்லம்மா.


       செல்லம்மாவின் அம்மாகூட செல்லம்மாவை செல்லமாக திட்டிக்

கொண்டு இருந்தாள் ."ஏன் செல்லம்மா! நீ எங்களை யாரையும் கொட்டடி

பக்கமே விடாமெ நீயே எல்லாவற்றையும் பாத்துக்கிட்டா சரிப்படுமா!

நாளைக்கு நீ கல்யாணமாகி போன பிறகு,உனக்காக இவை ஏங்கி படுத்துடும்

செல்லம்மா!எனக்கு ரொம்பவே பயமா இருக்கு". "நீ ஏம்மா பயப்படறே?நான்

இதோ பக்கத்தில் இருக்கும் ஆத்தா  ஊரிலேதானே வாழ்க்கைப்படப்

போறேன்;நானே தினமும் வந்து கவனிச்சுக்கிறேன்.நீ எதற்கும் கவலைப்

படாமே வேலையை பாரு ".இது செல்லாம்மாவின் பதில்.மிகவும்

தெளிவானஉறுதியான பதில்.அம்மா அசந்து போவாள்.


      செல்லம்மாவின் பதிலில் தெரியும் தெளிவையும்,உறுதியையும் பார்த்து,

அம்மா ஆரம்பத்த்தில் சிறிது குழப்பத்துடன் கேட்டார் , "ஏன் செல்லம்மா!

ஆத்தா  ஊரிலே,உனக்கு யாரையாவது மனசுக்கு பிடிச்சிருக்கா? உன் கல்யாண

விஷயத்திலே இவ்வளவு உறுதியா இருக்கே!"."என்னம்மா பேசறே! வீட்டிலே

இத்தனை பேரு இருந்துட்டு எனக்கு பிடிச்சவனை நான்தான் பார்க்கணு-

-மாக்கும்! நல்ல கதையா இருக்கே! ". " அதில்லே  செல்லம்மா!ஆத்தா

ஊரிலேதான் வாழ்க்கை படுவேன் இவ்வளவு உறுதியா சொல்றியே!அதான்

கேட்டேன் ". அம்மா கேட்டு வாய் மூடவில்லை.காட்டமாக பதில் வந்தது

செல்லாம்மாவிடமிருந்து.



      " உன் உடன் பிறப்புக்கு தன் அம்மான்னு தோணி  இருந்திருந்தா  நான் ஏன்

அந்த ஊரிலேதான் வாழ்க்கை படணும்னு  இப்படி கிடந்து அல்லாடறேன்.

உன் உடன் பிறப்புக்கு அப்படியே வானத்திலிருந்து குதிச்சிட்டாத நினைப்பு.

அப்படியே குதிச்சுட்டு இருக்கும்போதே வளர்ந்து, படிச்சு முடிச்சு,  வேறே

மண்ணிலே வேலைக்கு போயிடுச்சு போல! பெத்த தாயை, தாய்மண்ணை ,

சொந்தபந்தத்தை, தன கடமையை  எல்லாத்தையும் குழி தோண்டி

புதைச்சுட்டு  பறந்து போயாச்சு. நன்றி கெட்ட ஜென்மம்! ".செல்லம்மாவின்

காட்டமான பதிலில் அவளது அம்மா உறைந்து போனாள்.அது மட்டும்

அல்ல.அந்த பதிலில்,  செல்லம்மா  தன் பாட்டியின் மேல் கொண்டிருக்கும்

நிதர்சனமான அன்பின்  ஆழமும், அந்த ஆழமான அன்பின்  வெளிப்பாடான

 ஒரு நித்ய பூரண கரிசனமும்  தெளிந்த நீரோடையாய் தெளிவாகி போனது

அவள் அம்மாவுக்கு. ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் அவ்விடம் விட்டு

 நகர்ந்தாள்.



         முதல் சம்பவத்தை அசை போடும்போதே விஜயன் அயர்ந்து போனான்.

எல்லாமே குடும்பத்திலிருந்துதான் அதாவது வீட்டிலிருந்துதான் ஆரம்பம்

என்பது எவ்வளவு எதார்த்தமான,நிதர்சனமான உண்மை.அதில் முதல்

ஆரம்பமாக இருக்க வேண்டியது உறவுகளின் உணர்தல்தான் என்று

விஜயனுக்குத் தோன்றியது.உறவுகளை உணரும்போதுதான் அந்த

உறவுகளின் தொடர்புகள் நைந்து போக விடாமல் பேண முயற்சிப்போம்.

அதன் காரணமாக நம் அருமையான உறவுகளின் தொடர்புகளை அழகான 

தொடர்கதையாக்க  விடாமல்  முளைக்கும் இடையூறுகளை  லாவகமாக

களையும் ஒரு நிதானமும், நேர்த்தியும்  நம்முள்  ஒன்றாக கைகோர்த்து,நம் 

உறவுகளை நிலைத்து செழிக்கச் செய்யும்.செல்லம்மாவிடம் அந்த 

உறவுகளின் உணர்தல் அவளுள் பொக்கிஷமாக நிரம்பியிருப்பது விஜயனுக்கு

தெள்ளத் தெளிவாக புரிந்து போனது.அதன் மூலம் உறவுகளை

மேம்படுத்துதலின் உன்னதத்தை ஆழமாக புரிந்து கொண்டான்.


       
       அடுத்த சம்பவத்தை அசை போடும் முன் தன்னை திடப் படுத்திக்

கொண்டான் விஜயன்.





                                                                                                   தொடரும்..............