Thursday, April 24, 2014

5.Saga udhiranai virumbu

   சக உதிரம் என்பது சகோதரனையும்,சகோதிரியையும் குறிக்கும்

அருமையான சொல்லாகும்.நெருங்கியமுதல் நிலை உறவு

வரிசையில் நம் பெற்றோரும்,நம் சகோதர சகோதரிகளும் கண்டிப்பாக இடம்

பெற வேண்டும்.சகோதரனும்,சகோதரியும் இயற்கை நமக்கு அளித்த

அருமையான சிநேகிதர்களாம்.


   இரத்த சம்பந்தமில்லாத உண்மையான சிநேகிதர்கள் என்றாலே,வள்ளுவர்

கூறியதுபோல உடுக்கை இழந்தவன் கைப் போல இடுக்கண் களைய

சடுதியில் வருவார்களாம்.அப்படி இருக்கும்போது நம் உதிரம் சம்பந்தப் பட்ட

சிநேகிதர்கள்,நம் சகோதர சகோதரிகளின் அன்பான நட்பு அல்லது நட்பான

அன்பின் மகிமையை விவரிக்க வார்த்தைகள் இருக்கிறதா?


   முதல் குழந்தை பிறக்கும்போது அது தன் தாயின் கருவறையில் சிறிது தன்

உதிரத்தை விட்டுவிட்டு வருமாம்.அடுத்தக் குழந்தை அந்த உதிரத்தை,தன்

மூத்த சகோதரி அல்லது சகோதரன் தனக்காக விட்டுச் சென்ற அந்த

உதிரத்தை,அந்த அன்பின் நேசத்தை தன்  உதிரத்துடன் சேர்த்து எடுத்துக்

கொண்டு,அந்த இரண்டும் கலந்த உதிரத்திலிருந்து சிறிது உதிரத்தை

தனக்கு அடுத்துப் பிறக்கப் போகும் சகோதரனுக்கோ,சகோதரிக்கோ

விட்டுவிட்டு வருமாம்.


   இதற்கு அர்த்தம்,மூத்தவர்கள், தம் இளையவர்களிடம் காட்டும் அன்பிலும் 

விட்டுக் கொடுக்கும் பண்பிலும் முத்தவர்களாகவே இருக்க வேண்டுமாம்.

அதனைப் புரிந்துக்கொண்டு இளையவர்களும் ,மூத்தவர்களிடம்

மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்பவர்களாகவும்,மூத்தவர்களின்

வார்த்தைகளை சிரமேற்கொண்டு நடப்பவர்களாகவும் இருக்க வேண்டுமாம்.

அப்பொழுதுதான் ஒரு குடும்பம் அமைதியும்,ஆனந்தமும் நிறைந்த ஒரு

கௌரவமான குடும்பமாக உருவெடுக்க சாத்தியப் படுமாம்.

 
 பரதன் தன் தமையன் இராமன் மேல் கொண்ட ஆழமான அன்பின், உயர்ந்த

மரியாதையின் வெளிப்பாடுதான்,பரதனை, "ஆயிரம் இராமர்களுக்கு சமம் "

என்ற மிக உயர்ந்த இடத்திற்கு அவனை இட்டு சென்றிருக்கிறது.


   துரியோதனன்,"எனக்கு உடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை நுறு வரை

இருந்தும்,என்னிடம் உண்மையான அன்பையும்,மரியாதையையும் செலுத்த

ஒருவரும் இல்லையே !ஆனால் தருமன் ஒருவனுக்காக அவனது

சகோதரர்கள் நால்வரும் நாட்டை இழந்து,பல வருடங்கள் கானகத்தில்

இருக்கவும் துணிந்து நிற்கிறார்களே!" என்று மிகுந்த வேதனையுற்றானாம்.


    அதனால்,சக உதிரத்தின் உறவின் உன்னதத்தை உள் வாங்கிக் கொண்டு,

அந்த உறவு ஒன்றாய்,நன்றாய்,ஒன்றி நிற்கும்போது,ஒன்றி நிற்கும்

சகலருக்கும் ஒரு அபாரமான சக்தி,ஒரு ஆற்றல் ஊற்றெடுத்துக் கொண்டே

இருக்கும்.அந்த சக்திக்கு எதையும் எதிர் கொண்டு சாத்தியமாக்கும்

வல்லமை உண்டு.


   அதனால் நாம் எந்த நிலையில் இருந்தாலும்,எந்த வயதில் இருந்தாலும்,

எந்த இடத்தில் இருந்தாலும்  இந்த சக உதிரத்தின் மகிமை ஓங்கி

சிறக்க,எந்த எதிர்மறை சக்திகளும் இந்த உறவின் மேன்மையை சிதைக்க

இடம் கொடாமல் இருப்பது சால சிறந்தது.







No comments:

Post a Comment