Monday, November 24, 2014

14.Thai Mann.

   கடிதம் வந்திருந்தது.மீனாவிற்கு கடிதம் வந்திருந்தது.அதுவும் அவளது தாய்

நாட்டிலிருந்து மீனாவிற்கு கடிதம் வந்திருந்தது.அதுவும் அவளது அன்புக்

கணவனிடமிருந்து வந்திருந்தது.மீனாவின் கையில் அந்த கடிதம் கிடைக்கப்

பெற்றவுடன்,அவளுக்கு ஒரு நிமிடம் அவள் உணர்வு அவளிடம் இல்லை.


   கடிதப் போக்குவரத்து என்பது அடியோடு நின்று விட்டக் காலக் கட்டமிது.

தன் குழந்தைகளுக்கும் கூட இதன் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தாங்களும்,ஒரு பெற்றோராக இதன் அருமையை புரிந்துக் கொள்ளத் தம்

குழந்தைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை.


   மீனாவின் எண்ணங்கள் இப்படி சிறகடித்துக் கொண்டிருந்தபோது அவள்

கையிலிருந்த கடிதம் ஸ்ரீதரால் பறிக்கப்பட்டது.திடுக்கிட்டு திரும்பினாள்

மீனா. " என்னம்மா இது! ஏதோ கடிதம் வந்திருக்கப் போலே இருக்கே!

அதிசயமா இருக்கு.யாரிடமிடருந்து வந்திருக்கு ". அதிசயமாய் கடிதத்தை

திருப்பிப் திருப்பிப் பார்த்தான் ஸ்ரீதர்.


   " ஆமாம்! அப்பாவிடம் இருந்துதான் வந்திருக்கிறது.அதிசயமாத்தான்

இருக்கு.அவர் நம் சொந்த ஊருக்கு போய் இரண்டு மாசமாச்சு.இதுவரைக்கும்

இப்படி கடிதம் எதுவும் வந்ததில்லை.இப்போது கடிதம் வந்திருப்பதைப்

பார்த்தால்,அவரிடம் நம்முடன் பகிர்ந்துக்க நிறைய விஷயம் இருக்கும்

போல.என்னனு பிரிச்சு படி!".மீனா சாவகாசமாக அமர்ந்தாள்.


     ஸ்ரீதர் பெரும் ஆர்வத்தோடு கடிதத்தை பிரித்து உரக்க  படிக்க

ஆரம்பித்தான்.கடிதம்மிகவும்  இயல்பான அன்புடன் அழகாக ஆரம்பிக்கப்

பட்டிருந்தது. " அன்பு மீனா! நான் நம் சொந்த மண்ணில் நமது அன்பான

உறவினர்களுடன் நலமாக இருக்கிறேன்.நலமாக இருக்கிறேன் என்பதை விட

ஒரு தெளிவுடன் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றுக் கூறுவதுதான்

 சாலப் பொருத்தம் என்று நினைக்கிறேன் ".


   இந்த இடத்தில்,தாயும்,மகனும் ஒன்றும் புரிந்துக் கொள்ள இயலாமல்,

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.மேலே படிக்க சொல்லி மீனா

சைகை செய்ய ஸ்ரீதர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான். " இறைவன் அருளால்

நீங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.நாட்காட்டியை

பார்த்தால்,நம் சொந்த மண்ணில் நான் கால் பதித்து இரண்டு மாதங்கள்தான்

ஆகிறது.ஆனால் சொன்னால் உங்களால் நம்ப முடியாது என்று

நினைக்கிறேன்.ஆமாம் மீனா! எனக்கு பல யுகங்கள் ஆனது போல ஒரு

உணர்வு ".


    " இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.ஒன்று

எனது சொந்த மண்ணின் தாக்கம் இங்குள்ள ஒரு பொங்கி எழும் ஜீவன் மூலம்

எனக்குள் ஒரு தொட்டக் குறை விட்டக் குறையாக ஒரு பெரியத் தாக்கத்தை

ஏற்படுத்தி இருக்கும் என உணர்கிறேன்.இன்னொன்று உங்களை எல்லாம்

பிரிந்து வந்த ஏக்கம் மிகவும் வாட்டுகிறது என நினைக்கிறேன்.மீனா! எனது

உதவி இல்லாமல் உனது அன்றாடப் பணிகளில் சிரமம் இருக்கும் என்பது

எனக்குத் தெரியும்.ஆனால், நமது அன்புக் குழந்தைகள் எல்லா விதத்திலும்

உனக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் என்னுள் ஆழமாக

பதிந்திருக்கிறது.அது சரி! உனது இப்போதைய பணியை எப்படி உணர்கிறாய்?

நலமாக இருக்கிறாயா? நமது குழந்தைகள் இருவரும் நலம்தானே?நமது

மாப்பிள்ளை,சம்பந்தி வீட்டாரை நான் மிகவும் விசாரித்ததாக அவர்களுக்கு

தெரியப்படுத்து.அருமையான மனிதர்கள் ".


   மனம் நெகிழ்ந்து போனது மீனாவிற்கு.ஸ்ரீதருக்கு சைகைக்  காட்டி படிப்பதை

நிறுத்த செய்து விட்டு,தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

ஸ்ரீதருக்குக் கூடத் தன் தந்தையின் மாசற்ற அன்பினால் தோய்த்து எழுதப்

பட்ட அந்தக் கடிதம் ,அவரின் இயல்பான,இனிமையான அன்பை தன்னுள்

ஐக்கியமாக்கி விட்ட உணர்வு,அவனை, இதுவரை அறிந்திராத ஒரு புதிய

இதமான உலகிற்கு இட்டுச் சென்றது.அதை முழுவதுமாக உள் வாங்கிக்

கொண்டு,தன் தாயைப் பார்த்தான்.மீனா,மேலே படிக்க சொல்லி தலை

அசைத்தாள்.தொடர்ந்தான் ஸ்ரீதர்.


    " பாரேன் மீனா! இந்த கடிதம் செய்யும் ஜாலத்தை!தொலை பேசியில் பேசும்

போது தோன்றாத பல விஷயங்கள்,கடிதம் எழுத ஆரம்பித்தவுடன் எப்படி

முட்டி மோதிக் கொண்டு வருகின்றனவென்று.இங்கு ஓடியாடும்

குழந்தைகளை எல்லாம் பார்க்கும்போது,எனக்கு நம்ச்  செல்லக்

குழந்தைகளின் ஒவ்வொருப் பருவமும் என்னுள் வந்து என்னை களிப்புறச்

செய்கிறது.அம்மாவுடன் அதைப் பற்றி எல்லாம் பேசிப் பேசி,அம்மா, உங்களை

எல்லாம் பார்த்தே ஆக  வேண்டும் என்று என்னை வாட்டி எடுத்துக்

கொண்டிருக்கிறார்.அக்கா குடும்பத்தினரின் அருமையான அன்பின்

வெளிப்பாட்டினையும்,அக்கா  குடும்பத்தினரும்,நம் அம்மாவும்,அப்பாவும் நம்

ஊரில் சம்பாதித்து வைத்திருக்கும் மரியாதையையும் நீங்கள் நேரில் வந்து

உணர வேண்டும் என்று எனக்குள் ஓர் ஆழமான எண்ணம் இருக்கிறது.

இதற்கு விரைவில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படிஇறைவனிடம் மனதார

வேண்டிக் கொண்டிருக்கிறேன்".


    பின் குறிப்பு; " மீனா! அடுத்த பக்கத்தில் அம்மாவும் உங்கள் எல்லோருக்கும்

கடிதம் எழுதி இருக்கிறார்.நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக பதில் கடிதம்

எழுத வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு என்று நீங்கள் தனியாக எழுதினால்,மிகவும் களிப்படைவார்.

உங்கள் எல்லோருக்கும் உங்கள் உடல் நலத்தில் கவனம் இருக்கட்டும்.

மற்றவை  அடுத்தக் கடிதத்தில்.குறிப்பாக  பொங்கி,பொங்கி எழுந்து, என்னைச்

சித்திரைவதைப் படுத்திக் கொண்டிருக்கும்  அந்த ஜீவனைப் பற்றி அடுத்தக்

கடிதத்தில் விரிவாக எழுதுகிறேன். 

  

                                                                                                  உனது அன்பு

                                                                                                           ஜெய்.
                                                                                                   



 


Sunday, November 16, 2014

13.Thai Mann.

   மாலை  மணி ஐந்து ஆனதும்,விஜயன் தனது சகோதரியுடன்  அவரது

குடும்பத்தினரை சந்திக்க அவரது ஊருக்குக் கிளம்பினான்.அவனுக்கு

ஒரு விஷயம் புரியவில்லை.புரியவில்லை என்றால் புரியவே இல்லை.

அதாவது, ஏன் அக்கா குடும்பத்தார் ஒருவரும்,அவன் வந்து இவ்வளவு

நேரமாகியும்,அவனை சந்திக்க வரவில்லை  என்று அவனுக்குப்

புரியவில்லை.அதாவது புரியவே இல்லை.


   தனது  தாயிடம் காரணம் கேட்டதற்கு," அந்தி சாய்ந்ததும்,அக்காவுடன் நீ

அக்கா வீட்டிற்கு போய் எல்லோரையும் பார்த்துட்டு வாப்பா! உனக்கே

எல்லாம் புரியும்".நீண்ட பெருமூச்சுடன் அவன் தாய் எழுந்திருந்து வெளியே

போனார்.அவர் யாரையோ அழைக்கும் குரல் கேட்டது."முருகா இங்கே வா

சாமி.குதிரைக்கு தீவனம் போட்டு தண்ணி காட்டினையோ!".தன் தாயின்

பரிவான விசாரணையில் இளகிப் போனான் விஜயன்."ஆயிடிச்சு ஆத்தா!".

பரிவான விசாரணைக்கு வந்த பவ்யமான பதில் விஜயனின் மனதைத்

தென்றலாக வருடியது.அந்த பவ்யமான குரலுக்கு சொந்தக்காரனைக்

காண மனம் விழைந்தது.


   "இந்த சாமானை எல்லாம் வண்டியில் ஏத்திட்டு,அக்காவுக்கும்,தம்பிக்கும்

சேர்த்து தைரியத்தையும் ஏத்திட்டு நம்ப மாப்பிள்ளை ஐயா வீட்டுக்கு

போய்ட்டு வரணும்ப்பா! நம்ப வீட்டுக்குப்  பிள்ளையாய் பிறக்க வேண்டியவர்,

மறுப் பிள்ளையாய்,மாப்பிள்ளையாய் நம்பளை  காக்க வந்த சாமி புள்ளை !

நானும் என்னோட குடும்பமும் ஏதோ ஒரு சந்தர்பத்திலே ஏதோ ஒரு

உத்தமமான காரியம் பண்ணியிருக்கோம் போல.அதனாலதானோ

என்னமோ சாமி,தம் புள்ளையையே நம்ப வீட்டிற்கு மாப்பிள்ளையாய்

அனுப்பி வெச்சார் போல!".


    விஜயனுக்கு சுருக்கென்றது.மாமாவிற்கு அவரது பெரிய குடும்பத்தின்

பொறுப்புகளே ஏகத்திற்கு இருக்க,தானும் பொறுப்பில்லாமல்,தன்

 பொறுப்புக்களையும் சேர்த்து அவரின் பொறுப்பில் சேர்த்து விட்டது

என்றைக்கும் இல்லாமல் இன்று பெரிதும் சங்கடப் படுத்தியது.


   மாமாவின் உருவம் கண் முன்னால் வந்து நின்றது.கம்பீரமும்கண்ணியமும்,

எதார்த்தமான பேச்சும்,அவரது  நடை,உடை,பாவனை எல்லாம்.அவரை

ஒரு முறை சந்தித்து விட்டால்,எவருடைய எதிர்மறை எண்ணங்களும்

ஓரங்கட்டிவிடும்.அளவான,அர்த்தமுள்ள பேச்சு.அடுத்தவரது பேச்சும்,

அளவானதாக,அர்த்தமுள்ளதாக அமைய  வைக்கும் சாதுர்யம்.விஜயனுக்கே

அவரை சந்திக்க ஒருவிதமான தயக்கம் அவனுள் உருவாகிக் கொண்டு

இருந்தது.


     இருந்தாலும், சில விஷயங்கள் தவிர்க்க முடியாதவை.தவிர்க்கவும்

கூடாதவை.நேருக்கு நேர் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்

இருப்பவை.எனவே,விஜயன் ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு,

தன்  தாயிடம் விடைப் பெற்றுக் கொண்டு தன் நேசமான தமக்கையுடன்,

அவரது ஊருக்கு புறப்பட்டுச் சென்றான்.ஆனால்  தான்,தன் தமக்கையின்

ஊருக்குசென்று வர உத்தேசித்ததிலிருந்து,தான் தாயின் நடவடிக்கைகளிலோ,

தன் தமக்கையின் நடவடிக்கைகளிலோ ஒரு சுரத்தே இல்லாமலிருப்பதை

விஜயன் கவனித்தான்.அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.


     வண்டியில் ஏறி அமர்ந்ததும்,தன் தமக்கையின் முன்னிலையில்

வண்டியை செலுத்தும் முருகனிடம்," முருகா ! பெரியம்மாவும்,

சின்னம்மாவும் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறார்கள்?உனக்கு ஏதாவது

விஷயம் தெரியுமா?" என்றுக் கேட்டான். வண்டியின் கடிவாளத்தை பிடித்து

அமர்ந்து,குதிரைகளை தட்டிக் கொடுத்து,அவற்றை பயணத்திற்கு தயார்ப்

படுத்திக் கொண்டிருந்த முருகன்,ஒரு நிமிடம் வண்டியின் உள்புறம் திரும்பி

விஜயனின் தமக்கையை பார்த்தான்.அவர் மெளனமாக அமர்ந்திருந்தார்.பின்பு

அவன் விஜயன் பக்கம் திரும்பி,"அங்கே போனபிறகு உங்களுக்கே

புரியுமுங்க ஐயா!" என்றவன்,மறுபடியும் சின்னம்மா பக்கம் திரும்பி,

"போலாங்களா அம்மா!" என்று உத்தரவு வாங்கியபின்,குதிரைகளை

பாந்தமாக தட்டி விட்டான்.


 


                                                                                                      தொடரும்............... 


 









     

Tuesday, September 16, 2014

12.Thai Mann.

   வேப்பமரக் காற்றில்,அதன் சிலுசிலுப்பில் ஆழ்ந்து உறங்கி போன விஜயன்

கண் விழித்து பார்க்கும்போது  மாலை மணி மூன்றாகி விட்டது.சிறிது நேரம்

அப்படியே படுத்துக் கொண்டிருந்தான்.ஒரு நொடி, அவனுக்கு தான் எங்கு

இருக்கிறோம் என்பது பிடிபடவில்லை.பிறகு ஒவ்வொன்றாக பிடிபட்டது.

மனது, ஆழ்ந்த உறக்கத்தின் விளைவாக,இறக்கைக் கட்டி பறக்கும் நிலையில்

இருந்தது.தான் இப்படி உறங்கி பல யுகங்கள் ஆகி இருப்பது போல

விஜயனுக்கு ஒரு உணர்வு.மனது மிகவும் தெளிவாக இருந்தது.


    சுற்றும்,முற்றும் பார்த்தான்.அம்மாவும்,அக்காவும் உள்ளே வேலையாக

இருப்பார்கள் போல.எழுந்து உட்கார்ந்தான்.அவ்வப்போது வந்து,வந்து

எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் இப்போதும் வந்து எட்டிப்

பார்த்தார்கள்.ஆளுக்கு ஒரு பக்கமாக வந்து அமர்ந்து கொண்டார்கள்.

அம்மா,தன முந்தானையால் அவனது முகம் முழுதும் ஒற்றி எடுத்தார்.

அப்பொழுது,தான் சிறு வயதில் உணர்ந்த தன் தாயின் உடல் வாசத்தை

இப்பொழுதும் உணர்ந்தான் விஜயன்.உள்ளம் பொங்கி பொங்கி வழிந்தது.

அவர்கள் இருவரையும் பார்த்து முறுவலித்தான்.அதில் அவனது  சிறு

பிராயத்தின் முறுவலே பிரதிபலித்தது. அவனது ஆழ்ந்த சிறு வயது

எண்ணம் மிக அழகாக அவனது முகத்தில் பிரதிபலித்தது.


   அவனது மென்மையான,தண்மையான, ஆழமான அன்பில் தோய்த்தெடுத்த

முறுவலில்  இழைந்தோடிய  அந்த ஸ்பரிசத்தை,அவனது அம்மா

ஆத்மார்த்தமாகப் பெற்றுக் கொண்டார்.அந்த ஸ்பரிசம் தந்த வெதுவெதுப்பில்

 அவன் தலை வருடி வாஞ்சையுடன் கேட்டார். " சாமி! நல்லா

தூங்கினேயாப்பா? களைப்பெல்லாம் தீர்ந்ததா? ".அக்காவும் அவனருகில்

அமர்ந்து,அவன் முகமுழுவதையும், தன் இரு கைகளால்,இரு பக்கங்களிலும்,

மேலிருந்து கீழாக வருடி எடுத்து நெட்டி முறித்து திருஷ்டிக் கழித்தார்."அம்மா!

தம்பி முகம் பாரேன்.பூர்ண சந்திரன் போல.நல்லாத் தூங்கி,களைப்பை

எல்லாம் களைந்து போட்டிருப்பான் போல".அக்கா ஆனந்தமாக,சன்னமாக

சிரித்தார்.


   " சரி!சரி! தம்பி மிகவும் பசியோடு இருப்பான் போல.நீயும் எவ்வளவு

நேரம்தான் தம்பி எழுந்திருக்கட்டும்னு காத்திட்டிருப்பே!எல்லாத்தையும்

எடுத்து வை தாயி! நான் வந்து இரண்டு பேருக்குமா பரிமாறேன்". என்ற

அம்மாவைத் திரும்பிப் பார்த்த அக்கா " என்னை விடும்மா!தம்பி!அம்மா ஏன்

இன்னும் சாப்பிடலன்னு கேளு!".என்றபடி, பரிகாசமாக சிரித்தார்.


    விஜயன் அயர்ந்து போனான்." என்னக்கா இது! என்னை எழுப்பி இருக்க

வேண்டியதுதானே! இருவரும்,இவ்வளவு நேரமா சாப்பிடாம இருப்பீங்க!

நீங்க சாப்பாடு எடுத்து வைங்க!நான் இதோ முகம் கழுவிட்டு வந்துர்றேன்".

விஜயன் எழுந்து பின்கட்டு போனான்.


    மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.அம்மாவும்,அக்காவும் சேர்ந்து தங்கள்

அன்பை குழைத்து சமைத்த விதவிதமான புலால் உணவு,அமிர்தமாக நாவின் 

ருசி அரும்புகளில் ருசிக்கப்பட்டு , நெஞ்சில் கரைந்து, மனதை நனைத்தது.

" உணவு என்றால் இதுவல்லவோ உணவு. இவ்வளவு ருசியாக இருக்கிறதே!

கிராமத்து மணம்  மாறாமல் அப்படியே இருக்கிறதே!அப்படி என்றால் அன்பும்  

மாறாமல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்". விஜயன் மறுகிப் போனான்.


   பிறகு எல்லா நினைவுகளையும் ஒரு பக்கமாக நிறுத்தி விட்டு,தாயுடனும்,

தமக்கையுடனும் மனம் நிறைந்து அளவளாவிக் கொண்டே,ஒவ்வொரு

பதார்த்தமாக ரசித்து,ருசித்து,உண்டான் விஜயன்.ஒருவருக்கு ஒருவர்

விருந்தளிப்பவர்களாவும்,விருந்தாளியாகவும் மாறி, மாறி  பரிமாறிக்

கொண்டே உணவு உண்டார்கள்.அந்த ருசியான உணவுடன், பல ருசியான 

நினைவுகளையும்,கலந்து,கலந்து உண்டார்கள்.உணவும்,அதனைச் சார்ந்த

நினைவுகளும் தித்தித்தன.ஒவ்வொரு பதார்த்தத்துக்குமான விஜயனது

இயல்பான மனம் நிறைந்த பாராட்டுக்கள், அவனது தாய்,தமக்கையின்

மனதுகளை நிறைத்தன. விஜயன் மனம் நிறைந்து, வயிறு நிறைந்து

உண்டிருக்கிறான் என்ற திருப்தி அவர்களது மனதை நிறைத்தது.


    விஸ்தாரமாக உண்டு முடித்துவிட்டு வெற்றிலை பாக்குப் பெட்டியுடன்

கூடத்தில் வந்து மூவரும் அமர்ந்தார்கள்.விஜயனின் தாய்,தன் குழந்தைகள்

இருவருக்கும்,பாந்தமாக வெற்றிலைகளை முன்னும்,பின்னும் துடைத்து,

அளவாக பாக்கும்,சுண்ணாம்பும் சேர்த்து  தந்துக் கொண்டிருந்தார்.


    ஆனால்,அதே நேரத்தில் அதற்கு அப்பால் ஒரு வீட்டில், சுண்ணாம்பு

காளவாய் ஒன்று தகதகவென கனன்றுக் கொண்டிருந்தது.




                                                                                                         தொடரும்.........  


      


       

Friday, September 12, 2014

11.Thai Mann.

   விஜயன் மனது நிரம்பி வழிந்தது.தன்னை சார்ந்தவர்களும்,தனது ஊரும்

அதே  இனிய மண் வாசனையுடனும், இயல்பான அன்புடனும்  தன்னை

உள்வாங்கிக் கொண்டது மனதை மயிலிறகாக்கியது.அது சிட்டுக் குருவியாகி

நாலாபுறமும் சந்தோஷமாக பறந்து உலாவிக் கொண்டிருந்தது.எந்த

விதமான செயற்கை சத்தங்களுமின்றி,இயற்கையான ஒலிகள் அவனுடைய

சூழ்நிலையை ரம்மியமாக்கின.


     ஆனாலும் ஏதோ ஒன்று அவனை  மிகவும் நெருடிக் கொண்டிருந்தது.

வண்டியிலிருந்து இறங்கின சமயத்திலிருந்து ஊர் அவ்வப்போது இங்கும்

அங்குமாக பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தது.அதில் ஒரு பரபரப்பு

இருந்து கொண்டேயிருந்தது.விஜயனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனால் யாரையும் காரணம் கேட்கத் தோன்றவில்லை.


   வீட்டிற்கு பின்னால் சற்றுத் தள்ளி அமைந்திருந்த பம்பு  செட்டிலிருந்து

நீர், ஆனந்தமாக பக்கத்திலிருந்த பெரியத் தொட்டிக்குள்  விழுந்துக்

கொண்டிருந்தது.சுற்றிலும் பச்சைபசெலேன்றிருக்கும் பெரிய வயல்களுக்கு

நடுவில் இந்த சிறிய அழகான நீர்வீழ்ச்சியாக, இந்த பம்ப் செட் நீரை  வாரி

இறைத்துக் கொண்டிருந்தது.வானுயர்ந்த கட்டிடங்களையே பார்த்து

பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு இந்த வயலும்,இந்த வயல் சார்ந்த

இடங்களும் கண்கொள்ளாக் காட்சிகளாக மனதை குதூகலிக்கச் செய்தது.

விஜயன் சுற்றிலும் பார்த்து இரசித்துக் கொண்டே,அக்கம் பக்கம் வயலில்

இருப்பவர்களிடம் அளவளாவிக்கொண்டே ஆசை ஆசையாகக் குளித்துக்

கொண்டேயிருந்தான்.அவன் குளிக்கும் விதம் பார்த்து,அக்கம் பக்கத்தில்

இருந்தவர்கள், " தம்பி, இன்னும் ஒரு வருடத்திற்கு சேர்த்து குளிக்கும்

போல!". என்று பரிகாசம் செய்தும்,பிரியவே மனமில்லாமல் நீரை விட்டுப்

பிரிந்து வந்தான்.


      விஜயனின் தாயார் ,குளித்து  முடித்து தலைத் துவட்டிக் கொண்டே வரும்

மகனை அதுவும் மனதும், உடலும் ஒன்று சேர அழுக்கு அகற்றி பளீரென

மலர்ந்தபடி, அங்கங்கே நீர் திவலைகள் தங்கள் முத்திரைகளை  பதிக்க, மனம்

நிறைந்த புன்முறுவலுடன் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் அன்பு

 மகனை  மனம் கொள்ளா ஆசையுடன்,வைத்த கண் வாங்காமல் பார்த்துக்

கொண்டேயிருந்தார்.அதை கவனித்த விஜயனின் தமக்கை, " அம்மா!உங்க

பார்வையை திருப்பி அதோ அந்த மலையை பாக்கறது!அது தகர்ந்தாலும்

தகரும்.தம்பியை இப்படி பாக்கறீங்க?இனி ஊரார் கண்களுக்கு ஒரு

திருஷ்டியும்,உங்க கண்களுக்கு ஒரு திருஷ்டியும் என தனித் தனியாக

தம்பிக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டியதுதான் ". என்று தன் தாயை

பரிகாசம் செய்தார்.தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்

கொண்டனர்.உண்மையில் விஜயனின் தமக்கையின் கண்களும்,தன் தாயின்

கண்களுக்கு நிகராக தன் தம்பியின் குளித்து முடித்து வரும் அந்த அழகை

வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தன.


    விஜயன் உண்ண பாயும்  விரிக்கப் பட்டு தலை வாழை இலையும் 

விரிக்கப்பட்டு,அவனுக்கு பிரியமான கிராமத்து பணியாரங்கள் பரிமாறப்பட

வரிசைக் கட்டி நின்றன.தலை வாரி,சலவைத் உடை அணிந்து சாமி கும்பிட்டு

வந்த விஜயனை,தாயும்,தமக்கையும், பாசமும்,பரிவுமாக இல்லை முன்

அமர்த்தினர்.இலை முன் சம்மணமிட்டு அமர விஜயன் மிகவும் சிரமப் பட்டான்.

அதைப் பார்த்த அவனது தமக்கை," அடி ஆத்தி!என்னம்மா இது? தம்பி

சம்மணமிட்டு உட்கார இப்படி சிரமப்படுது?. என்றுக் கேட்டு நிஜமாகவே

ஆச்சரியப் பட்டார்.விஜயன் நெளிவதைப் பார்த்ததும்,அவன் தாய்,"எல்லாம்

பழக்கந்தானே தாயி! அவனோட இடத்திலே கையை மேலே தூக்கி வச்சே

சாப்பிட்டிருப்பான் போல;சரி அதை விடு.நீயும் தம்பி கூட ஒரு இலையை

போட்டு உட்காரு!நான் பரிமாறேன் ".


   
    அந்தத் தாய் தன் குழந்தைகள்  இருவரும் பேரன்,பேத்திகளை பார்த்த

மூத்தோர்கள் என்ற எதார்த்தத்தை ஒரு மூலையில் நிறுத்தினார். அவர்கள்

இருவரையும் பாலகர்களாக்கி,பார்த்துப் பார்த்து பரிமாறினார்.அவர்கள்

இருவரும் ஒருவரை வாஞ்சையுடன், உபசரித்துக்  கொண்டே உண்ணும்

 அழகைப் பார்த்துப் பார்த்து பரவசமானார்.


   
   உண்டு முடித்து முற்றத்தில்  வந்து அமர்ந்தார்கள் மூவரும்.கதை பேசத்

தொடங்கினார்கள்.கதை,கடந்தக் கதை,வந்தக் கதை,போனக் கதை,இருக்கும்

கதை,இருக்காதக்  கதை இன்னும் என்ன எல்லாமோ கதைகள் எல்லாம்

பேசப் பேச கதை தொடர் கதையாகிக் கொண்டிருந்தது. கதைக்கு

இடையிடையே விஜயனின் கொட்டாவிக் கதையும் தொடர ஆரம்பித்தது.

அவனது தாய் அவனை அங்கு இருந்த பெரிய ஊஞ்சலில் படுக்க செய்தார்.

அவனது தமக்கை மெது மெதுவென இருக்கும் ஒரு தலையணையை

எடுத்து வந்து வாஞ்சையுடன் விஜயனின் தலைத் தூக்கி அவன் தலைக்கு

ஏதுவாக வைத்தார்.வெளியில் வேப்ப மரத்து இதமானத் தென்றல்,விஜயனை

அவனது கடந்த கால நினைவுகளுக்கு இட்டுச் சென்றது.போதாக் குறைக்கு

விஜயனின் தாயார்,அவனது தலைமாட்டில் அமர்ந்தபடி,தனது இரு கைகளால்

 விஜயனின் கன்னங்களை வருடியபடி தெம்மாங்கு பாட ஆரம்பித்தார்.

அவனது தமக்கை தாயின் அருகில் அமர்ந்து,ஊஞ்சலை நிதானமாக அசைய

விட்டார். ஒரு பனையோலை விசிறிக் கொண்டு தம்பிக்கு   இதமாக விசிறிக்

கொண்டிருந்தார்.தன் தாயின் பாடலின் இனிமையில் கரைந்த விஜயன்,

தன்னை மறந்து, நித்திரா தேவியின் ராஜ்யத்தின் தற்காலிக பிரஜையாக

மாறிப் போனான்.



    அந்த நேரம்  விஜயனின் தாய் மண்ணில் காலை பதினோரு மணி இருக்கும்.

ஞாயிற்றுக் கிழமை.அவனது ஆழ்ந்த உறக்கத்தை,ஆழ்ந்து  ரசித்தபடியே

அவனது தாயாரும்,தமக்கையும் மற்ற வேலைகளை  கவனிக்க

எழுந்தார்கள்.எழுந்ததும் அவர்களை மறுபடியும் அந்த கலக்கம் பற்றிக்

கொண்டது.அந்தக் கலக்கம் வரும் பாதையை அதாவது வாசற்படியை

ஒரு முறை ஆயாசத்துடன் பார்த்து விட்டு உள்ளறைக்குச் சென்றார்கள்.

அந்த கலக்கம் மெதுவாக பிரளயமாக உருவெடுத்துக் கொண்டு அதன்

இடத்தில், சினத்தின் உச்சியில் அங்கும்,இங்கும் உலாவிக் கொண்டிருந்தது.





                                                                                               தொடரும்..............  

       



             

Monday, September 8, 2014

Manidhan

   அன்றைய தினம் காந்தி ஜெயந்தி.நமது  தேச பிதா மகாத்மா காந்தியின்

மகா  உன்னதமான அந்த நாளை,கடவுளின் குழந்தையான அந்த மாமனிதரின்

பிறந்த நாளை நேசத்துடன் கொண்டாட அவரது தேசமே விடியலுடன் சேர்ந்து

விழித்துக் கொண்டது.ஆனால் அந்த குறிப்பிட்ட கிராமத்தின் அந்த குறிப்பிட்ட

வீடு மட்டும் அந்த குறிப்பிட்ட நாளின் உன்னதத்தை புரியாமல் அல்லது

புரிந்தும் புரியாமல் அல்லது புரிந்துதான் என்ன ஆக போகிறது என்ற

விரக்தியில் எப்பொழுதும் போலவே விடியலை எதிர் கொண்டது.


   சித்தார்த்  நமது தேசத்தின் குடிமகன் மட்டும் அல்ல.அந்த குறிப்பிட்ட

வீட்டின் குடிமகனும் கூட.குடிமகன் என்றால் தன்னை,தன் சூழ்நிலையை

முற்றிலும் மறந்த, துறந்த பெரும் குடிமகன்.அவனது இல்லம் என்றும்

இரண்டு வகையான சூழ்நிலையில்தான் இருக்கும்.காலையில் மயான

அமைதி.மாலையில் மகா கூச்சல்.விதவிதமான கூச்சல்.அவனது

மனைவி இவனுக்கு வாழ்க்கைப்பட வைத்து விட்டாயே என்று தன் விதியை

நொந்து கொள்ளும் கூச்சல்.அவனது தாயார், பெற்ற மனம் பதற கதறி,

நித்தமும்இந்த கொடுமைகளை காண மனதில் சக்தி இல்லாமல்,தன்

வாழ்நாளை வாழும் நாளாக விடாமல் சித்திரவதை செய்யும் மகனை

தெளிவாக்க இறைவனிடம் மன்றாடும் கூச்சல்.இவை எல்லாவற்றையும்

விட கொடுமையிலும் கொடுமையான கூச்சல் அவனது  குழந்தைகள்

இரண்டும்,அவனை கண்டாலே பயந்து போய்  தங்களது   பாட்டியின் மார்பில்

முகம் புதைத்து அலறும் அலறல்.


    அன்று  காந்தி ஜெயந்தி ஆனதால்  சித்தார்த்தின் அலுவலுகதிற்கும்

விடுமுறை.அவனது அனுதினம் குடிக்கும் பானத்திற்கும் கட்டாய

விடுமுறை.இன்றைய தினம் எப்படி பொழுதை கழிப்பது என்று அவனுக்கு

புரியவேயில்லை.வீட்டில் யாரும் அவனுடன் முகம் கொடுத்து பேச தயாராக

இல்லை.குழந்தைகளோ அவன் அருகில் வரவே இல்லை.அவனுக்கு

பரிமாறப்பட்ட காலை உணவை முடித்துக் கொண்டு சட்டையை மாட்டி

கொண்டு வெளியே கிளம்பினான்.


   அவன் கிளம்பி செல்வதை அவனது தாயும்,தாரமும் கவனிப்பதை

அவனால் உணர முடிந்தது.அவர்களது பெருமூச்சு அவனது குற்ற

உணர்வில் குத்திட்டு நின்றது.குடிக்கு முன்னால் அவனது தோற்றம்

 திரை உலகின் ஒரு பிரபலமான நடிகரை எல்லோருக்கும் நினைவூட்டும்.

குடிக்கு பின்னால் சகலமும் பின்னால் போய்  விட்டது.


   நான்கு தெரு தாண்டியும்,இலக்கில்லாமல் நடந்து கொண்டே இருந்தான்.

நிமிர்ந்து நடக்க துணிவு வரவில்லை.கால் தன்னிச்சையாய் ஒரு வீட்டின்

முன் நின்றது.ஏறிட்டு பார்வையை உள்ளே செலுத்தினான்.அது ஆறு

மாதத்திற்கு முன்னால் திடீரென மாரடைப்பில் மறைந்து போன தன் மூத்த

சகோதரனின் உயிர் நண்பன் சந்துருவின் வீடு.குடும்பத்தின் மூத்த பிள்ளை,

தன் தந்தை இல்லை என்ற குறை தன் தாய்க்கும்,தன் உடன் பிறந்தோர்

மற்றும் சுற்றங்களும் தெரியா வண்ணம் தன் தந்தையின் இடத்தில்

இருந்து குடும்பத்தை காத்து வந்த உத்தம பிள்ளை.தந்தை இறந்த சில

வருடங்களுக்கு  பிறகுதான் சித்தார்த்திற்கும் அவனது  இன்னொரு

சகோதரிக்கும் திருமணம் நடந்தது.அதுவும் தந்தையின் இடத்தில்

இருந்த அந்த வீட்டு மூத்தப் பிள்ளையின் பெரு முயற்ச்சியில்.

அதுவும் ஒரே ஆண்டில்.ஊரேஆச்சரியப்பட்டது.மனதார கை கொடுத்தது.


 
சித்தார்த்திற்கு தனது அன்பு சகோதரனின் திடீர் மறைவிற்கு பிறகுதான்

ஒரு தந்தை ஸ்தானத்தின் அருமையும் பெருமையும் புரிந்தது.அந்த

ஸ்தானத்தை தனது சகோதரன் வகுத்தபோதுதான் தனது சகோதரனின்

அருமையும் பெருமையும் புரிந்தது.தனது தந்தையின் இழப்பை கூட அவனால்

தாங்க முடிந்தது.ஆனால் தனது தமையனின் இழப்பு அவனை இன்னும்

உறங்க விடவில்லை.யாரோ தந்த யோசனை,உறக்கம் வர குடிக்கும்

பழக்கத்திற்கு ஆட்பட்டதால்  அது உறக்கதிற்கு பதில் குற்ற உணர்வை

குறையில்லாமல் தந்தது.உடலையும், மனதையும் ஒரு சேர உருக்கியும்

விட்டது.


   சந்துரு வெளியில் வந்து சித்தார்த்தின் தோள் மேல் கை வைத்து உள்ளே

அழைத்து சென்றான்.ஒரு நொடி சித்தார்த் தன் தமையனின் அண்மையை

உணர்ந்தான்.உண்மையான,பவித்ரமான அன்பினால் அந்த அன்பை

உணர்த்தவும் முடியும்.அதை உணரவும் முடியும்.


    சந்துரு இராணு பணியில் இருக்கிறான்.இப்பொழுது விடுமுறையில்

வந்திருக்கிறான் போலும்.சென்ற விடுமுறையின் போதுதான் தன உயிர்

நண்பனின் விதி முடிந்து போனது.நண்பன் குடும்பத்தார்க்கு அவன்

குடும்பமே பெரிய ஆறுதலாக இருந்தது."உன் நண்பனை நான் அழைத்து

போகிறேன்.அவன் குடும்பத்தார்க்கு  ஆறுதலாக இரு". என்று கடவுள்தான்

அவனை அனுப்பி வைத்தார் போலும்.இராணுவத்தில் பணியாற்றிக்

கொண்டிருப்பதாலோ என்னவோ,அத்தனை துக்கத்திலும் தெளிவாக

இருந்தவன் அவன் ஒருவன்தான்.


    உள்ளே அழைத்து சென்று அமர வைத்ததும்,சித்தார்த் பித்து பிடித்தது

போல தாரை தாரையாய் கண்ணீர் வடித்தான்.எல்லோர் கண்களும் கசிய

தொடங்கின.உடனே சந்துருவின் தாயார் சிறிது நீர் கொண்டு வந்து அவனை

பருக செய்து சிறிது ஆசுவாசப்படுத்தினார்.


   சந்துரு அவனருகில் அமர்ந்து தன் தோள் மீது சாய்த்தான்.சாய தோள்

கிடைத்ததும் சித்தார்த்,விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்.சந்துருவின்

குடும்பத்தார்க்கு அவனது வேதனை பெரிய வேதனையாக இருந்தது.சந்துரு

 சித்தார்த்தை நிமிர்ந்து அமர செய்தான்."சித்தார்த்! இந்த இளம் வயதில் உன்

அண்ணனின் அருமை பெருமைகளை புரிந்து கொண்டு அவரது நிரந்தர

பிரிவை எண்ணி நீ வேதனைப் படுவது உண்மையிலேயே பெரிய விஷயம்.

அப்படி என்றால் உன் குடும்ப பொறுப்பை உன் அண்ணனிடமிருந்து நீ

ஏற்றுக் கொள்ள நீ தயாராகி விட்டாய் என்று அர்த்தம்".சித்தார்த் ஒன்றும்

புரியாமல் சந்துருவை ஏறிட்டு பார்த்தான்."நீ ஒன்றை புரிந்து கொள்ள

வேண்டும் சித்தார்த்!நீ உனது பெற்றோருக்கு ஐந்தாவது மகனாய் பிறப்பாய்

என்பது பொய்.ஆனால் ஐந்தாவது மகனாய் பிறந்த சித்தார்த் ஒரு நாள்

இறந்து போவாய் என்பது மெய்.மரணம் என்பது ஒரு இயற்கையான  ஒரு

நிகழ்வு.அதன் வேதனைதனை காலம் சரிபடுத்தும்.ஆனால் நாம் அதிலேயே

உழன்று கொண்டு இருப்பது நாம் நமது பொறுப்பை தட்டி கழிப்பதற்கு சமம்".


    "அதில்லை அண்ணா!குருவி தலை பனங்காயாய் அண்ணாவின்

பொறுப்புக்கள் அதிகமானதால்தான் அந்த சுமையை சுமக்க

இயலாமல்தான்  அண்ணாவிற்கு இந்ததிடீர் மறைவு ஏற்பட்டதோ என்று

எனக்குள் பெரிய  கலக்கம்"


   "சித்தார்த் நீ ஒன்றை மறந்து பேசுகிறாய்.உன் அண்ணா  மட்டுமா தனியாக

சுமந்தார்.உண்மையாக சொல்ல போனால் உன் அன்பான அண்ணி மனதார

தோள்  தரவில்லை எனில் உன் அண்ணனால் உன் அப்பாவின் பெயரையும்

மரியாதையையும் காப்பாற்றி இருக்க முடியாது.அதை காப்பாற்றி அதற்குள்

தன்னை ஐக்கிய படுத்தி செயலாற்ற உனது அண்ணி உறுதுணையாய்

 இருந்ததால்தான், சுற்றத்தாரின் உதவியுடனும் ஊராரின் உதவியுடனும் உன்

அண்ணனால் தன் கடமைகளை சரிவர செய்ய முடிந்தது.உண்மையில் உன்

எண்ணப்படி இருந்தாலும் குருவி தலை பனங்காயாய் இன்னமும் உன்

அண்ணிதான் சுமந்து கொண்டிருக்கிறார்.நமது எல்லோரின் ஒரே கடமை

அவருக்கு பக்க பலமாய் இருப்பதுதான்.தலைச்சன் சம்சாரம் தாய்க்கு சமம்

என்று சொல்வார்கள்.அதற்கு மிக சரியான உதாரணம்  சாமி மகளான உனது

அண்ணிதான்.அவர் இனி தனது பிறந்த வீட்டில் இருந்தது போதும்.நான்

இப்பொழுது உனது வீட்டிற்குதான் கிளம்பி கொண்டிருந்தேன்.உன்

தாயுடனும் உனது மனைவியுடனும் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்".



    "அதற்கு முன் ஒரு வார்த்தை சித்தார்த்!.நான் உன்னைப் பற்றி

கேள்விபடுவதெல்லாம்எதுவும் சரியாக இல்லை.உன்னை சரியாக்கும்

எண்ணம் உனக்கு நிஜமாகவே இருக்கிறதா?".சித்தார்த் கூனி குறுகிப்

போனான்.சந்துருவின் கையைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான்.


                                       

                                                    தெளிவுப் பெற்றான்.


   "


             

 


                      

 



    

10.Thai Mann.

   விஜயன் பயணித்த வண்டி,விஜயனின் ஊர் வந்து சேர்ந்தது.வண்டியின்

சத்தம் கேட்டதும், என்னஆச்சரியம்! விஜயனின் சொந்தங்களுடன்

அவனது ஊரே வண்டியின்எதிரே வந்து கூடி நின்றது. தனது சொந்த மண்ணின்

இயல்பான,ஆழமான,ஆத்மார்த்தமான,ஆரவாரமான  வரவேற்பில் விஜயன்

உருகிபோனான்.பிரவாகமாக பொங்கி நீர்வீழ்ச்சியாக உருமாறிக்

கொண்டிருந்த அவனுடைய கண்கள்  சொந்தங்களுடன் கரைந்து

உருகிக் கொண்டிருந்தன.



    தான்  மனதளவிலும்,உடலளவிலும் தன் சொந்த மண்ணை மறந்து,அதன்

உணர்வுகளை மறந்து,மரத்துப் போய் எவ்வளவு தூரம் விலகி இருந்த

போதிலும் நீ என்றும் எங்களை சேர்ந்தவன்; உனக்கு என்றும்,எதற்கும்

நாங்கள் பக்கபலமாக இருப்போம்  என்று குறிப்பால் உணர்த்திக்

கொண்டிருக்கும் தன்  சொந்த மண்ணின் இந்த சலனமில்லாத அன்பிற்கு தான்

தகுதியானவன்தான? என்று விஜயன் மறுகிப் போனான்.இதையெல்லாம்

கூடவே நின்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த வண்டி ஓட்டுனர்

கூட கண் கலங்கி நின்றார்.



    இதற்குள் விஜயனின் தாய் அவனது சகோதரி கைப்பற்றி விரைந்து

வந்து விஜயனை நெஞ்சார அணைத்து உச்சி முகர்ந்தார்.அவனது

சகோதரியோ, தன் சக உதிரனின் ஒரு கரம் பற்றி அதை தன் நெஞ்சோடு

சேர்த்து கொண்டார்.அவரது பிரவாகமான  அன்பு,அவர்  பற்றியிருந்த

விஜயனின் ஒரு கை மூலம் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

பரபரவெனபரவிக் கொண்டிருந்தது.சிலிர்த்துப் போனான் விஜயன்.



   தன் தாயையும்,தன் தமக்கையையும் அவர்கள் கைகள் பற்றி தன் கண்களில்

நீர் மல்கி மங்கலாகத் தெரியும் அவர்களது உருவங்களை  மாறி மாறி உற்று

உற்றுப்    பார்த்துக்கொண்டே  இருந்தான் விஜயன்.தாயும்,தமக்கையும்

திடகாத்திரமாக  இருந்தது மனதிற்கு மிகவும் தெம்பை தந்தது.கூடவே 

அவர்களது வயதும்,ஆரோக்கியமும் ஒன்றை ஒன்று ஆரோக்கியமாக

பராமரித்து வரும் பாங்கு அவர்களது தோற்றத்தில் மிளிர்ந்தது.அவர்களது

ஆரோக்கியமான,கம்பீரமான தோற்றம் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டான்

விஜயன்.



    அவனது தாயோ,அவனை கண்ட அந்த ஒருநிமிடத்தில் விஜயனின் பால

காண்டம் முதல் இப்போது நிலைக்கொண்டிருக்கும் ஓய்வு  காண்டம் வரை

மானசீகமான இனிய பயணம் மேற்கொண்டு தன் நிலை வந்து சேர்ந்தார்.

விஜயனின்  சகோதரிதான் பற்றியிருந்த அவன் கை அசைத்து  அவனை

அவன்  நிலைக்கு கொண்டுவந்து சேர்த்தார்.


    அந்த வண்டி ஓட்டுனர்' விஜயனின் உடமைகளை நிதானமாக

ஒவ்வொன்றாக வண்டியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார்.அவர் தன்

பணியில் இருக்கும்போதே சில இளவட்டங்கள் அவைகளை  துரிதமாக

விஜயனின் இல்லம் கொண்டு சேர்த்தன.அவர்களது ஒன்றிய

மனப்பான்மையை கண்டு அசந்து போனான் விஜயன்.


    எல்லா சேம நலன் பரிமாற்றங்கள் முடிந்தபின் விஜயன் குடும்பத்தினர்

வீடு வரை கொண்டு வந்து  சேர்க்கப்பட்டனர்.பிறகு விஜயன் சிரம

பரிகாரங்களுக்காக சோப்பு,துண்டுடன் கொல்லைப் புறத்திற்கு அனுப்பப்

பட்டான்.பிறகு தாயும்,மகளுமாக விஜயனுக்குப் பிடித்தமான பணியாரங்கள்

தயாரிக்க ஆரம்பித்தனர்.அதற்கான மாவை பிசைந்து கொண்டிருந்த போது

அவர்களுக்கு மிகவும் பரிச்சியமான, படு  நிச்சயமான அந்த அச்சம் அவர்களை

பிசைந்தெடுத்துக் கொண்டிருந்து.




                                                                                                  தொடரும்.........



 


   

Wednesday, August 20, 2014

9.Thai Mann.

   விஜயனுக்கு தனது சொந்த மண்ணை நெருங்க நெருங்க அந்த மண்

சம்பந்தப் பட்ட எல்லா விஷயங்களும் அலைஅலையாய் வந்து மனதில்

மோதி மோதி சென்றன.ஒரு பக்கம் இந்த இருபது வருடங்களாக சொந்த

மண்ணை மிதிக்காமல் அதாவது மதிக்காமல்  இருந்த விளைவால், உற்பத்தி

ஆகிக் கொண்டேயிருந்த அந்தக் குற்ற உணர்வு அவனை தகித்துக்

கொண்டிருந்தது. இன்னொரு புறம் தன் அன்புத் தாயையும்,தன்  அன்பு

சகோதரியையும் இதுவரை கடிதங்கள் மூலம் பார்த்தும்,பேசியும் வந்துக்

கொண்டிருந்த கனவுத் தருணங்கள் இப்போது நிஜத் தருணங்களாக மாறும்

நெகிழ்வு நெருங்கிக் கொண்டிருப்பதை எண்ணும்போது பாசமும்,நேசமும்

மாறி ,மாறி அவன் நெஞ்சில் மோதி அவனைத் திக்குமுக்காடச் செய்தன.


   விஜயன் தான் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் சரிபார்த்து விட்டு

விமான நிலையத்திற்கு வெளியே வந்தான்.மிகவும் அதிகமான

பொருள்கள்தான்.விமானத்தில் அனுமதிக்கப்பட்ட எடை வரை பலதரப்பட்ட

பொருள்கள் அவன் முன்னால் பரந்து விரிந்து கிடந்தன.பலதரப்பட்ட

சொந்தங்களுக்கும்  தன் பாசத்தையும், நேசத்தையும் , மரியாதையையும்

 உணர்த்தும் விதமாக அவரவர் இயல்புக்கு ஏற்ப அளிக்கப்பட வேண்டிய

பொருட்கள்.பெரிய வண்டியாகவே பார்த்தான். 


   விஜயன் பயணம் செய்த அந்த வண்டியின் ஓட்டுனர் விஜயனின் தாய் மொழி

பேசுபவர்தான்.முதலில் மிகவும் உற்சாகமாக பேச்சைத் துவக்கினார்.ஆனால்

விஜயனின் உற்சாகமற்ற பதிலைக் கேட்டதும்,அவர் தன் விசாரணையை

நிறுத்திக் கொண்டு,வண்டியில் இசைத்துக் கொண்டிருந்த இசையின் ஒலி

அளவை சற்று அதிகப்படுத்திவிட்டு,சாலையில் கவனம் செலுத்தினார்.



    உண்மையில் அந்த ஓட்டுனரின் பாடல் தொகுப்பு மிகவும் சிறப்பானதாக

இருந்தது.பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.ஒவ்வொருப்

பாடலும் பயணம் செய்பவரை அவருக்கு அறிமுகமான ஏதாவது  ஒரு

பிராயத்திற்கோ அல்லது அவருக்கு அறிமுகமான ஏதாவது ஒரு

சூழ்நிலையின் பின்னணிக்கோ சென்று சேர்த்து,சேர்த்து ,மீட்டு,மீட்டு

வந்தது.



   உண்மையில்,உற்சாகமான மன நிலையில் பயணம் செய்பவர்கள்

அந்தப் பாடல்களின் தொகுப்பை மனமார இரசித்திருப்பார்கள்.அந்த இனியப்

பாடல்களின் தொகுப்புக்கு உரிமையாளரான அந்த வண்டி ஓட்டுனரையும்

வெகுவாக பாராட்டி இருப்பார்கள்.இன்னும் சொல்லப்போனால் பயணம்

செய்பவரின் பிராயத்திற்கு ஏற்ப நேர்த்தியான நல்லப் பாடல்களை இசைக்கச்

செய்வதில் அந்த ஓட்டுனருக்கு ஒரு சாதுரியம் இருப்பதாகத் தோன்றியது.

ஆனால்,இதை எல்லாம் உள்வாங்கும் மனநிலையில் விஜயன் இல்லை.

அதாவது அவன் மனம் அவனிடத்தில் இல்லை.அதுதான் உண்மை.




   அது மட்டுமின்றி விஜயனுக்கு  இன்னொரு முக்கியமான விஷயமும்

புரியவில்லை.புரியவில்லை  என்பதை விட பெரும் புதிராக வேறு இருந்தது.

அவனை அயல் நாட்டில் இருக்க விடாமல் இப்படி இரும்புப் பிடியாய்

இழுத்துக் கொண்டு வருவது எது என்பதை அவனால் அனுமானிக்கவே

முடியவில்லை." ஒருவேளை அம்மாவின் இறுதிக் காலம் நெருங்கி

விட்டதோ! ".அந்த எண்ணம் அவனைத் தூக்கி வாரிப் போட்டது.பெரும்

திகிலடைந்துப்  போனான்.


   விஜயனை அவ்வப்போது கவனித்துக் கொண்டு வந்த அந்த நடு வயது

வண்டி ஓட்டுனருக்கு,விஜயனின் முகபாவம் மிகவும் கலக்கம் ஏற்படுத்தியது.

அவர், வண்டியின் இசையை முற்றிலும் நிறுத்தினார்.வண்டியின் வேகத்தை

படிப்படியாகக் குறைத்து வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினார்.நன்றாக

விஜயன் பக்கம் திரும்பி,"ஸார்! இன்னும் ஒரு கால் மணி நேரத்தில் ஊர் வந்து

விடும்.ஆனால் உங்களுக்கு ஏதோ உடம்புக்கு முடியலை போலிருக்கு.போற

வழியில் எனக்குத் தெரிந்த டாக்டரிடம் காட்டி விட்டுப் போவோமா!

ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும்,ஒரு டாக்டரின் நம்பர் என்னிடம்

இருக்கிறது.என் வண்டியில் ஏறும் பயணிகளுக்கு  உதவத்தான் இந்த

 ஏற்பாடு .பாவம்!எவ்வளவு தூரத்திலிருந்து என்ன என்ன வேலை விஷயமாக

வருவார்களோ தெரியாது.என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி;நிறைய

பேருக்கு இந்த ஏற்பாடு மிகவும் உதவியாக இருக்கிறது ".என்று மிகவும்

பரிவுடன் பவ்யமாகக் கூறினான்.


   விஜயன் இப்போதுதான் அந்த வண்டியின் ஓட்டுனரைத் தெளிவாகப்

பார்த்தான்.தன் பணியில் ஒரு நிறைவுப் பெறும் ஒரு தெளிந்த முகம்.பார்க்க

விருப்பம் உண்டாகும் முகம்.அந்த முகத்தின் களையில் ஒரு வசீகரம்

இருந்தது.அகம் மலர்ந்தால்தான் இந்த மாதிரி ஒரு முகம் மலரும்.தன்னைக்

காண்போரை  எல்லாம் மலரச் செய்யும்.வியந்தான் விஜயன்.அந்த வியப்பின்

ஊடே," இல்லேப்பா!எனக்கு ஒன்றும் இல்லை.நானே ஒரு டாக்டர்தான்.அயல்

நாட்டிலிருந்து நிரம்ப நாள் கழித்து சொந்த ஊர் பார்க்க வர்றேன்.எனது

அம்மாவையும்,அவரை கவனித்துக் கொண்டிருக்கும் எனது அக்காவையும்

பார்க்கும்போது நிலைத் தடுமாறாமல் இருக்க வேண்டுமே என்ற

கவலைதான். ஆனாலும்,பயணிகளுக்கான உன்னுடைய சமயோசித ஏற்பாடு

மிகவும்  நல்ல ஏற்பாடு. கடவுள் என்றும் உன் நல்ல மனதிற்கு பக்க பலமாய்

இருப்பார்" என்று மனதார வாழ்த்தினான்.


   அந்த வண்டி ஓட்டுனருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி." நிரம்ப சந்தோஷம்

ஸார்!உங்களை மாதிரி பெரியவங்க வாழ்த்து என்னைப் போன்றோரை

இன்னும் நாலு நல்லது செய்ய உற்சாகப் படுத்தும் ஸார்! நான் சந்தோஷப்

பட்ட மாதிரியே உங்க சொந்த ஊரிலேயும் உங்களுக்கு நிறைய

சந்தோஷங்கள் காத்துக்கிட்டிருக்கும் ஸார் !.கவலைப் படாமே உங்க ஊர்

மண்ணிலே  உங்க கால்களை பதிய விடுங்க ஸார்!.இப்போ போலாமா ஸார்!"


    அந்த ஓட்டுனரின்,அந்த ' ஸார்!ஸார்! ' இல் இருந்த பவ்யமும்,அக்கறையும்

விஜயன் மனதை வெகுவாக இலகுவாக்கின.சீராகச் செல்லும் வண்டியைப்

போலவே விஜயனது எண்ணங்களும் சீராயின.அவனது சொந்த ஊரும்

நெருங்கிக் கொண்டிருந்தது.



                                                                                     

 part10                                                                                                     தொடரும்............