Friday, September 18, 2015

18.Thai Mann.

   விஜயன் தமக்கையின் வீட்டில் அந்த பத்ரகாளியின் வருகைக்காக இருட்டும்

வரைக்  காத்திருந்தும் அவள் வரவேயில்லை.வேறு வழியின்றி வீட்டில்

எல்லோரிடமும் விடைப் பெற்று சோர்ந்த முகத்துடன் வீடு வந்து சேர்ந்தான்.

தமக்கையின் வீட்டிலும் பெரும் அசௌகரியத்துடன் விஜயனை வழியனுப்பி

வைத்தார்கள்.


    விஜயனின் சோர்ந்த முகத்தை பார்த்ததும்,அவனது தாய்க்கு எல்லாமே

புரிந்து போயிற்று.ஆனால் தனது கண்ணான மகனை எப்படி ஆறுதல் கூ றி

அவனை தெளிவுப் படுத்துவது என்பதுதான் புரியவில்லை. மேலும் விவரம்

எதுவும் கேட்டு  தனது அருமை மகனை சங்கடப்படுத்த விரும்பாமல்  அவன்

அலுப்புத் தீர குளித்து விட்டு வரட்டும் என்று உள்ளே சென்று துண்டை எடுத்து

 வந்து அவன் தோள் மீது  போட்டு விட்டு அவனைக் கொல்லைப்புறம்

அனுப்பி வைத்தார்.


    ஆனால் அந்த குளிர்ந்த நீராலும் விஜயனை ஆசுவாசப்படுத்த

முடியவில்லை. தமக்கை வீட்டிற்கு புறப்பட்டபோது உண்டான உற்சாகம்

முற்றிலுமாக வடிந்து போனது.குளித்து முடித்து வந்து உண்ண அமர்ந்த

பின்னும் அவனது மனது ஒரு நிலையில் இல்லாமல் தத்தளித்துக் கொண்டே

இருந்தது.தட்டில் கன கம்பீரமாய் வீற்றிருக்கும்,ஆவிப் பறக்கும்,விதவிதமான,

கண்ணுக்கு இதமான உணவு பதார்த்தங்கள் அனைத்தையும் விஜயன் எவ்வித

உணர்வும் இன்றி பார்த்த வண்ணம் இருந்தான்.

 
     ஒரு  விஷயம் அவனது மனதை குடைந்துக் கொண்டே இருந்தது.ஒரு

இருபது இருபத்திரண்டு வயது பெண்ணிற்கு, ஏறக்குறைய இருபது ஆண்டுகள்

பணி  நிமித்தம் வெளி நாட்டில் இருந்து விட்டு தாயகத்திற்கு வந்திருக்கும்

தாய் மாமனை பார்க்க விரும்பாமல் தவிர்க்கிறாள் என்றால்,ஏதோ பெரிய

விஷயமாகத்தான் இருக்க வேண்டும்.அது என்னவாக இருக்கும் என்பது

விஜயனுக்கு பிடிபடவேயில்லை.


   "ஏம்ப்பா! என் மகனுக்கு எல்லாமே பிடிச்சதாதானே ஆசையா சமைச்சி,

அழகா தட்டிலே எடுத்து வச்சிருக்கேன்.எம்புள்ளை சாப்பிடற அழகை

கண்ணார பார்த்து ரசிக்கத்தானே பக்கத்திலேயே தவமா உக்காந்திருக்கேன்.

எதையுமே தொடாமே இப்படி பார்த்துட்டே இருந்தா எப்படி சாமி? இப்போ

எம்பையனோட   நாக்கு பழைய ருசி எல்லாத்தையும் மறந்திடிச்சோ?". என

விஜயனின்  அம்மா விஜயனின் கைப்பற்றி அரற்றத் தொடங்கவும் விஜயன்

விழித்துக் கொண்டான்.


   அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்.அம்மாவின் அன்பு காட்டாற்று வெள்ளமாக

பிரவாகமெடுப்பதைக் கண்டான்.அந்தப் பிரவாகத்தில் தன் உடலும்,உணர்வும்

ஒரு சேர அதிர்ந்துக் கொண்டிருப்பது புரிந்தது.தன் அம்மாவின் அருகாமை

அவளது முந்தானையில்தான் இருக்கிறது என்ற சூட்சமத்தைப் புரிந்துக்

கொண்டு அதைப் பற்றியப்படியே,அவளை சுற்றிச் சுற்றி வந்த தன் சிறு

வயது உலகம் அவன் கண்முன் விரிந்தது.


    தன் உடலையும்,உணர்வுகளையும் ஒருமுகப்படுத்தினான்."எனக்குப்

புரியாத புதிர்களெல்லாம் புரிகிறபோது புரியட்டும்.இப்போது அம்மாவை

எந்த விதத்திலும் சங்கடப்படுத்த வேண்டாம்" என முடிவெடுத்தவனாய்

தட்டிலிருந்த பதார்த்தங்களை கண்கள் விரியப் பார்த்தான்.


     சிறுப் பிள்ளைஆகி அம்மாவின் முன் கை நீட்ட,அம்மாவின் கண்ணில்

அருவியாய் நீர் ஊற்று தடம் பதித்தது.அதனை தன் முந்தானையால்

விலக்கியப்படி  தன் பிள்ளையின் நீட்டி,மடங்கி,மறுபடியும்,மறுபடியும்

நீட்டி,நீட்டி மடங்கும் கைகளில்,ஒவ்வொரு பலகாரமாக அதற்கான

சட்னி,சாம்பாருடன் தோய்த்து தோய்த்து வைத்து,பலகாரங்களின் ருசியை

பலமடங்காக்கினார் அம்மா.ரசித்து,ருசித்து உண்ட வண்ணம் இருந்த

விஜயனுக்கோ,தான் இப்போதுதான் தன் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்து

கொண்ட கும்பகர்ணனாய் உணர்ந்தான்.


    ஒவ்வொரு பலகாரமும்,அதற்கான சரியான இணையுடன் இணைந்து

அதற்கான பிரத்யோக ருசியுடன் நாக்கு மொட்டுகளில் கரைந்து அதற்கே

 உரித்தான உணர்வு பின்னணிகளை உசுப்பி விட்டது.மெய் மறந்து உண்டுக்

களித்தான் விஜயன். அதனைக் கண்டுக் களித்தாள் அவனது தாய்.


   என்றைக்கும் இல்லாது மிக ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுத் திரும்பினான்

விஜயன்.கண்கள் பளிச்சென்று திறந்தன.மனதும்,சாணியில் மெழுகி,பரந்து

இடப்பட்ட வாசல் கோலம் போல குதூகலித்தது. விடிந்தும்,விடியாத காலை

நேரங்களின் பரிச்சயம் கவிதை.எல்லோரது மனதையும் தெளிவுப் படுத்திக்

கொண்டே செல்லும் தென்றல்.விஜயன் அம்மாவைத் தேடிக் கொண்டே

வெளியில் வர,அவனது தெருவே அகமும்,முகமும் அன்றலர்ந்த மலராய்

மலர்ந்து அவனுக்கு முகமன் கூறியது.இளகிப் போனான் விஜயன்.


   ஆனால் அன்று மாலையே அவனது இளகிய மனம் இறுகி போகும்படியாக

பூ ஒன்று புயலாகி வந்து நின்றது.






                                                                                                 தொடரும்...............    

   



       

Friday, July 3, 2015

17.Thai Mann.

      தமக்கையின் பதிலால் அதிர்ந்துதான் போனான் விஜயன்.பிறகு அங்கிருந்த

எல்லோரையும் ஒரு முறை உன்னிப்பாகப்  பார்த்தான்.எல்லோரது முகமும்

ஒரே உணர்ச்சியைத்தான் காட்டின. அதாவது ஒரே உணர்ச்சியை  அதாவது

ஒரு வகை திகில் நிறைந்த முகங்களாக தென்பட்டன.ஒன்றும் புரியாமல்

எல்லோரையும் இன்னொரு முறை உற்றுப் பார்த்தான்.


    "என்னக்கா! என்ன விஷயம்? செல்லம்மா பேரைக் கேட்டாலே ஏன்

எல்லோரும் ஒரு மாதிரியா இருக்கீங்க?நான் வருவது அவளுக்குத்

தெரியாதா? எல்லோருமே இங்கே இருக்கறப்போ அவள் மட்டும் எங்கே

போனாள்?.எவ்வளவு ஆசையா வந்திருப்பேன் ,எல்லோரையும் ஒண்ணா

பார்க்கலாம்னு.எங்கே அக்கா போயிருக்கா நம்மக் கடைக்குட்டி செல்லம்மா?".


   விஜயன் என்னமோ கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் கொண்டேதான்

இருந்தான். ஆனால் எந்தக் கேள்விக்கும்  பதில்தான் வரவே இல்லை.

குழம்பிப் போனான் விஜயன்.மாமாவைத் திரும்பிப் பார்த்தான்.

அவரிடமிருந்து நீண்ட பெருமூச்சுதான் பதிலாக வந்தது.அரண்டுப்

போனவனாய் எழுந்து தன் தமக்கையின் அருகில் வந்து அமர்ந்தான்.


    தமக்கையையே  உற்றுப் பார்த்தவாறு  இருந்தான்.அவனது நிலையை

சகஜமாக்க மாமா அவருக்கே உரிய சாதுரியத்துடன் விஜயனின் கவனத்தைத்

தன் பக்கம் திருப்பினார்."அது ஒண்ணுமில்லை தம்பி! செல்லம்மாவுக்கு உங்க

மேலேயும்,உங்க குடும்பத்து மேலேயும் சொல்லவொண்ணா கோபம்.அதை

"கோபம்" அப்படின்னு சாதாரணமா எடுத்துக்க முடியாது தம்பி! உங்கக்கா

சொன்ன மாதிரி பத்ரகாளி கோபம் தம்பி! எனக்கும் செல்லம்மாவோட அந்த

கடும் கோபம் நியாமானதுதான்னு படுது".


    மாமா என்னாவோ சாதாரணமாகத்தான் சொல்வது போல சொன்னார்.

ஆனால்,அதில் உள்ள வீரியம், சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விதமாக

இல்லை.விஜயனுக்கு திக்கென்றிருந்தது.செல்லம்மாவை,கடைசியாக

ஒன்றரை வயதுக் குழந்தையாக தன்  தமக்கையின் இடுப்பில் ஒன்றி

இருந்தபோது பார்த்தது.இப்போது இவர்கள் எல்லோரும் தரும் அறிமுக

படலத்தை நினைத்தாலே ஒரு மாதிரி படபடவென்று இருந்தது.



                                                                           
                                                                                                                     தொடரும்...........  


          

Saturday, January 3, 2015

16.Thai Mann.

   தமக்கையின் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் குளிர்ச்சி மிகவும் இதமாக

இருந்தது விஜயனுக்கு.உயரமான உத்தரங்களும்,விஸ்தாரம் மிகுந்த

அறைகளும்,விசாலமான முற்றமும்,பரந்து விரிந்த வாசலும்,நேர்த்தியான

பாராமரிப்பும், அதனுடன் ஒன்றியிருந்த  தூய்மையும் மனத்தைக் கொள்ளைக்

கொண்டது.தேவையற்ற சாமான்கள் கண்களுக்குத் தட்டுப் படவேயில்லை.

எல்லாம் அதற்கான தனியறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.விஜயன்

அனுமானித்தான்.


   வீட்டில் எல்லோரும் முக மலர்ச்சியுடந்தான் இருந்தார்கள்.ஆனால்

அதையும் மீறி ஒருக் கலவரம் அவ்வப்போது எல்லோரையும்த் தொற்றிக்

கொண்டு வருவதும்,போவதுமாக இருந்தது.மாமா,"என்னத் தம்பி!ரொம்ப

நாளைக்கப்புறம் ஊர் ஞாபகம் வந்திருக்குப் போல!ஓய்வுப் பெற்றக்

கையோட அப்படியே கிளம்பி வந்துட்டிங்க போலிருக்கு.சௌக்கியமா

இருக்கீங்களா?வீட்டிலே எல்லோரும் சௌக்கியமா இருக்காங்களா?

குடும்பத்தை அழைச்சுட்டு வர சௌகரியப்படலையா?"


    மாமா என்னவோ சாதாரணமாக எதார்த்தமாகத்தான் பாந்தமாகத்தான்

 கேட்டார்.ஆனால் விஜயனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவனுக்கே

அவன் எதற்கு வந்தான் ஏன் வந்தான்?எது அவனை இவ்வளவு ஆக்ரோஷமாக

இழுத்துக் கொண்டு வந்தது?எத்தனை நாட்களுக்கு அவனது தாய் மண்ணில்

தங்க உத்தேசித்திருக்கிறான்?என்பது புரிபடாத போது குடும்பத்தை எப்படி

அழைத்துக் கொண்டு வருவது?.


    விஜயன் மெளனமாக மாமாவை ஏறிட்டுப் பார்த்தான்.மாமாவிற்கும்

அவனது சங்கடம் புரிந்திருக்கும் போல."சரி விடுங்க தம்பி! உங்களை

அழைச்சுட்டு வந்தாப்போல உங்க சொந்த மண்ணும்,ஊற்றும் அவங்களையும்

வெகு நாள் காக்க வைக்காமை இங்கே  அவங்க சொந்த இடத்திலே கால் பதிய

வைக்கட்டும்".மாமாவின் ஆதங்கம் தெளிவாகப் புரிந்தது.தன் குடும்பத்தை

பார்க்கும் ஆவல் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும்,அவரது உடலின்

ஒவ்வொரு  அசைவிலும் துல்லியமாகத் தெரிந்தது.உடலின் மொழியை நாம்

சரியாக மொழிப் பெயர்க்க தெரிந்தோமானால்,அது உண்மையைத் தவிர

வேறு எதையும் சொல்வதில்லை என்பது நிதர்சனமாகப் புரியும்.


    அதற்குள் அவனது தமக்கை,அவரது இரு மகன்கள் மற்றும் மருமகள்கள்

மற்றும் பேரக்குழந்தைகள் உதவியுடன்,ஒரு பெரிய மேசையை  நடு வீட்டில்

வைத்து,அதன் மேல் ஒரு மெல்லிய வெள்ளைத் துணி விரித்து மாலை நேர

பலகாரங்களை சுட சுட ஒன்றன் பின் ஒன்றாக அழகாக பரப்பி வைத்தார்.

அந்த பலகாரங்களின் பலதரப்பட்ட இதமான  வாசங்களும்,அது பரப்பி

வைக்கப்பட்ட அழகும்,கண்களையும்,நாவையும் ஒரு சேர சுவைக்க

அழைத்தன.


    எல்லோரும் ஒன்றாக அங்கங்கு அமர்ந்து அளவளாவிக் கொண்டே

ருசித்து உண்டனர்.ஒரு குடும்பத்தின்,அதன் அங்கத்தினர்களின்  அன்பின்,

கௌரவத்தின் பலமான,ஆழமான இழையை  நாம் சென்ற சிறிது

நேரத்திற்கெல்லாம் நம்மால் இனம் கண்டுக் கொள்ள முடியும்.விஜயனின்

தமக்கையின் குடும்பத்தில் அந்த அன்பான,பண்பான இழை எல்லோரையும்,

எல்லோருடனும் அந்தந்த உறவு முறைக்கேற்ப நேர்த்தியாக பிணைக்கப்

பட்டிருந்தது.அது மட்டுமில்லாது,ஒவ்வொரு தம்பதிகளுக்கு இடையிலான

அந்த காதலும்,நேசமும் அதை அவர்கள் வெளிபடுத்தும் விதமும்,இதமும்

தென்றல் எழுதும் கவிதை.


     ஒருவருக்கொருவர் உபசரிப்பதென்ன!ஒருவரை ஒருவர்

பரிகாசிப்பதென்ன!அவர்களது சரீரம்தான் வெள்ளந்தியாக அதிகம்

பேசியது.அதில் எல்லா வகையான அன்பின் ஆழமும் பிரதிபலித்தது.மிகவும்

இனிமையான ஒரு அனுபவம் விஜயனுக்கு.சிறிது நேரம் ரசித்து,ருசித்து

உண்டபின் விஜயன் கேட்டான்."ஆமாக்கா!எங்கே  நம்மக் கடைக்குட்டி

செல்லம்மா?"உடனே அங்கே சிறு சலனமும் இல்லாத நிசப்தம்.

தமக்கையிடமிருந்து ஒரு பெரும் பெருமூச்சுடன் ஒரு திகிலான பதில்

வந்தது.


     "அவசரப் படாதே தம்பி!அந்த பத்ரகாளியே ருத்ரதாண்டவமாடி உனக்கு

தரிசனம் தருவாள்".






                                                                                             தொடரும்..........