Tuesday, September 26, 2017

25.Thai Mann.

     "  காந்தி சித்தப்பாவின் இயற் பெயரே மறந்து போய்,ஊரில் எல்லோரும்

அவரை காந்தி என்ற பெயருடன்அவரை அழைக்க வேண்டிய முறையையும்

சேர்த்து அழைத்து அவரை பெருமை படுத்துகிறார்கள் என்றால் அவர்தான்

எத்தனை காந்தி விஷயங்களை அவர்களிடம் கொண்டு சேர்த்திருப்பார்.ஊர்

மக்களும் அவர் சொன்னதை எந்த அளவிற்கு உள்வாங்கியிருந்தால் அவர்

மேல் இத்தனை மரியாதை கொண்டிருப்பர்.அப்படி என்றால்,இவர்கள் நம் தேச

பிதாவின் தரிசனத்தை இந்த காந்தி சித்தப்பாவின் மூலம் அனு தினமும்

தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம்.இவர்களது

சாத்வீகமான இந்த வாழ்க்கை முறைக்கு காந்தி சித்தப்பாவும் ஒரு முக்கிய

காரணமாக  இருந்துக் கொண்டிருக்கிறார்.இத்தனைக்கும் அவர் எட்டாவது

வரைதான் படித்திருக்கிறாராம்.ஆனால்,தினமும்  ஊருக்குள்ளே

இருக்கும் அந்த சிறிய நூலகத்திற்கு போய் ஏதாவது ஒன்றை படித்துக்

கொண்டே இருப்பாராம்.அவரிடம் விஷய ஞானம் நிறைய இருக்கும்

போல." விஜயனின் யோசனை பலமாக இருந்தது.


     " என்ன தம்பி! யோசனை பலமா இருக்கும்போல;பேச்சையே காணோம்;

வாய்கால் வரப்பு வரை கூட வர சம்மதந்தானே? ".திடுக்கிட்டு சுய நினைவுக்கு

வந்தான் விஜயன். ''என்ன சித்தப்பா! இப்படி கேட்டுட்டீங்க! இந்த அக்கா

பொண்ணு செல்லம்மா  தன்னோட நடவடிக்கைகளாலே என்னை தினமும்

புறந்தள்ளி ரொம்ப வேதனைபடுத்துறா;நானு தாய் மண்ணையும்,தாய் மண்

சொந்த பந்தங்களையும் புறந்தள்ளி சீமைக்கு போய்ட்டேனாம்.என்னோட

வேலைக்கான சூழ்நிலை அந்த மாதிரி ஆயிடுச்சு; அக்கா பக்கத்து ஊரிலேயே  

இருக்கிற தைரியத்திலே சீமைக்கு போய்ட்டேன்.திரும்பி பார்க்கரதுக்குள்ளே

வேலையிலிருந்து ஓய்வு பெற நாளும் வந்தாச்சு.ஆனாலும்,எனது தவறு

மன்னிக்கவே முடியாத பெரிய தவறுதான்.பிறந்த மண்வாசனையை  மறந்தது.

செல்லம்மாவோட ரௌத்ரமும் மிகச் சரியானதுதான்.ஒரே குழப்பத்தில்

இருக்கேன்.மனசு ரொம்பவே பாரமாகி போச்சு.அதான் மனசை கொஞ்சம்

காத்தாட விடலாம்னு வெளியே வந்தேன்.சாமியே வந்த மாதிரி நீங்க

வந்தீங்க.உங்க அருகாமையும்,இந்த நிலா வெளிச்சமும்,இந்த தென்றல்

காற்றும் எம்மனசு பாரத்தை ரொம்பவே ஏறக்கிடுச்சு சித்தப்பா ". தன்னை

ஆசுவாசப் படுத்திக் கொண்டான் விஜயன்.


     காந்தி சித்தப்பா இலேசாக புன்முறுவலித்தது அந்த நிலா வெளிச்சத்தில்

மிகத் தெளிவாகத் தெரிந்தது.விஜயனுக்கு இளம் முறுவலின் அர்த்தம்

புரியவில்லை. அவரை ஏறிட்டுப் பார்த்தான்.காந்தி சித்தப்பா,"தம்பி! நீங்க

இப்படி யோசித்து பார்த்திருக்கிங்காளா?.ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா,

அந்த விஷயத்தை,நம்ம சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி, நமக்கு வேணுமின்னா

நமக்கு சாதகம் தரும் சூழ்நிலையாகவும் மாத்திக்கலாம்.வேணாமின்னா,அந்த

விஷயம் நமக்கு பாதகம் தரும் விஷயம் மாதிரியான சூழ்நிலையாகவும்

மாத்திக்கலாம்.ஆனாலும்,உலக நியதின்னு ஒண்ணு இருக்கு இல்லேப்பா!

அதற்கு பேர்தானப்பா எதார்த்தமும்,கண்ணியமும் ".


      விஜயனுக்கு புரிந்தது மாதிரியும் இருந்தது;புரியாத மாதிரியும் இருந்தது;

ஆனாலும் காந்தி சித்தப்பா இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல்," உன்

காதில் போட்டு வைக்கிறேன்.அதை மனதிற்குள் பாதுகாப்பாக இறக்கி

வைத்துக்  கொண்டாலும்,உன் சமர்த்து;இல்லை,இந்த காதில் வாங்கி,

இன்னொரு காது வழியே சருகாக்கி காற்றோடு  பறக்க விட்டாலும் மகனே

அது உன் பாடு ".என்பது போல தொடர்ந்து பேசினார்.


     "  இந்த எதார்த்தமும்,அந்த எதார்த்தத்தை கண்ணியமா கையாள்ற மனுஷ -

-தானேப்பா மனுஷன்.எதார்த்தங்கதுதான் நமக்குன்னு வாய்க்கப்பெற்ற

கடமைகள்;அவைகளை " சுமைகள் "என்ற கணக்கில் சேர்க்காமே, "சுகமான

சுமைகள் " அப்படின்னு நம்ம அறிவிலே சேர்க்க நமக்கு தெளிவு பிறக்கணும்,

அதுதானே கண்ணியமங்கறது.அந்த கண்ணியத்தை,ஏதாவது சாக்கு போக்கு

சொல்லி,தவிர்ப்பது,தவிர்க்க நினைப்பது மரியாதயை மதிக்க தெரியாதவன்

நிலை தம்பி!. தம்பியை, செல்லம்மா அந்த நிலையிலேதான் பாக்குது.அதுலே

எந்த தப்பும் இருக்கறதா எனக்குப் படலை".ஏன்னா,நம்ம செல்லம்மா,இந்த

எதார்த்தத்தையும்,கண்ணியத்தையும் ரெண்டு கண்களா பாவிச்சு அவை

காட்டுற வழியிலே போய்கிட்டு இருக்கு தம்பி! ".


      திடுக்கிட்டுப் போனான் விஜயன்.அவன் நிலையை கண்டதும்,காந்தி

சித்தப்பா," தம்பி செல்லம்மாவை பார்க்கும் போதெல்லாம் நான் பலமுறை

நினைப்பதுண்டு காவல் தெய்வம்தான் செல்லம்மாவாக பிறந்து

வந்திருக்கிறதோனு என்றவர்,செல்லமாவின் இன்னொரு பரிமாணத்தை

விஜயன் முன் வைக்க திகைத்துப் போனான் விஜயன்.





                                                                                                             தொடரும்.........  



   




  



     

Sunday, September 24, 2017

24.Thai Mann.

       மேலும் ஒரு வாரம் போனது.விஜயனின் நிலைமை அவனது தாய்க்கு

புரிந்து போனது.பேத்திக்கும்தான்.ஒரு நாள் மாலை பேத்தி வருவதற்கு முன்

தன் மகனிடம் இதைப் பற்றி பேச முடிவெடுத்து,பேச்சைத் தொடங்கினார்

தாய். " ஏன் தம்பி ! இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படியே இருந்துற

முடியும்? தம்பியோட வேலையெல்லம் பாதிக்குமில்லே! தவிரவும்,

தம்பியோட குடும்பமும்   தம்பிய பாக்க தவிச்சுட்டு இருக்குமில்லே? ".


      "  ஆமா! தம்பியோட குடும்பந்தான் தவிச்சுட்டு இருக்கும் ! தம்பியோட

பெத்த ஆத்தா எப்படி போனா என்னா! எங்கிட்டு போனாத்தா என்ன?முந்துன

உறவையும்,பிந்துன உறவையும் தாய் மண்ணிலே ஒண்ணாக்க பாலமாகற

பொறுப்பை உதறி தள்ளிட்டு,அசலூருலே, மண்ணோடு மண்ணாகற

வரைக்கும், காசு பின்னாடியே  ஓடற பெரிய்ய்ய்ய பொறுப்பு மட்டும்தானே

இருக்கு?".

     " ஒம்பிள்ளைக்கு.பெத்தவங்க வேண்டாம்: கூட பொறந்த பொறப்பும்

வேண்டாம்.பொறந்த மண்ணும் வேண்டாம்.அது மண்ணாங்கட்டியாகவே

போகட்டுமே! நமக்கென்னா போச்சு?என்னவோ சாமி சொல்லிடுச்சுங்கறதை

போல,ஒலகத்து காசையெல்லாம் தன்னோட கைபையிலே போட்டதுக்கு

அப்புறம்தான் மறு வேலைன்ற மாதிரி அப்படி என்னா காசு பின்னாடி

கண்ணுமண்ணு தெரியாமை ஓடிட்டிருக்கு நீ பெத்த புள்ளை!நெசமாலுமே

எனக்கு எதுவும் புரியலே ஆத்தா!". பொரிந்துத் தள்ளினாள் ஆத்தாவின்

பேச்சை கேட்டுக்கொண்டே வந்த செல்லம்மா.அவள் குரலில் அத்தனை

வெறுப்பு மண்டி கிடந்தது.


      திரும்பி பார்த்த ஆத்தா ஆற்றாமையில் அரற்றினார்;என்னவென்று;

"அதுதான் செல்லம்மா எனக்கும் புரியலே! ".சப்த நாடியும் ஒடுங்கி போயிற்று

விஜயனுக்கு. பாட்டியும்,பேத்தியும் உள்ளே போய் வெகு நேரமாகியும் திக்

பிரமைப் பிடித்து போய் அமர்ந்திருந்தான் விஜயன்.பிறகு நேரம் பார்த்தான்.

மணி எழரை தாண்டிவிட்டது.வெளியே சிறிது காற்றாடி விட்டு வரணும்

போல இருந்தது.தாயிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு இறங்கினான்.

தெருவிற்கு வந்து இரு புறமும் பார்வையை படர விட்டான்.நிலா ஒளி

குளுகுளுவென்று ஒரு நிறைவான இதம் தந்தது.எங்கிருந்தோ வந்த

மலர்களின் கதம்பமான வாசம் விஜயனுக்கு புத்துயிரூட்டியது.


     " என்ன தம்பி! நிலா வெளிச்சத்திலே காத்தாட வந்தீங்களா? " அடுத்தத்

தெரு காந்தி சித்தப்பா அருகில் வந்தார்.அவரு எப்பவும்,காந்தியை பற்றியே

பேசிக் கொண்டிருப்பதால்,அவருக்கு ஊரில் அந்த பெயர்.வயது ஒரு எழுபது

எழுபத்தைந்து இருக்கும். அவருக்கு மார்கண்டேயன் என்று இன்னொரு

பெயரும் உண்டு. ஊரில் நிறைய பேர்,அவர்களுக்கு விவரம் தெரிந்த நாளில்

இருந்து இவருடைய தோற்றம் அப்படியேத்தான் இருக்கிறதாம்.அம்மா

சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் விஜயன்.எப்போதும் ஒரு குறும்புத்தனம்

அரும்பிக் கொண்டிருக்கும் மலர்ந்த முகமாக இருப்பார்.ஆண்,பெண்

வித்தியாசம் இல்லாமல் எல்லா வயதினருடனும் இயல்பாய்,சகஜமாய்

அளவளவாடுவார்.பாசமும்,பரிகசிப்பும் நிறைந்த அவரது பேச்சிற்கு நடுவில்

வரம்பு தாண்டும் விஷயங்களில் குட்டவும் தவற மாட்டார்.குறு மொழியில்

மனது நிறைய செய்து விடுவாராம்.எல்லாம் அம்மா சொல்ல கேள்வி.

விஜயனும் பலமுறை அவரது இனிய சொல்லையும்,இனிய முகத்தையும்

சந்தித்து கடந்திருக்கிறான்.


      "  வாய்காலுக்கு தண்ணி திருப்ப போய்கிட்டு இருக்கேன்தம்பி !

 பேச்சுத் துணைக்கு வர முடிஞ்சா வாங்க!ஒரு மணி நேரத்திலே

திரும்பிடலாம்".வாஞ்சையோடு அழைத்தார்.விஜயனுக்கும்,அது,அந்த

" பேச்சுத் துணை " தேவையாக இருந்தது.அவரை உள்ளே அழைத்து

உபசரித்தான்.பேச்சு சத்தம் கேட்டு,அம்மாவும்,செல்லம்மாவும் வெளியே

வந்தார்கள்.அவரது குசல விசாரிப்பு,கேட்பவர் மனதை நிறைத்தது.அம்மா

ஏதாவது சாப்பிட சொல்ல வற்புறத்த,அவர் திரும்பி வருபோது சாப்பிடுவதாக

வாக்களித்துவிட்டு,விஜயனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.


      வழி நெடுக அவர் சொன்ன விஷயங்கள் யாவும் விஜயனை ஒரு புது

உலகத்திற்கு அழைத்துச் சென்றன.




                                                                                                     தொடரும்.........






                                                                                           


        

Friday, September 22, 2017

23.Thai Mann.

    விஜயன் ஊர் வந்து விளையாட்டாய் மூன்று மாதங்கள் கடந்து

விட்டன.அவன் குடும்பம் இருந்த சீமையிலிருந்து ஆளாளுக்கு எப்போது

திரும்பி வருவீர்கள் என்ற நச்சரிப்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது.விஜயன்

ஒன்றை கவனித்தான்.செல்லம்மா,தினமும் கல்லூரிக்கு கிளம்பும் நேரம்

குறைந்தது ஒரு நான்கைந்து பேராவது தங்கள் மருந்து சீட்டையும்,நகரத்தில்

மட்டுமேகிடைக்கும் வேறு,வேறுபொருட்களுக்கான விண்ணப்பத்தையும்

அதற்குஉண்டான தொகையையும்  செல்லம்மா கையில் தந்துவிட்டு

செல்வார்கள்.செல்லம்மாவும் கரிசனமாக அவரவர்களுக்கான

மருந்தையும், மீதி தொகையையும் சரியாக கொண்டு வந்து சேர்த்து

விடுவாள்.


     செல்லம்மாவை பார்க்கும் போதெல்லாம்,விஜயனுக்குள் ஒரு புதிய

சக்தி பிறப்பதை அவன் உணர்ந்தான்.அவள் தேனி போல சுறுசுறுப்பாய்

இயங்குவதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.இந்த இளம்

வயதிலேயே அவளுக்கு ,தனக்கு எது தேவை?எது தேவையில்லை? என்பதில்

மிகத் தெளிவாக இருந்தாள்.அனாவசியமான,அர்த்தமற்ற வார்த்தைகள்

அவளிடமிருந்து பிறக்காது.அடுத்தவர்களிடமிருந்தும் பிறக்க விட மாட்டாள்.

இயன்றால், அடுத்தவர்களுக்கு உதவுவாள்.இயலவில்லை எனில்,தெளிவாக

கூறி  விடுவாள்.ஆனால்,தவறை,தவறு என்று சரியாக கூறுவதில் அவளுக்கு

நிகர் அவள்தான்.அதில் எந்த விதமான  பாராபட்சமும் இருக்காது.


     செல்லம்மாவின் சமையல்,அவளது ஆத்தாவின் சமையல் போலவே

அத்தனை சுவையாக இருக்கும்.இன்னும் சொல்லப் போனால்,அவளது

ஆத்தாவை கேட்டு,கேட்டு,விஜயனுக்கு பிடித்ததை எல்லாம் பிரியமாக

சமைத்து வைத்திருப்பாள்.அதன் ருசியே அவளது பாசத்தை அங்குலம்

அங்குலமாக புரிய வைக்கும்.ஆனால்,அவன் பொருள் தேடச் சென்றவன்,

பெற்றத் தாயை மறந்து,உற்றார்,உறவினர்களை மறந்து,தன் குடும்பத்திற்கு

உறவுகளை  பாலமாக்க மறந்து,இத்தனைக் காலமாக பொருளைத் தேடிக்

கொண்டே இருப்பது ,உண்மையில் அவளுக்கு புரியாத பெரும் புதிராக

இருந்தது.


      ஆனால்,தாய்க்கும்,பிள்ளைக்கும் நடுவில் பாசப் பிணைபபுக்கான அதிக

சந்தர்ப்பங்களை உருவாக்கியபடி இருந்தாள் செல்லம்மா.அவளது ,பாங்கான

பக்குவமானநடவடிக்கைகள்  விஜயனை ஆச்சரியப்படுத்திக்கொண்டே

இருக்கும்.அவைகள் ஏராளமான படிப்பினைகளை தந்துக் கொண்டே இருந்தன.

ஆனால் எக்காரணம் கொண்டும் விஜயன் பக்கம் அவள் திரும்புவதே இல்லை.

அவள்பாட்டிற்கு அவளது வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பாள்.விஜயன்

வந்ததிலிருந்து அவனது அக்கா எப்போதும் போல நித்தமும் வந்து மாலை

செல்லம்மா வரை தங்குவதில்லை.தினமும் காலையில் வந்து வேலையாட்-

-களுக்கு என்ன வேலையோ சொல்லி விட்டு,அம்மா,தம்பியோடு சிறிது நேரம்

அளவளாவி விட்டு சென்று விடுவாள்.


      கிராமம் ஆனதால்,காலையிலிருந்து,மாலை வரை ஏதாவது ஒரு

காரணத்தினால் யாராவது குசலம் விசாரித்தபடி வந்து போய்க் கொண்டு

இருந்தார்கள்.பொதுவாக அவர்களது பேச்சு வெள்ளந்தியாக இருக்கும்.

விஜயனை அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளை போல விசாரித்து விட்டு

செல்வார்கள்.விஜயனும் அக்காவுடன் தோப்பு துரவுகளுக்கு அவ்வப்போது

சென்று வந்ததால்,ஓரளவிற்கு கிராமத்து வாழ்க்கை பிடிப்பட்டது.

செல்லம்மாவை தவிர, அக்கா குடும்பத்தினர் யாவருக்கும் மிகவும்

பிடித்தவனான். மாமாவும் அவ்வப்போது அக்கம்,பக்கம் அழைத்துக் கொண்டு

போய்,அவனை அவன்  பக்கத்து ஜனங்களுக்கு அறிந்த முகமாக்கினார்.


     ஒரு பக்கம், விஜயன் தன் தொலை தூரக் குடும்பத்தை நினைத்து

மிகவும் விசனப்பட்டான்.மறுபக்கம்,இந்த கிராமத்து சூழ்நிலைக்கு ஒன்றி

அம்மாவுடனும்,அக்கா குடும்பத்தினருடனும்  நிரந்தரமாக தங்கி விடலாமா?

என்றும் மனதில் பேரவா  இருந்தது.இருதலைக் கொள்ளி எறும்பாக தனக்குள்

தவித்துக் கொண்டிருந்தான் விஜயன்.





                                                                                                தொடரும்...........


 

22. Thai Mann.

    மறுநாள் மாலை நேரத்தில் எப்போதும் போல செல்லம்மா பாட்டி வீட்டிற்கு

வந்து சேர்ந்தாள்.முன்னால் கூடத்தில்,ஊஞ்சலில்,மெதுவாக ஆடியபடி ஒரு

புத்தகத்தில் மூழ்கி போயிருந்தான் விஜயன்.செல்லம்மாவை கண்டதும்,புன்-

-சிரிப்பை சிந்த விட்டான்.ஆனால் செல்லம்மா கண்டு கொண்டால்தானே!

அந்த கூடத்தில்,வெறும் ஊஞ்சல் மட்டும்தான் இருக்கிறது வேறு ஒன்றும்

இல்லை பாவனையில் சாதாரணமாக எப்போதும் உள்ளே போவது போல

உள்ளே போய் விட்டாள்.


    அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது.செல்லம்மா,இங்கிருந்து இருபது

கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட்.

படிப்பு படிக்கிறாளாம்.மாலையில் தன் வீட்டிற்கு சென்று,உடை மாற்றி விட்டு,

மறுநாள் கல்லூரிக்கு செல்ல தேவையான புத்தகங்களையும்,மாற்று உடை-

-களையும்,எடுத்துக் கொண்டு இங்கு அவளது பாட்டியின் துணைக்கு வந்து

விடுவாள்.காலையில் அவளது அம்மா வந்ததும் கல்லூரிக்கு கிளம்பி

விடுவாள்.பகல் முழுதும் அம்மா,பாட்டியையும்,பாட்டியின் வயல்

வரப்புகளையும்,பாட்டியின் வேலையாட்களின் உதவியுடன் கவனித்துக்

கொள்வார்.மாலையில் செல்லம்மா வந்ததும் தன் ஊர் பார்க்க கிளம்பி

விடுவார்.


    பாட்டியின் ஊர் இளவட்டங்களுக்கு செல்லம்மா  பேரில் கொள்ளை

ஆசை.ஆனால்,அருகில் செல்ல துணிச்சலில்லை.செல்லம்மா அவர்களிடம்

சொல்லி வைத்திருக்கிறாளாம்.தான்,தன் பாட்டியை கவனித்துக் கொள்ள,

பாட்டியின் ஊரில்தான் வாழ்க்கைப்பட போகிறாளாம்.ஆனால் யாருக்கு

என்று சொல்லவில்லை.அதனால் பாட்டி ஊரின் எல்லா இளைஞர்களும்

அடக்கி வாசித்தபடி வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம் .


    நேரே உள்ளே சென்ற செல்லம்மா," என்ன ஆத்தா! பார்க்க பரம சந்தோஷமா

 இருக்காப்பலே தெரியுது.புள்ளே  வந்த  உடனே என்ன ஒரு பூரிப்பு!ஒரு பத்து

பதினெஞ்சு வயசு குறைஞ்சு  அழகு கூடிடிச்சு போ!வயசு புள்ளையாட்டம்

வளைய,வளைய வந்து பம்பரமா வேலை பார்க்குறே!உன்னெயெ இப்படி

பாக்கத்தானே நா தவியாய் தவிச்சு கிடந்தேன்;மனசு நெறெஞ்சு போகுது

ஆத்தா!இந்த சந்தோஷம் ஒனக்கு ஆயுசுக்கும் கிடைக்கட்டும்னு ஐயனாரெ

வேண்டிக்கிறேன் ஆத்தா! பிறகு அவர் இஷ்டம் போல நடத்தட்டும் ".


   செல்லம்மா ஐயனாரை மனதார ஒரு நிமிடம் வேண்டிக் கொண்டாள்.

வேண்டுதல் முடிந்து நிமிர்ந்தவள், " ஏனாத்தா ! நீதான் இப்போ பரபரன்னு

சுறுசுறுப்பு ஆயிட்டேயே ! இனி நா எதுக்கு ஆத்தாவுக்கு,புள்ளைக்கு

 நடுவிலே?எத்தனே காலத்து கதெ பேச வேண்டியிருக்கு ஆத்தாவுக்கும்

புள்ளைக்கும் ? கதெ பேசிட்டே புள்ளைக்கும் வாய்க்கு வக்கணையா

சமைச்சுப் போட்டு சந்தோஷமா இரு ஆத்தா! என்ன சமாளிச்சுடுவே இல்லே?".

குரலில் ஏக கரிசனம்.


    வந்ததே கோபம் ஆத்தாவுக்கு." நல்ல இருக்கு புள்ளே நீ பேசற பேச்சு;

என்னோட  உசுரே நீதானே புள்ளே! நீ போயிட்டா, உசுரு இல்லமே வெறும்

சடலமா எம்புள்ளைய நானு எப்படி கொண்டாடரதாம்? ". பாட்டி முறுக்கிக்

கொள்வது தெரிந்தது. " சரி!சரி! ஒடனே கண்ணை  கசக்காதே! நா இருக்கேன்.

ஒம்புள்ளைக்கு என்னன்னா பிடிக்கும்னு சொல்லு! எல்லாத்தையும்தயார்

பண்றேன் ". பேசியபடியே  செல்லம்மா இன்னும் உள்ளே சென்று கொண்டி-

-ருந்தாள் .


    முற்றத்தில்  ஊஞ்சலில் மெதுவாக அசைந்தபடி  பாட்டிக்கும் பேத்திக்கும்

நடந்து கொண்டிருந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான் விஜயன்.

அந்த யதார்த்தமும்,கண்ணியமும் நிறைந்து தெளிந்த நீரோடையாக

சலனமின்றி பயணிக்கும் அந்த ஆழமான பாட்டிக்கும் பேத்திக்கும்

இடையிலான அன்பின் நிதர்சன ஸ்பரிசத்தை தென்றலாய் உணர்ந்தான்

விஜயன்.





                                                                                       தொடரும்......................   




 


   


Thursday, September 21, 2017

21.Thai Mann.

   அடுத்தநாள் முதல்,விஜயன்,தன் தாயிடம் சொல்லிவிட்டு,கிராமங்களின்

வயற் வரப்புகளில் நடை பயின்றான்.அவனது  யோசனையில் எல்லாம் கடும்

சீற்றத்துடன் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்ற அந்த புயல்

நினைவாகவே இருந்தது.எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்

அந்தப் புயலை நேசிக்காமல் இருக்க முடியவில்லை.


   விஜயனின் தாய் எல்லாவற்றையும் விவரமாக சொன்னார்.தன் மகள்

வயிற்று  பேத்தியின் அருமை,பெருமைகளை விலாவாரியாக சொன்னார்.

அக்காவின் கடைக் குட்டி.படுச்சுட்டி.பெயர் பாரதி என்கிற செல்லம்மாவாம்.

அந்த பெயர் காரணத்தினால்--தானோ என்னவோ,சிறுமைகளை பொறுக்காத

 " அக்னி குஞ்சாக "இருக்கிறாள்.அக்காவின் வீட்டை, அக்காவும்,மாமாவும்

நிர்வகிப்பதில்லையாம்.இந்த அக்னி குஞ்சுதான் நிர்வகிக்கிறதாம்.


     இந்த அக்னி குஞ்சுவின் ஊரும்,அதன் பாட்டியின் ஊரும் அருகருகில்

இருந்ததனால்,இதற்கு மிகவும் கொண்டாட்டமாக போய்விட்டது.இல்லை

என்றால்,அதன் பாட்டியின் பாடு திண்டாட்டமாக  அல்லவா போயிருக்கும் ?

இது அதன் நிதர்சனமான வாதம்.தன் பாட்டி மீது ஏகத்திற்கு வாஞ்சை;

பாசம்;தன் பெற்றோர் மற்றும் தன் குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவர்

மீதும் உயிராக இருக்கிறதாம்.அவளுடைய அண்ணிமார்கள் இருவரும்

இவளிடம்தான் எல்லா நல்லது,நல்லது அல்லாத விஷயங்களையும் பகிர்ந்து

கொள்வார்களாம்.இருஊராருக்கும் செல்லப்பிள்ளையாம்.அதனால் இரு

ஊராரும் அவளைசெல்லமாக  " செல்லம்மா " என்றே அழைக்கிராற்களாம்,



    அம்மா சொல்ல,சொல்ல,விஜயனுக்கு செல்லம்மாவை மிகவும் பிடித்து

போனது.இந்தச் சுட்டிக் குழந்தையை பிறந்ததிலிருந்து,ஒரு தாய் மாமன்

ஸ்தானத்திலிருந்து அதன் குழந்தை பருவத்தை அங்குலம்,அங்குலமாக

ரசித்து, அதனுடன் ஆசை,ஆசையாய் விளையாடி,விரும்பியதல்லாம்

வாங்கித் தந்து,அழுதுக் கொண்டு வந்து நிற்கும் போதெல்லாம்,நான் " தாய்

மாமன் " இருக்கிறேன்  என்று அன்பாய் அரவணைத்து, இன்னும் அதன்

ஒவ்வொரு பருவத்திலும்,அதற்கு எழும் எல்லா சந்தேகங்களையும்,வயல்-

-வரப்புகள்  நடுவே கைப்பிடித்து அழைத்துக் கொண்டுச் சென்று,அதன்

வயதிற்கு ஏற்றவாறு புரியும்படி,சகல அங்க,அசைவுகளுடன் கதைகல் பல 

சொல்லிக்  கொண்டு செல்லும் அனுபவம்,அந்த வயல் வரப்பினூடே இந்த

மலர்செண்டு,அசைந்து,அசைந்து நடந்து வரும் அழகு,இன்னும் எத்தனை,

எத்தனையோ சந்தோஷங்களை இழந்த மிகப் பெரிய வருத்தத்தை விஜயன்

உணரலானான்.


    இன்னும் சொல்லப் போனால்,தன் உடன் பிறந்த அன்பு சகோதரியின்

குழந்தைகளுக்கு ஒரு  தாய் மாமனாக, தான் எந்த விதத்திலும்,எந்த வித

சந்தோஷத்தையும்  அந்தக் குழந்தைகள் தம்மிடம் பெறுவதற்கு தான் வாய்ப்பு

ஏற்படுத்தி தரவில்லை என்றக் குற்ற உணர்வால் குறுகிப் போனான் விஜயன்.

முதலில் தன் பெற்றோருக்கு ஒரு நல்ல மகனாக இருந்திருந்தால்தானே

அவர்களை சார்ந்த எல்லா உறவுகளும் திடமாக தொடர்ந்து கொண்டு

 இருந்திருக்கும். தெறித்த உண்மை அவனை சுட்டெரித்தது.


   " சரி இழந்ததை பற்றி யோசித்து,யோசித்து விசனப் படுவதால் யாருக்கு

என்ன பயன் விளைய போகிறது?.அவையெல்லாம் கடன் என்றுதான்

கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதாவது  " நன்றிக் கடன் " என்று.

இனி ஒவ்வொருவருக்கும் அந்த நன்றிக் கடனை திருப்பி செலுத்த

என்னென்ன வழி வகைகள் உண்டு என்பதை ஆராய்வதுதான் தனது

தலையாய பணி "  தெளிந்த விஜயன் நிமிர்ந்து, தன் நடையை தொடர்ந்தான்.

அதை ஆமோதித்த தென்றலும் விஜயனை ஆசுவாசப்படுத்தியது.







                                                                                         தொடரும் .............


 



Wednesday, September 20, 2017

20. Thai Mann.

    " புயலுக்குப் பின் அமைதி " என்று சாதாரணமாக கூறக்  கூடிய புயலா? வந்து

சென்றப் புயல்.அந்த புயலின் தோற்றமே " அச்சம் " என்ற சொல்லின் முழு

பரிமாணத்தை,தாய்,மகன் இருவரது மனதிலும் கருப்பு மையில் அச்சடித்தது

போல படிய வைத்து விட்டுப் போனது.அந்த ஆழமாக ,அழுத்தமாக ,மிகுந்த

ரணகள வலியுடன் படிந்து விட்ட அந்த கருப்பு மை அச்சை உணர்ந்த விஜயன்

சர்வ சக்தியையும் இழந்து சிலையாகி சமைந்து போனான்.அவனது தாயின்

நிலைமை விவரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது,


    நீண்ட நேர மயான அமைதிக்கு பிறகு விஜயனுக்கு ஒரு அடர் திரை விலகி,

தெளிவு பிறந்தது.எல்லாமே தெள்ளத் தெளிவாகின.இத்தனை ஆண்டுகளுக்கு

பிறகு, இத்தனை ஆயிரம் மைல்கள்  அப்பால் இருந்த தன்னை,அங்கு இருக்க

விடாமல்,தாய் மண்ணிற்கு சுண்டி இழுத்த சக்தி,இப்பொழுது  வந்து போனதே

இந்த புயலின் சக்திதான் என்பதை  அவனது உள்ளுணர்வு அவனுக்கு

உணர்த்தியது.


   அந்த மகா சக்தியின் மகிமையை உணர்ந்ததும்,விஜயன் தன்னை

சுதாரித்துக் கொண்டான்.அந்த சக்திக்கு தன் பாட்டியின் பால் கொண்டுள்ள

ஆழமான பரிவுதான்,அந்த அப்பழுக்கில்லாத பாசம்தான்,விஜயனின்

தலையாய பொறுப்பை உணர்த்தும் விதமாக அவனை கட்டி இழுத்து வந்து

அவனை தன்  தாயின்பால் சேர்த்திருக்கிறது.


   விஜயன் மனதின் வலிமையைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறான்.ஆனால்

இப்பொழுதுதான் அதன் வலிமையின் தீவிரத்தை,அதன் ஆக்ரோஷத்தை

நேரில் கண்டுக் கொண்டான்.அப்படியெனில் இத்தனை வலிமைப் பெற்ற

அந்த மனதில்,அது தன் பாட்டியின்பால் கொண்டுள்ள பாசமும் மிகவும்

வலிமையானதாகத்தான் இருக்க வேண்டும்.இந்த நிதர்சனத்தை சுளீரென

 சாட்டையடி வலியாய்  உணர்ந்தான்.தான் மறந்த அல்லது விலக்கிய தன்

தலையாய பொறுப்பை இந்த பிஞ்சு,தன் தோள் மீது சுமந்து,தன் பாட்டியின்

கௌரவத்தை கம்பீரமாக காத்து நின்றிருக்கிறது.தன்னை எண்ணி கூசிப்

போனான் விஜயன்.


   திரும்பி தாயை பார்க்க,அவனது தாய் அவனையே பார்த்துக் கொண்டு

இருந்தாள்.அதில் வேதனை மிகுந்திருந்தது.தன் மகனின் மரியாதையை

தன் பேத்திக் குன்ற செய்து விட்டாளே!தன் தாயின் பரிதவிப்பை உணர்ந்தான்

விஜயன்.எல்லா தாய்மார்களுக்கும் உள்ள நியாயமான பரிதவிப்புதான்.தன்

பிள்ளை எப்படிப் பட்டவனாயிருந்தாலும்,தன் கண் முன்னே யாரும்  தன்

மகனின் மரியாதைக்கு ஊரு விளைவிக்கக் கூடாது.என்னே ஒரு

தாய்மையின் நியாயத்தின் பெருமை.


    விஜயன் ஒரு முடிவுக்கு வந்திருப்பது போல தெரிந்தது,தன் தாயைப் பார்த்து

முறுவலித்தான்.அவனது தாய் அந்த முறுவலின் அழகை ரசிப்பது தெரிந்தது.

மெதுவாகத் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டான்  விஜயன்.





                                                                                      தொடரும்.............




Monday, September 18, 2017

19.Thai Mann.

   விஜயனின் கடிதம் மிகவும் சுவராஸ்யாமாக இருந்தது மீனாவிற்கு.

அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டவேயில்லை.

மறுபடியும்,மறுபடியும்  படித்துக் கொண்டே இருந்தாள் .விஜயனிடமிருந்து

அடுத்தக் கடிதம் வரும்வரை இதையேதான் செய்துக் கொண்டிருப்பாள்

போலிருக்கிறது.விஜயனை சகட்டுமேனிக்கும் தூக்கியடித்த அந்தப் புயல்

இவ்வளவுத்தொலைவில் இருக்கும் மீனாவையும் விட்டு வைக்கவில்லை.

தனக்குள் வாரி சுருட்டிக் கொண்டது.மீனா,அந்த புயலுக்குள் ஒரு கதகதப்பை

உணர்ந்தாள். அந்த உணர்வு அவளுக்கு விசித்திரமாக இருந்தது.அந்த

விசித்திரத்தின் ஊடே மறுபடியும்,மறுபடியும் விஜயனின் கடிதத்தில்

 ஐக்கியமானாள் .


 
    இரண்டு நாளாக அம்மாவின் போக்கு ஸ்ரீதருக்கும் விசித்திரமாக இருந்தது.

அப்படி என்னதான் அப்பா எழுதி இருப்பார்.அப்பாவின் முதல் கடிதங்களை

எல்லாம் ஸ்ரீதரும் படித்திருக்கிறான்.சுகமான அனுபவம்தான்.மறுப்பதற்கு

இல்லை.ஆனால்,இந்த கடிதத்தை அம்மா இன்னும் படிக்க தரவேயில்லை.

அப்படி என்றால் ஏதாவது தனிப்பட்ட முறையில் எழுதி இருப்பாரோ?அப்படி

என்றால் அம்மா இப்படி பகிரங்கமாக படிப்பானேன்.ஒன்றும் விளங்கவில்லை

ஸ்ரீதருக்கு.அம்மா படித்து விட்டுத் தரட்டும் என்றபடி தொலைகாட்சி பெட்டிக்கு

உயிரூட்டினான்.அங்கிருந்தபடியே அம்மாவை அவ்வப்போது பார்வையால்

அளந்துக் கொண்டிருந்தான்,


   அம்மா அந்த கடிதத்தில் மூழ்கி போயிருந்தாள்.கடிதத்தில் விஜயன்

விவரித்த அந்தப்  பெண் புயலின் பிரவேசக் காட்சியை  நேரில் பார்த்துக்

கொண்டிருப்பது போலவே உணர்ந்தாள்.விஜயன் கடிதத்தில் தொடர்ந்தான்.


  " மாலையில் வந்த அந்த புயலில்,அதன்  வேகத்தில்,அதன் தாக்கத்திற்கு

ஈடாக ஒரு நேர்த்தியான அழகு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த புயலின்

தாக்கம் சற்று மட்டுப்பட்டிருந்தால் கூட அந்த மாசு மருவற்ற அந்த

அழகை,ஆண்,பெண் என்ற வித்தியாசமும்,எந்த வயது வித்தியாசமுமின்றி

மிகவும் வாஞ்சையுடன் ரசித்திருப்பார்கள்.அத்தனை திருத்தமாக இருந்தது

அந்த பெண் புயல்".


   " அந்த பெண் புயலின் தாக்கத்தை  மனதாலும்,உடலாலும் எதிர் கொள்ளும்

சக்தியை,அம்மா,முழுவதுமாக இழந்து போனது அவரது தோற்றத்திலேயே

தெளிவாகிப் போனது.ஆனால் மீனா!எனக்கு அம்மாவை போல அந்த புயலின்

கடுமையான தாக்கம் அப்போதைக்கு உறைக்கவில்லை .அதன் சாத்வீகமான

அழகில் மெய் மறந்து போனேன்.நாம் இங்கிருந்து கிளம்பும்போது அதற்கு

இரண்டு வயது இருக்குமா?ஆனால் இப்பொழுது நீங்கள் எல்லோரும்

அதனைப்  பார்த்தால் அசந்துதான் போவீ ர்கள்.கிராமத்திற்கே உரித்தான அந்த

தெளிவான தைரியம்,அதன்  தோற்றத்திற்கு மெருகேற்றிக் கொண்டிருந்தது".


    "அந்தப்  பெண் புயல் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.ஏன் நான் அங்கு

நிற்பதையே ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.நேராக அம்மாவை

நோக்கிச் சென்றது.அம்மா அயர்ந்து போய் அமர்ந்திருந்தார்.அவர் முன்

தன்னை சரிபடுத்தி,நெறிபடுத்தி அமர்ந்தது.மேலும் தளர்ந்து போயிருந்த

அம்மாவின் முகவாயை உயர்த்திப்  பற்றி,அம்மாவின் கண்ணை உற்று

நோக்கியபடி அழுத்தமாக,திருத்தமாக,தெளிவாக கேட்டது .உருக்குலைந்துப்

போனேன் நான்".


   மீனாவிற்கு கடிதத்தை தொடர தைரியம் வரவில்லை.அப்படியே படிக்காமல்

விட்டு  விடலாமா? என்று முதல் முறை படிக்கும்போது தோன்றிய எண்ணம்

இப்போதும் தவறாமல் திரும்பவும் தோன்றியது.ஆனாலும் தொடர்ந்து

படித்தாள்.


   "அந்த பெண் புயல் கேட்டக் கேள்வி என்னத் தெரியுமா? "ஏனாத்தா?

எங்களுக்குத்தான் சொல்லிக் கொடுத்தியாக்கும் "தந்தை தாய் பேண் "

அப்படின்னு. உம்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க மறந்துட்டேப்போல".

அம்மாவிற்கும்,பிள்ளைக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு வெளியேறி

விட்டது அந்தக் கடும் புயல்.நான் அந்த புயலிலிருந்து மீண்டு வருவேனா மீனா

?.கடிதம் முடிந்திருந்தது,


 

                                                                                                தொடரும்...................