Monday, September 18, 2017

19.Thai Mann.

   விஜயனின் கடிதம் மிகவும் சுவராஸ்யாமாக இருந்தது மீனாவிற்கு.

அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டவேயில்லை.

மறுபடியும்,மறுபடியும்  படித்துக் கொண்டே இருந்தாள் .விஜயனிடமிருந்து

அடுத்தக் கடிதம் வரும்வரை இதையேதான் செய்துக் கொண்டிருப்பாள்

போலிருக்கிறது.விஜயனை சகட்டுமேனிக்கும் தூக்கியடித்த அந்தப் புயல்

இவ்வளவுத்தொலைவில் இருக்கும் மீனாவையும் விட்டு வைக்கவில்லை.

தனக்குள் வாரி சுருட்டிக் கொண்டது.மீனா,அந்த புயலுக்குள் ஒரு கதகதப்பை

உணர்ந்தாள். அந்த உணர்வு அவளுக்கு விசித்திரமாக இருந்தது.அந்த

விசித்திரத்தின் ஊடே மறுபடியும்,மறுபடியும் விஜயனின் கடிதத்தில்

 ஐக்கியமானாள் .


 
    இரண்டு நாளாக அம்மாவின் போக்கு ஸ்ரீதருக்கும் விசித்திரமாக இருந்தது.

அப்படி என்னதான் அப்பா எழுதி இருப்பார்.அப்பாவின் முதல் கடிதங்களை

எல்லாம் ஸ்ரீதரும் படித்திருக்கிறான்.சுகமான அனுபவம்தான்.மறுப்பதற்கு

இல்லை.ஆனால்,இந்த கடிதத்தை அம்மா இன்னும் படிக்க தரவேயில்லை.

அப்படி என்றால் ஏதாவது தனிப்பட்ட முறையில் எழுதி இருப்பாரோ?அப்படி

என்றால் அம்மா இப்படி பகிரங்கமாக படிப்பானேன்.ஒன்றும் விளங்கவில்லை

ஸ்ரீதருக்கு.அம்மா படித்து விட்டுத் தரட்டும் என்றபடி தொலைகாட்சி பெட்டிக்கு

உயிரூட்டினான்.அங்கிருந்தபடியே அம்மாவை அவ்வப்போது பார்வையால்

அளந்துக் கொண்டிருந்தான்,


   அம்மா அந்த கடிதத்தில் மூழ்கி போயிருந்தாள்.கடிதத்தில் விஜயன்

விவரித்த அந்தப்  பெண் புயலின் பிரவேசக் காட்சியை  நேரில் பார்த்துக்

கொண்டிருப்பது போலவே உணர்ந்தாள்.விஜயன் கடிதத்தில் தொடர்ந்தான்.


  " மாலையில் வந்த அந்த புயலில்,அதன்  வேகத்தில்,அதன் தாக்கத்திற்கு

ஈடாக ஒரு நேர்த்தியான அழகு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த புயலின்

தாக்கம் சற்று மட்டுப்பட்டிருந்தால் கூட அந்த மாசு மருவற்ற அந்த

அழகை,ஆண்,பெண் என்ற வித்தியாசமும்,எந்த வயது வித்தியாசமுமின்றி

மிகவும் வாஞ்சையுடன் ரசித்திருப்பார்கள்.அத்தனை திருத்தமாக இருந்தது

அந்த பெண் புயல்".


   " அந்த பெண் புயலின் தாக்கத்தை  மனதாலும்,உடலாலும் எதிர் கொள்ளும்

சக்தியை,அம்மா,முழுவதுமாக இழந்து போனது அவரது தோற்றத்திலேயே

தெளிவாகிப் போனது.ஆனால் மீனா!எனக்கு அம்மாவை போல அந்த புயலின்

கடுமையான தாக்கம் அப்போதைக்கு உறைக்கவில்லை .அதன் சாத்வீகமான

அழகில் மெய் மறந்து போனேன்.நாம் இங்கிருந்து கிளம்பும்போது அதற்கு

இரண்டு வயது இருக்குமா?ஆனால் இப்பொழுது நீங்கள் எல்லோரும்

அதனைப்  பார்த்தால் அசந்துதான் போவீ ர்கள்.கிராமத்திற்கே உரித்தான அந்த

தெளிவான தைரியம்,அதன்  தோற்றத்திற்கு மெருகேற்றிக் கொண்டிருந்தது".


    "அந்தப்  பெண் புயல் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.ஏன் நான் அங்கு

நிற்பதையே ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.நேராக அம்மாவை

நோக்கிச் சென்றது.அம்மா அயர்ந்து போய் அமர்ந்திருந்தார்.அவர் முன்

தன்னை சரிபடுத்தி,நெறிபடுத்தி அமர்ந்தது.மேலும் தளர்ந்து போயிருந்த

அம்மாவின் முகவாயை உயர்த்திப்  பற்றி,அம்மாவின் கண்ணை உற்று

நோக்கியபடி அழுத்தமாக,திருத்தமாக,தெளிவாக கேட்டது .உருக்குலைந்துப்

போனேன் நான்".


   மீனாவிற்கு கடிதத்தை தொடர தைரியம் வரவில்லை.அப்படியே படிக்காமல்

விட்டு  விடலாமா? என்று முதல் முறை படிக்கும்போது தோன்றிய எண்ணம்

இப்போதும் தவறாமல் திரும்பவும் தோன்றியது.ஆனாலும் தொடர்ந்து

படித்தாள்.


   "அந்த பெண் புயல் கேட்டக் கேள்வி என்னத் தெரியுமா? "ஏனாத்தா?

எங்களுக்குத்தான் சொல்லிக் கொடுத்தியாக்கும் "தந்தை தாய் பேண் "

அப்படின்னு. உம்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க மறந்துட்டேப்போல".

அம்மாவிற்கும்,பிள்ளைக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு வெளியேறி

விட்டது அந்தக் கடும் புயல்.நான் அந்த புயலிலிருந்து மீண்டு வருவேனா மீனா

?.கடிதம் முடிந்திருந்தது,


 

                                                                                                தொடரும்...................
   


     

Friday, September 18, 2015

18.Thai Mann.

   விஜயன் தமக்கையின் வீட்டில் அந்த பத்ரகாளியின் வருகைக்காக இருட்டும்

வரைக்  காத்திருந்தும் அவள் வரவேயில்லை.வேறு வழியின்றி வீட்டில்

எல்லோரிடமும் விடைப் பெற்று சோர்ந்த முகத்துடன் வீடு வந்து சேர்ந்தான்.

தமக்கையின் வீட்டிலும் பெரும் அசௌகரியத்துடன் விஜயனை வழியனுப்பி

வைத்தார்கள்.


    விஜயனின் சோர்ந்த முகத்தை பார்த்ததும்,அவனது தாய்க்கு எல்லாமே

புரிந்து போயிற்று.ஆனால் தனது கண்ணான மகனை எப்படி ஆறுதல் கூ றி

அவனை தெளிவுப் படுத்துவது என்பதுதான் புரியவில்லை. மேலும் விவரம்

எதுவும் கேட்டு  தனது அருமை மகனை சங்கடப்படுத்த விரும்பாமல்  அவன்

அலுப்புத் தீர குளித்து விட்டு வரட்டும் என்று உள்ளே சென்று துண்டை எடுத்து

 வந்து அவன் தோள் மீது  போட்டு விட்டு அவனைக் கொல்லைப்புறம்

அனுப்பி வைத்தார்.


    ஆனால் அந்த குளிர்ந்த நீராலும் விஜயனை ஆசுவாசப்படுத்த

முடியவில்லை. தமக்கை வீட்டிற்கு புறப்பட்டபோது உண்டான உற்சாகம்

முற்றிலுமாக வடிந்து போனது.குளித்து முடித்து வந்து உண்ண அமர்ந்த

பின்னும் அவனது மனது ஒரு நிலையில் இல்லாமல் தத்தளித்துக் கொண்டே

இருந்தது.தட்டில் கன கம்பீரமாய் வீற்றிருக்கும்,ஆவிப் பறக்கும்,விதவிதமான,

கண்ணுக்கு இதமான உணவு பதார்த்தங்கள் அனைத்தையும் விஜயன் எவ்வித

உணர்வும் இன்றி பார்த்த வண்ணம் இருந்தான்.

 
     ஒரு  விஷயம் அவனது மனதை குடைந்துக் கொண்டே இருந்தது.ஒரு

இருபது இருபத்திரண்டு வயது பெண்ணிற்கு, ஏறக்குறைய இருபது ஆண்டுகள்

பணி  நிமித்தம் வெளி நாட்டில் இருந்து விட்டு தாயகத்திற்கு வந்திருக்கும்

தாய் மாமனை பார்க்க விரும்பாமல் தவிர்க்கிறாள் என்றால்,ஏதோ பெரிய

விஷயமாகத்தான் இருக்க வேண்டும்.அது என்னவாக இருக்கும் என்பது

விஜயனுக்கு பிடிபடவேயில்லை.


   "ஏம்ப்பா! என் மகனுக்கு எல்லாமே பிடிச்சதாதானே ஆசையா சமைச்சி,

அழகா தட்டிலே எடுத்து வச்சிருக்கேன்.எம்புள்ளை சாப்பிடற அழகை

கண்ணார பார்த்து ரசிக்கத்தானே பக்கத்திலேயே தவமா உக்காந்திருக்கேன்.

எதையுமே தொடாமே இப்படி பார்த்துட்டே இருந்தா எப்படி சாமி? இப்போ

எம்பையனோட   நாக்கு பழைய ருசி எல்லாத்தையும் மறந்திடிச்சோ?". என

விஜயனின்  அம்மா விஜயனின் கைப்பற்றி அரற்றத் தொடங்கவும் விஜயன்

விழித்துக் கொண்டான்.


   அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்.அம்மாவின் அன்பு காட்டாற்று வெள்ளமாக

பிரவாகமெடுப்பதைக் கண்டான்.அந்தப் பிரவாகத்தில் தன் உடலும்,உணர்வும்

ஒரு சேர அதிர்ந்துக் கொண்டிருப்பது புரிந்தது.தன் அம்மாவின் அருகாமை

அவளது முந்தானையில்தான் இருக்கிறது என்ற சூட்சமத்தைப் புரிந்துக்

கொண்டு அதைப் பற்றியப்படியே,அவளை சுற்றிச் சுற்றி வந்த தன் சிறு

வயது உலகம் அவன் கண்முன் விரிந்தது.


    தன் உடலையும்,உணர்வுகளையும் ஒருமுகப்படுத்தினான்."எனக்குப்

புரியாத புதிர்களெல்லாம் புரிகிறபோது புரியட்டும்.இப்போது அம்மாவை

எந்த விதத்திலும் சங்கடப்படுத்த வேண்டாம்" என முடிவெடுத்தவனாய்

தட்டிலிருந்த பதார்த்தங்களை கண்கள் விரியப் பார்த்தான்.


     சிறுப் பிள்ளைஆகி அம்மாவின் முன் கை நீட்ட,அம்மாவின் கண்ணில்

அருவியாய் நீர் ஊற்று தடம் பதித்தது.அதனை தன் முந்தானையால்

விலக்கியப்படி  தன் பிள்ளையின் நீட்டி,மடங்கி,மறுபடியும்,மறுபடியும்

நீட்டி,நீட்டி மடங்கும் கைகளில்,ஒவ்வொரு பலகாரமாக அதற்கான

சட்னி,சாம்பாருடன் தோய்த்து தோய்த்து வைத்து,பலகாரங்களின் ருசியை

பலமடங்காக்கினார் அம்மா.ரசித்து,ருசித்து உண்ட வண்ணம் இருந்த

விஜயனுக்கோ,தான் இப்போதுதான் தன் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்து

கொண்ட கும்பகர்ணனாய் உணர்ந்தான்.


    ஒவ்வொரு பலகாரமும்,அதற்கான சரியான இணையுடன் இணைந்து

அதற்கான பிரத்யோக ருசியுடன் நாக்கு மொட்டுகளில் கரைந்து அதற்கே

 உரித்தான உணர்வு பின்னணிகளை உசுப்பி விட்டது.மெய் மறந்து உண்டுக்

களித்தான் விஜயன். அதனைக் கண்டுக் களித்தாள் அவனது தாய்.


   என்றைக்கும் இல்லாது மிக ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுத் திரும்பினான்

விஜயன்.கண்கள் பளிச்சென்று திறந்தன.மனதும்,சாணியில் மெழுகி,பரந்து

இடப்பட்ட வாசல் கோலம் போல குதூகலித்தது. விடிந்தும்,விடியாத காலை

நேரங்களின் பரிச்சயம் கவிதை.எல்லோரது மனதையும் தெளிவுப் படுத்திக்

கொண்டே செல்லும் தென்றல்.விஜயன் அம்மாவைத் தேடிக் கொண்டே

வெளியில் வர,அவனது தெருவே அகமும்,முகமும் அன்றலர்ந்த மலராய்

மலர்ந்து அவனுக்கு முகமன் கூறியது.இளகிப் போனான் விஜயன்.


   ஆனால் அன்று மாலையே அவனது இளகிய மனம் இறுகி போகும்படியாக

பூ ஒன்று புயலாகி வந்து நின்றது.






                                                                                                 தொடரும்...............    

   



       

Friday, July 3, 2015

17.Thai Mann.

      தமக்கையின் பதிலால் அதிர்ந்துதான் போனான் விஜயன்.பிறகு அங்கிருந்த

எல்லோரையும் ஒரு முறை உன்னிப்பாகப்  பார்த்தான்.எல்லோரது முகமும்

ஒரே உணர்ச்சியைத்தான் காட்டின. அதாவது ஒரே உணர்ச்சியை  அதாவது

ஒரு வகை திகில் நிறைந்த முகங்களாக தென்பட்டன.ஒன்றும் புரியாமல்

எல்லோரையும் இன்னொரு முறை உற்றுப் பார்த்தான்.


    "என்னக்கா! என்ன விஷயம்? செல்லம்மா பேரைக் கேட்டாலே ஏன்

எல்லோரும் ஒரு மாதிரியா இருக்கீங்க?நான் வருவது அவளுக்குத்

தெரியாதா? எல்லோருமே இங்கே இருக்கறப்போ அவள் மட்டும் எங்கே

போனாள்?.எவ்வளவு ஆசையா வந்திருப்பேன் ,எல்லோரையும் ஒண்ணா

பார்க்கலாம்னு.எங்கே அக்கா போயிருக்கா நம்மக் கடைக்குட்டி செல்லம்மா?".


   விஜயன் என்னமோ கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் கொண்டேதான்

இருந்தான். ஆனால் எந்தக் கேள்விக்கும்  பதில்தான் வரவே இல்லை.

குழம்பிப் போனான் விஜயன்.மாமாவைத் திரும்பிப் பார்த்தான்.

அவரிடமிருந்து நீண்ட பெருமூச்சுதான் பதிலாக வந்தது.அரண்டுப்

போனவனாய் எழுந்து தன் தமக்கையின் அருகில் வந்து அமர்ந்தான்.


    தமக்கையையே  உற்றுப் பார்த்தவாறு  இருந்தான்.அவனது நிலையை

சகஜமாக்க மாமா அவருக்கே உரிய சாதுரியத்துடன் விஜயனின் கவனத்தைத்

தன் பக்கம் திருப்பினார்."அது ஒண்ணுமில்லை தம்பி! செல்லம்மாவுக்கு உங்க

மேலேயும்,உங்க குடும்பத்து மேலேயும் சொல்லவொண்ணா கோபம்.அதை

"கோபம்" அப்படின்னு சாதாரணமா எடுத்துக்க முடியாது தம்பி! உங்கக்கா

சொன்ன மாதிரி பத்ரகாளி கோபம் தம்பி! எனக்கும் செல்லம்மாவோட அந்த

கடும் கோபம் நியாமானதுதான்னு படுது".


    மாமா என்னாவோ சாதாரணமாகத்தான் சொல்வது போல சொன்னார்.

ஆனால்,அதில் உள்ள வீரியம், சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விதமாக

இல்லை.விஜயனுக்கு திக்கென்றிருந்தது.செல்லம்மாவை,கடைசியாக

ஒன்றரை வயதுக் குழந்தையாக தன்  தமக்கையின் இடுப்பில் ஒன்றி

இருந்தபோது பார்த்தது.இப்போது இவர்கள் எல்லோரும் தரும் அறிமுக

படலத்தை நினைத்தாலே ஒரு மாதிரி படபடவென்று இருந்தது.



                                                                           
                                                                                                                     தொடரும்...........  


          

Saturday, January 3, 2015

16.Thai Mann.

   தமக்கையின் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் குளிர்ச்சி மிகவும் இதமாக

இருந்தது விஜயனுக்கு.உயரமான உத்தரங்களும்,விஸ்தாரம் மிகுந்த

அறைகளும்,விசாலமான முற்றமும்,பரந்து விரிந்த வாசலும்,நேர்த்தியான

பாராமரிப்பும், அதனுடன் ஒன்றியிருந்த  தூய்மையும் மனத்தைக் கொள்ளைக்

கொண்டது.தேவையற்ற சாமான்கள் கண்களுக்குத் தட்டுப் படவேயில்லை.

எல்லாம் அதற்கான தனியறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.விஜயன்

அனுமானித்தான்.


   வீட்டில் எல்லோரும் முக மலர்ச்சியுடந்தான் இருந்தார்கள்.ஆனால்

அதையும் மீறி ஒருக் கலவரம் அவ்வப்போது எல்லோரையும்த் தொற்றிக்

கொண்டு வருவதும்,போவதுமாக இருந்தது.மாமா,"என்னத் தம்பி!ரொம்ப

நாளைக்கப்புறம் ஊர் ஞாபகம் வந்திருக்குப் போல!ஓய்வுப் பெற்றக்

கையோட அப்படியே கிளம்பி வந்துட்டிங்க போலிருக்கு.சௌக்கியமா

இருக்கீங்களா?வீட்டிலே எல்லோரும் சௌக்கியமா இருக்காங்களா?

குடும்பத்தை அழைச்சுட்டு வர சௌகரியப்படலையா?"


    மாமா என்னவோ சாதாரணமாக எதார்த்தமாகத்தான் பாந்தமாகத்தான்

 கேட்டார்.ஆனால் விஜயனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவனுக்கே

அவன் எதற்கு வந்தான் ஏன் வந்தான்?எது அவனை இவ்வளவு ஆக்ரோஷமாக

இழுத்துக் கொண்டு வந்தது?எத்தனை நாட்களுக்கு அவனது தாய் மண்ணில்

தங்க உத்தேசித்திருக்கிறான்?என்பது புரிபடாத போது குடும்பத்தை எப்படி

அழைத்துக் கொண்டு வருவது?.


    விஜயன் மெளனமாக மாமாவை ஏறிட்டுப் பார்த்தான்.மாமாவிற்கும்

அவனது சங்கடம் புரிந்திருக்கும் போல."சரி விடுங்க தம்பி! உங்களை

அழைச்சுட்டு வந்தாப்போல உங்க சொந்த மண்ணும்,ஊற்றும் அவங்களையும்

வெகு நாள் காக்க வைக்காமை இங்கே  அவங்க சொந்த இடத்திலே கால் பதிய

வைக்கட்டும்".மாமாவின் ஆதங்கம் தெளிவாகப் புரிந்தது.தன் குடும்பத்தை

பார்க்கும் ஆவல் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும்,அவரது உடலின்

ஒவ்வொரு  அசைவிலும் துல்லியமாகத் தெரிந்தது.உடலின் மொழியை நாம்

சரியாக மொழிப் பெயர்க்க தெரிந்தோமானால்,அது உண்மையைத் தவிர

வேறு எதையும் சொல்வதில்லை என்பது நிதர்சனமாகப் புரியும்.


    அதற்குள் அவனது தமக்கை,அவரது இரு மகன்கள் மற்றும் மருமகள்கள்

மற்றும் பேரக்குழந்தைகள் உதவியுடன்,ஒரு பெரிய மேசையை  நடு வீட்டில்

வைத்து,அதன் மேல் ஒரு மெல்லிய வெள்ளைத் துணி விரித்து மாலை நேர

பலகாரங்களை சுட சுட ஒன்றன் பின் ஒன்றாக அழகாக பரப்பி வைத்தார்.

அந்த பலகாரங்களின் பலதரப்பட்ட இதமான  வாசங்களும்,அது பரப்பி

வைக்கப்பட்ட அழகும்,கண்களையும்,நாவையும் ஒரு சேர சுவைக்க

அழைத்தன.


    எல்லோரும் ஒன்றாக அங்கங்கு அமர்ந்து அளவளாவிக் கொண்டே

ருசித்து உண்டனர்.ஒரு குடும்பத்தின்,அதன் அங்கத்தினர்களின்  அன்பின்,

கௌரவத்தின் பலமான,ஆழமான இழையை  நாம் சென்ற சிறிது

நேரத்திற்கெல்லாம் நம்மால் இனம் கண்டுக் கொள்ள முடியும்.விஜயனின்

தமக்கையின் குடும்பத்தில் அந்த அன்பான,பண்பான இழை எல்லோரையும்,

எல்லோருடனும் அந்தந்த உறவு முறைக்கேற்ப நேர்த்தியாக பிணைக்கப்

பட்டிருந்தது.அது மட்டுமில்லாது,ஒவ்வொரு தம்பதிகளுக்கு இடையிலான

அந்த காதலும்,நேசமும் அதை அவர்கள் வெளிபடுத்தும் விதமும்,இதமும்

தென்றல் எழுதும் கவிதை.


     ஒருவருக்கொருவர் உபசரிப்பதென்ன!ஒருவரை ஒருவர்

பரிகாசிப்பதென்ன!அவர்களது சரீரம்தான் வெள்ளந்தியாக அதிகம்

பேசியது.அதில் எல்லா வகையான அன்பின் ஆழமும் பிரதிபலித்தது.மிகவும்

இனிமையான ஒரு அனுபவம் விஜயனுக்கு.சிறிது நேரம் ரசித்து,ருசித்து

உண்டபின் விஜயன் கேட்டான்."ஆமாக்கா!எங்கே  நம்மக் கடைக்குட்டி

செல்லம்மா?"உடனே அங்கே சிறு சலனமும் இல்லாத நிசப்தம்.

தமக்கையிடமிருந்து ஒரு பெரும் பெருமூச்சுடன் ஒரு திகிலான பதில்

வந்தது.


     "அவசரப் படாதே தம்பி!அந்த பத்ரகாளியே ருத்ரதாண்டவமாடி உனக்கு

தரிசனம் தருவாள்".






                                                                                             தொடரும்..........

 


 


   

     

Monday, December 29, 2014

15.Thai Mann

    விஜயனுக்கு இந்த வண்டிக்காரன் முருகன் போக்கும்,தன் சகோதரியின்

மௌனமும் பெரும் புதிராக இருந்தன.இவர்களிடமிருந்து எந்த பதிலும்

வராது என்று நிச்சயித்துக் கொண்ட,பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய்

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.பிறகு பக்கவாட்டில் திரும்பி,

 தன்னை சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தான்.


   கிராமங்கள்  எல்லாம் ஒரு சாசுவதமான, அமைதியான, ஆரவாரமில்லாமல்,

மனதையும்,உடலையும் ஒருச்சேர சாந்தப் படுத்தும் தென்றலின் இதம்

போன்று நம்மை பல விதங்களிலும் பரவசப்படுத்துபவை.அதன் அழகை

பார்க்க ,ரசிக்க  ஆயிரம் கண்களோடு ஆயிரம் மனங்களும் வேண்டும்.அதுவும்

எவ்வித சலனங்களுமற்ற மனங்கள் என்றால்,பாரதி இயற்கையில் கண்ட

இறைவனை நாமும் அவனைப் போல மிகத் தெளிவாக உணரலாம்.அந்த

பரம்பொருளின் சித்து விளையாட்டுக்களை நமது ஐம்புலன்களும் உணரும்

போது " நான் " என்ற மமதை நம்முள் காணாமல் போகும் விந்தை  நமக்குப்

புரியும். மனம் ஒரு இனம் புரியா ஆழ்கடலில் அமைதியாக பயணம் செய்யும்.

அது ஒரு இனிமையான அனுபவம்.நம்மை அறியாமல் நம் கரம்,சிரம் எல்லாம்

இறைவன் புறம் குவியும்.


    விஜயனும் இதற்கு விதிவிலக்கல்லவே! அவன் தன்னை மறந்து,தான்

பயணம் செய்யும் திசையை மறந்து தன்னைச் சுற்றிலும் உள்ள இயற்கை

அழகில் மயங்கி,அதில் ஒன்றிப் போனான்.வண்டி தாலாட்டாய் போய்க்

கொண்டிருந்தது.வழியில்,அக்கம் பக்கத்து கிராம மக்கள், வயல் வேலை

முடிந்து சிறு சிறுக் குழுக்களாக வந்துக் கொண்டிருந்தார்கள.பலர்,தங்களுடன்

ஒரே வேலையாக ஆடு,மாடுகளையும் பற்றிக் கொண்டு வந்தார்கள்.வருகிற

வண்டி, அவர்களுக்கு எல்லாம் பழக்கமானதால்,நின்று விசாரித்து விட்டு

போனார்கள்.விஜயனை மிகவும் விசேஷமாக விசாரித்தார்கள்.அவர்களது

விசாரிப்பில்உண்மையான அன்பு கலந்த  எதார்த்தமே மேலோங்கி இருந்தது.

அவர்களது அப்பழுக்கற்ற விசாரிப்பு, ஒரு இதமான தென்றலாய்,உச்சி முதல்

உள்ளங்கால் வரை வருடிச் சென்றது.


    தமக்கையின் ஊர் வந்ததும்தான் விஜயனுக்கு தன் தமக்கையின்

குழந்தைகளின் நினைவு வந்தது.தன் தமக்கைக்கு மூன்று செல்வங்கள்.

இரண்டு மகன்கள்;ஒரு மகள்.அருமையான குழந்தைகள். தாயுடனும்,

தமக்கையுடனும் செல் போனில் பேசும்போது நிறைய விசாரணைகள்

உண்டு.என்றாலும்,அவர்களுடனோ,இல்லை மாமாவுடனோ ஒரு முறை

கூட பேசினதில்லை.பேசத் தோன்றியதில்லைஅவர்களது அடையாளம்

விஜயனுக்கு நினைவுக்கு வரவேயில்லை.விஜயனுக்கு மிகவும்

விசனமாகப் போனது.இப்போது, மாமாவையும்,குழந்தைகளையும் நேரில்

முகம் பார்த்து பேச இயலாமல்,ஒரு  இனம்புரியாத சங்கடம் வயிற்றைப்

பிசைந்தது.தாய்மாமன் உறவு எவ்வளவு ஒரு மகத்துவமான உறவு.தான்

அந்த அழகான உறவை கௌரவப் படுத்தவில்லை என்ற எண்ணம், ஒரு

ஆழமான வலியைத் தந்தது.


     விஜயன்,தன்னை சுதாரிப்பதற்குள்,தமக்கையின் இல்ல உறவுகள்

எல்லாம்,வண்டியை பற்றிக் கொண்டு அகமும்,முகமும் மலர ஒருவித

வெட்கத்துடன் வ ஒருசேர வரவேற்றனர்.எல்லோருக்கும்,முன்னதாக

மாமா அவனை வெகு கம்பீரமாக வரவேற்று,அணைத்தவாறு,வண்டியில்

இருந்து இறங்க உதவி செய்தார்.கூடவே இறங்கிய தமக்கை,ஒருவித

கலவரத்துடன் சுற்றும்,முற்றும் பார்வையை சுழல விட்டப் பின் ஒரு

ஆசுவாச பெருமூச்சு விட்டப்படி தம்பியை வீட்டுக்குள் அழைத்துச்

சென்றார்.    


 

                                                                                                    தொடரும்...........

Monday, November 24, 2014

14.Thai Mann.

   கடிதம் வந்திருந்தது.மீனாவிற்கு கடிதம் வந்திருந்தது.அதுவும் அவளது தாய்

நாட்டிலிருந்து மீனாவிற்கு கடிதம் வந்திருந்தது.அதுவும் அவளது அன்புக்

கணவனிடமிருந்து வந்திருந்தது.மீனாவின் கையில் அந்த கடிதம் கிடைக்கப்

பெற்றவுடன்,அவளுக்கு ஒரு நிமிடம் அவள் உணர்வு அவளிடம் இல்லை.


   கடிதப் போக்குவரத்து என்பது அடியோடு நின்று விட்டக் காலக் கட்டமிது.

தன் குழந்தைகளுக்கும் கூட இதன் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தாங்களும்,ஒரு பெற்றோராக இதன் அருமையை புரிந்துக் கொள்ளத் தம்

குழந்தைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை.


   மீனாவின் எண்ணங்கள் இப்படி சிறகடித்துக் கொண்டிருந்தபோது அவள்

கையிலிருந்த கடிதம் ஸ்ரீதரால் பறிக்கப்பட்டது.திடுக்கிட்டு திரும்பினாள்

மீனா. " என்னம்மா இது! ஏதோ கடிதம் வந்திருக்கப் போலே இருக்கே!

அதிசயமா இருக்கு.யாரிடமிடருந்து வந்திருக்கு ". அதிசயமாய் கடிதத்தை

திருப்பிப் திருப்பிப் பார்த்தான் ஸ்ரீதர்.


   " ஆமாம்! அப்பாவிடம் இருந்துதான் வந்திருக்கிறது.அதிசயமாத்தான்

இருக்கு.அவர் நம் சொந்த ஊருக்கு போய் இரண்டு மாசமாச்சு.இதுவரைக்கும்

இப்படி கடிதம் எதுவும் வந்ததில்லை.இப்போது கடிதம் வந்திருப்பதைப்

பார்த்தால்,அவரிடம் நம்முடன் பகிர்ந்துக்க நிறைய விஷயம் இருக்கும்

போல.என்னனு பிரிச்சு படி!".மீனா சாவகாசமாக அமர்ந்தாள்.


     ஸ்ரீதர் பெரும் ஆர்வத்தோடு கடிதத்தை பிரித்து உரக்க  படிக்க

ஆரம்பித்தான்.கடிதம்மிகவும்  இயல்பான அன்புடன் அழகாக ஆரம்பிக்கப்

பட்டிருந்தது. " அன்பு மீனா! நான் நம் சொந்த மண்ணில் நமது அன்பான

உறவினர்களுடன் நலமாக இருக்கிறேன்.நலமாக இருக்கிறேன் என்பதை விட

ஒரு தெளிவுடன் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றுக் கூறுவதுதான்

 சாலப் பொருத்தம் என்று நினைக்கிறேன் ".


   இந்த இடத்தில்,தாயும்,மகனும் ஒன்றும் புரிந்துக் கொள்ள இயலாமல்,

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.மேலே படிக்க சொல்லி மீனா

சைகை செய்ய ஸ்ரீதர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான். " இறைவன் அருளால்

நீங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.நாட்காட்டியை

பார்த்தால்,நம் சொந்த மண்ணில் நான் கால் பதித்து இரண்டு மாதங்கள்தான்

ஆகிறது.ஆனால் சொன்னால் உங்களால் நம்ப முடியாது என்று

நினைக்கிறேன்.ஆமாம் மீனா! எனக்கு பல யுகங்கள் ஆனது போல ஒரு

உணர்வு ".


    " இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.ஒன்று

எனது சொந்த மண்ணின் தாக்கம் இங்குள்ள ஒரு பொங்கி எழும் ஜீவன் மூலம்

எனக்குள் ஒரு தொட்டக் குறை விட்டக் குறையாக ஒரு பெரியத் தாக்கத்தை

ஏற்படுத்தி இருக்கும் என உணர்கிறேன்.இன்னொன்று உங்களை எல்லாம்

பிரிந்து வந்த ஏக்கம் மிகவும் வாட்டுகிறது என நினைக்கிறேன்.மீனா! எனது

உதவி இல்லாமல் உனது அன்றாடப் பணிகளில் சிரமம் இருக்கும் என்பது

எனக்குத் தெரியும்.ஆனால், நமது அன்புக் குழந்தைகள் எல்லா விதத்திலும்

உனக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் என்னுள் ஆழமாக

பதிந்திருக்கிறது.அது சரி! உனது இப்போதைய பணியை எப்படி உணர்கிறாய்?

நலமாக இருக்கிறாயா? நமது குழந்தைகள் இருவரும் நலம்தானே?நமது

மாப்பிள்ளை,சம்பந்தி வீட்டாரை நான் மிகவும் விசாரித்ததாக அவர்களுக்கு

தெரியப்படுத்து.அருமையான மனிதர்கள் ".


   மனம் நெகிழ்ந்து போனது மீனாவிற்கு.ஸ்ரீதருக்கு சைகைக்  காட்டி படிப்பதை

நிறுத்த செய்து விட்டு,தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

ஸ்ரீதருக்குக் கூடத் தன் தந்தையின் மாசற்ற அன்பினால் தோய்த்து எழுதப்

பட்ட அந்தக் கடிதம் ,அவரின் இயல்பான,இனிமையான அன்பை தன்னுள்

ஐக்கியமாக்கி விட்ட உணர்வு,அவனை, இதுவரை அறிந்திராத ஒரு புதிய

இதமான உலகிற்கு இட்டுச் சென்றது.அதை முழுவதுமாக உள் வாங்கிக்

கொண்டு,தன் தாயைப் பார்த்தான்.மீனா,மேலே படிக்க சொல்லி தலை

அசைத்தாள்.தொடர்ந்தான் ஸ்ரீதர்.


    " பாரேன் மீனா! இந்த கடிதம் செய்யும் ஜாலத்தை!தொலை பேசியில் பேசும்

போது தோன்றாத பல விஷயங்கள்,கடிதம் எழுத ஆரம்பித்தவுடன் எப்படி

முட்டி மோதிக் கொண்டு வருகின்றனவென்று.இங்கு ஓடியாடும்

குழந்தைகளை எல்லாம் பார்க்கும்போது,எனக்கு நம்ச்  செல்லக்

குழந்தைகளின் ஒவ்வொருப் பருவமும் என்னுள் வந்து என்னை களிப்புறச்

செய்கிறது.அம்மாவுடன் அதைப் பற்றி எல்லாம் பேசிப் பேசி,அம்மா, உங்களை

எல்லாம் பார்த்தே ஆக  வேண்டும் என்று என்னை வாட்டி எடுத்துக்

கொண்டிருக்கிறார்.அக்கா குடும்பத்தினரின் அருமையான அன்பின்

வெளிப்பாட்டினையும்,அக்கா  குடும்பத்தினரும்,நம் அம்மாவும்,அப்பாவும் நம்

ஊரில் சம்பாதித்து வைத்திருக்கும் மரியாதையையும் நீங்கள் நேரில் வந்து

உணர வேண்டும் என்று எனக்குள் ஓர் ஆழமான எண்ணம் இருக்கிறது.

இதற்கு விரைவில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படிஇறைவனிடம் மனதார

வேண்டிக் கொண்டிருக்கிறேன்".


    பின் குறிப்பு; " மீனா! அடுத்த பக்கத்தில் அம்மாவும் உங்கள் எல்லோருக்கும்

கடிதம் எழுதி இருக்கிறார்.நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக பதில் கடிதம்

எழுத வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு என்று நீங்கள் தனியாக எழுதினால்,மிகவும் களிப்படைவார்.

உங்கள் எல்லோருக்கும் உங்கள் உடல் நலத்தில் கவனம் இருக்கட்டும்.

மற்றவை  அடுத்தக் கடிதத்தில்.குறிப்பாக  பொங்கி,பொங்கி எழுந்து, என்னைச்

சித்திரைவதைப் படுத்திக் கொண்டிருக்கும்  அந்த ஜீவனைப் பற்றி அடுத்தக்

கடிதத்தில் விரிவாக எழுதுகிறேன். 

  

                                                                                                  உனது அன்பு

                                                                                                           ஜெய்.
                                                                                                   



 


Sunday, November 16, 2014

13.Thai Mann.

   மாலை  மணி ஐந்து ஆனதும்,விஜயன் தனது சகோதரியுடன்  அவரது

குடும்பத்தினரை சந்திக்க அவரது ஊருக்குக் கிளம்பினான்.அவனுக்கு

ஒரு விஷயம் புரியவில்லை.புரியவில்லை என்றால் புரியவே இல்லை.

அதாவது, ஏன் அக்கா குடும்பத்தார் ஒருவரும்,அவன் வந்து இவ்வளவு

நேரமாகியும்,அவனை சந்திக்க வரவில்லை  என்று அவனுக்குப்

புரியவில்லை.அதாவது புரியவே இல்லை.


   தனது  தாயிடம் காரணம் கேட்டதற்கு," அந்தி சாய்ந்ததும்,அக்காவுடன் நீ

அக்கா வீட்டிற்கு போய் எல்லோரையும் பார்த்துட்டு வாப்பா! உனக்கே

எல்லாம் புரியும்".நீண்ட பெருமூச்சுடன் அவன் தாய் எழுந்திருந்து வெளியே

போனார்.அவர் யாரையோ அழைக்கும் குரல் கேட்டது."முருகா இங்கே வா

சாமி.குதிரைக்கு தீவனம் போட்டு தண்ணி காட்டினையோ!".தன் தாயின்

பரிவான விசாரணையில் இளகிப் போனான் விஜயன்."ஆயிடிச்சு ஆத்தா!".

பரிவான விசாரணைக்கு வந்த பவ்யமான பதில் விஜயனின் மனதைத்

தென்றலாக வருடியது.அந்த பவ்யமான குரலுக்கு சொந்தக்காரனைக்

காண மனம் விழைந்தது.


   "இந்த சாமானை எல்லாம் வண்டியில் ஏத்திட்டு,அக்காவுக்கும்,தம்பிக்கும்

சேர்த்து தைரியத்தையும் ஏத்திட்டு நம்ப மாப்பிள்ளை ஐயா வீட்டுக்கு

போய்ட்டு வரணும்ப்பா! நம்ப வீட்டுக்குப்  பிள்ளையாய் பிறக்க வேண்டியவர்,

மறுப் பிள்ளையாய்,மாப்பிள்ளையாய் நம்பளை  காக்க வந்த சாமி புள்ளை !

நானும் என்னோட குடும்பமும் ஏதோ ஒரு சந்தர்பத்திலே ஏதோ ஒரு

உத்தமமான காரியம் பண்ணியிருக்கோம் போல.அதனாலதானோ

என்னமோ சாமி,தம் புள்ளையையே நம்ப வீட்டிற்கு மாப்பிள்ளையாய்

அனுப்பி வெச்சார் போல!".


    விஜயனுக்கு சுருக்கென்றது.மாமாவிற்கு அவரது பெரிய குடும்பத்தின்

பொறுப்புகளே ஏகத்திற்கு இருக்க,தானும் பொறுப்பில்லாமல்,தன்

 பொறுப்புக்களையும் சேர்த்து அவரின் பொறுப்பில் சேர்த்து விட்டது

என்றைக்கும் இல்லாமல் இன்று பெரிதும் சங்கடப் படுத்தியது.


   மாமாவின் உருவம் கண் முன்னால் வந்து நின்றது.கம்பீரமும்கண்ணியமும்,

எதார்த்தமான பேச்சும்,அவரது  நடை,உடை,பாவனை எல்லாம்.அவரை

ஒரு முறை சந்தித்து விட்டால்,எவருடைய எதிர்மறை எண்ணங்களும்

ஓரங்கட்டிவிடும்.அளவான,அர்த்தமுள்ள பேச்சு.அடுத்தவரது பேச்சும்,

அளவானதாக,அர்த்தமுள்ளதாக அமைய  வைக்கும் சாதுர்யம்.விஜயனுக்கே

அவரை சந்திக்க ஒருவிதமான தயக்கம் அவனுள் உருவாகிக் கொண்டு

இருந்தது.


     இருந்தாலும், சில விஷயங்கள் தவிர்க்க முடியாதவை.தவிர்க்கவும்

கூடாதவை.நேருக்கு நேர் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்

இருப்பவை.எனவே,விஜயன் ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு,

தன்  தாயிடம் விடைப் பெற்றுக் கொண்டு தன் நேசமான தமக்கையுடன்,

அவரது ஊருக்கு புறப்பட்டுச் சென்றான்.ஆனால்  தான்,தன் தமக்கையின்

ஊருக்குசென்று வர உத்தேசித்ததிலிருந்து,தான் தாயின் நடவடிக்கைகளிலோ,

தன் தமக்கையின் நடவடிக்கைகளிலோ ஒரு சுரத்தே இல்லாமலிருப்பதை

விஜயன் கவனித்தான்.அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.


     வண்டியில் ஏறி அமர்ந்ததும்,தன் தமக்கையின் முன்னிலையில்

வண்டியை செலுத்தும் முருகனிடம்," முருகா ! பெரியம்மாவும்,

சின்னம்மாவும் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறார்கள்?உனக்கு ஏதாவது

விஷயம் தெரியுமா?" என்றுக் கேட்டான். வண்டியின் கடிவாளத்தை பிடித்து

அமர்ந்து,குதிரைகளை தட்டிக் கொடுத்து,அவற்றை பயணத்திற்கு தயார்ப்

படுத்திக் கொண்டிருந்த முருகன்,ஒரு நிமிடம் வண்டியின் உள்புறம் திரும்பி

விஜயனின் தமக்கையை பார்த்தான்.அவர் மெளனமாக அமர்ந்திருந்தார்.பின்பு

அவன் விஜயன் பக்கம் திரும்பி,"அங்கே போனபிறகு உங்களுக்கே

புரியுமுங்க ஐயா!" என்றவன்,மறுபடியும் சின்னம்மா பக்கம் திரும்பி,

"போலாங்களா அம்மா!" என்று உத்தரவு வாங்கியபின்,குதிரைகளை

பாந்தமாக தட்டி விட்டான்.


 


                                                                                                      தொடரும்...............